ஓசூரில் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க வந்த
தொழிலாளர்களால் பரபரப்பு
ஓசூர் குளோபல் பார்மாடெக் மருந்து தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், தொழிற் சாலை நிர்வாகத்துக்கும் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், குறிப்பிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களை பணியிடமாற்றம் செய்ததை திரும்ப பெற வேண்டும். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 50 பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறையினர் பல்வேறு கட்டங்களில் தொழிற்சாலை நிர்வாகம், தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் தங்கள் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றவில்லை என்று கூறி 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
தகவல் அறிந்த கிருஷ்ணகி டி.எஸ்.பி., சந்தனபாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், எல்லப்பன், கண்ணையன் மற்றும் போலீஸார் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயிலான தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் என்பதால் கூட்டத்துக்கு வந்தவர்களை சோதனை செய்த பின் போலீஸார் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய அனுமதித்ததனர்.
ஒரு கட்டத்தில் தொழிலாளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க கலெக்டர் அலுவலத்துக்குள் நுழைய பார்த்தனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஐந்து பேர்களை மட்டும் கலெக்டருடன் பேச அனுமதிப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இதனையடுத்து தொழிலாளர்கள் நான்கு பேர் கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., பிரகாசத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் லோக் அதாலத் மூலம் பிரச்னையை தீர்க்க தொழிலாளர்கள் ஒப்புக்கொண்டு தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்காமல் திரும்ப சென்றனர். இதனால் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.