பாகிஸ்தானில் இருந்து மாற்று விமானம் மூலம் டில்லி வந்தனர் ஏர்இந்தியா பயணிகள்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர்இந்தியா விமானத்தில் இருந்த பயணிகள் மாற்று விமானம் மூலம் டில்லி திரும்பினர்.
அபுதாபியிலிருந்து புதுடெல்லிக்கு 08.07.2012 அன்று புறப்பட்டு வந்த ஏர் இந்தியா விமானத்தில் 8 விமானச் சிப்பந்திகள் உட்பட 122 பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். புதுடெல்லியில் தரையிறங்கும் சமயம் விமானத்தில் இயந்திரக் கோளாறு விமானியால் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த விமானம் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்சாகிப் விமானநிலையத்தில் 09.07.2012 அன்று விடியற்காலை 3.30 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து அறிந்த மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம் உடனடியாக இந்தியாவிலிருந்து மாற்று விமானத்தை அனுப்ப உத்தரவிட்டது. புதுடெல்லிக்கு வரும் பயணிகளை ஏற்றிக்கொண்டு வருவதற்காக ஏர் இந்தியா மாற்று விமானத்தை பாகிஸ்தானுக்கு அனுப்பியது. அந்த விமானம் இன்று மதியம் 1.30 மணியளவில் அங்கு தரையிறங்கியது. பின்னர் மாற்று விமானம் மூலம் 122 பயணிகள் டில்லி திரும்பினர்.