நடிகை ஜெயமாலா மீதான குற்றப்பத்திரிகை ரத்து
சபரிமலை அய்யப்பசாமி கோவிலில் நடந்த தேவபிரசன்னம் தொடர்பான வழக்கில் போலீசார் நடிகை ஜெயமாலா உள்பட 3 பேர் மீது தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை கேரள ஐகோர்ட்டு நேற்று ரத்து செய்தது.
புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பசாமி கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு ஜுன் மாதம் பிரபல ஜோதிடர் உண்ணிகிருஷ்ண பணிக்கர் தலைமையிலான குழுவினர் தேவபிரசன்னம் என்ற ஜோதிட நிகழ்ச்சியை 4 நாட்கள் நடத்தினர். அதில், கோவில் கருவறையில் ஒரு பெண் நுழைந்ததற்கான அறிகுறிகள் தெரிந்ததாக ஜோதிடர் உண்ணிகிருஷ்ண பணிக்கர் கூறினார்.
சபரிமலை கோவில் ஆசாரப்படி, 10-வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜோதிடர் கூறிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வாறு ஜோதிடர் பணிக்கர் கூறியதை தொடர்ந்து, பரபல கன்னட நடிகை ஜெயமாலா, கடந்த 1987-ம் ஆண்டு சபரிமலை கோவில் கருவறைக்குள் நுழைந்து சாமி சிலையை தொட்டு வணங்கியதாக கோவில் அலுவலகத்துக்கு `பேக்ஸ்` மூலம் கடிதம் அனுப்பினார். அதைத் தொடர்ந்து, கேரள போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், ஜோதிடர் உண்ணிகிருஷ்ண பணிக்கருக்கு பெயரும், புகழும் கிடைப்பதற்காக ஜோதிடரும், நடிகை ஜெயமாலாவும் இணைந்து நாடகமாடியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, ஜோதிடர் உண்ணிகிருஷ்ண பணிக்கர், அவரது உதவியாளர் ரெகுபதி மற்றும் நடிகை ஜெயமாலா ஆகியோர் மீது போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பக்தர்களின் மத உணர்வை புண்படுத்தியதாகவும், ரகசியமாக திட்டமிட்டு சதி செய்ததாகவும் அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அந்த குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக் கோரி உண்ணிகிருஷ்ண பணிக்கர், அவரது உதவியாளர் ரெகுபதி, நடிகை ஜெயமாலா ஆகிய 3 பேரும் கொச்சி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை பரிசீலனை செய்த ஐகோர்ட்டு நீதிபதி, வழக்கை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார்.
மேலும், சம்பந்தப்பட்ட 3 பேர் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்றும் கோர்ட்டு கூறியது.