அதிமுக- பா.ம.கவினர் மோதல்: அமைச்சர் கார் முற்றுகை
திண்டிவனம் காவேரிபாக்கம் அரசு பள்ளி வளாகத்தில் 5 பேர் நேற்று மாலை மது குடித்து கொண்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வார்டுகவுன் சிலரும், பா.ம.க. நகர செயலாளருமான ஜெயராஜ், அவர்களிடம் பள்ளி வளாகத்தில் அமர்ந்து எப்படி மது குடிக்கலாம் என்று அவர்களை கண்டித்தார்.
இதானல் அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு மதுகுடித்து கொண்டிருந் 5 பேரும் சேர்ந்து ஜெயராஜை தாக்கினார்கள். இதில் அவர் காயம் அடைந்தார். உடனடியாக அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதையறிந்த பா.ம.க.வினர் கோபம் அடைந்தனர். ஜெயராஜ் தாக்கப்பட்டதற்கு அ.தி.மு.க.வினரே காரணம் என்று கருதி அவர்கள் அந்த பகுதியை சேர்ந்த அ.தி.
மு.க. வை சேர்ந்த தீபக் என்பவரின் வீட்டை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அ.தி.மு.க. வினர் திரண்டு ஜெயராஜ் வீட்டுக்கு சென்று அவரது வீட்டை அடித்து உடைத்து சூறையாடியதாக தெரிகிறது. அ.தி.மு.க. நகர மன்ற தலைவர் கே.வி. வெங்கடேசன்,
ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் திண்டிவனம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டார்கள். உடனே பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமையில் பா.ம.க. தொண்டர்களும் திரண்டு வந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இரு தரப்பினரும் ஒரே நேரத்தில் அங்கு திரண்டதால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியது. பா.ம.க.வினர் அங்கு சாலை மறியல் செய்ய முயன்றனர். துணை போலீஸ் சூப்பிரண்டு குப்புசாமி அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அந்த நேரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் காரில் அந்த வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
பா.ம.க.வினர் அவரது காரை வழிமறித்து முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் அமைச்சர் அங்கிருந்து புறப்பட்ட சென்றார்.
அமைச்சர் கார் மறிக்கப்பட்டதால் கோபம் அடைந்த அ.தி.மு.க.வினர் அந்த பகுதியில் இருந்த பா.ம.க. அலுவலகத்தை சூறையாடினார்கள். தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் திண்டிவனம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து பா.ம.க.வை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.