முழு மனதுடன் விலகுகிறேன்: புதிய முதல்வருக்கு ஒத்துழைப்பு அளிப்பேன்: சதானந்த கவுடா
டெல்லியில் பாஜக தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் கர்நாடக முதல் அமைச்சர் பதவியில் இருந்து சதானந்தா கவுடா இன்று (08.07.2012) ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை பாஜக தலைவர் நிதின் கட்காரியிடம் அவர் அளித்துள்ளார்.
கட்சியின் முடிவை ஏற்று முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், பெங்களூர் திரும்பியதும் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுப்பேன் என்றும் சதானந்த கவுடா கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், முதல் அமைச்சர் பதவியில் இருந்து முழு மனதுடன் விலகுகிறேன். அரசியல் காரணங்களை கருத்தில் கொண்டு மத்திய தலைவர்கள் மாற்றம் செய்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி எனக்கு இதுவரை பல்வேறு வாய்ப்புகளை அளித்துள்ளது. கட்சியின் மாநிலத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். கர்நாடக முதல் அமைச்சராக 11 மாதம் 5 நாட்கள் பணியாற்றி உள்ளேன். கர்நாடகாவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படவுள்ளார். புதிய முதல் அமைச்சர் சிறப்பாக செயல்பட எனது முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன் என்றார்.