`தட்கல்' டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றி அமைப்பு
`தட்கல்' டிக்கெட் முன்பதிவு வருகிற 10-ந் தேதி முதல் காலை 8 மணிக்குப் பதிலாக, 10 மணிக்கு தொடங்கும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
தற்போது ரெயில்களில் அவசரமாக பயணம் செய்ய வேண்டியவர்களும், முன்பதிவில் டிக்கெட் கிடைக்காதவர்களும் தாங்கள் பயணம் செய்வதற்குரிய நாளுக்கு ஒரு நாள் முன்னதாக `தட்கல்' முறையில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் இந்த தட்கல் முன்பதிவுக்காக பயணிகள் அதிகாலையிலேயே ரெயில் நிலையங்களில் நீண்ட கிï வரிசையில் காத்து இருக்க வேண்டியது உள்ளது.
இந்த தட்கல் முன்பதிவில் பலர் முறைகேடாக டிக்கெட் பெற்று கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்று, கடும் லாபம் சம்பாதிக்கிறார்கள். இது தவிர, தட்கல் முறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் ரெயில்வே நிர்வாகத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
பயணிகளின் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையிலும், முறைகேடுகளை தடுக்கும் வகையிலும் தட்கல் முன்பதிவு நேரத்தை ரெயில்வே நிர்வாகம் மாற்றி அமைத்து உள்ளது. அதன்படி, இனிமேல் காலை 8 மணிக்குப் பதில் காலை 10 மணிக்கு தட்கல் முன்பதிவு தொடங்கும்.
அடுத்த (ஜுலை) மாதம் 10-ந் தேதி முதல் இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது.
ஆனால், ஐ.ஆர்.சி.டி.சி. போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் காலை 10 மணிக்கு தட்கல் முன்பதிவு செய்ய முடியாது. பகல் 12 மணி முதல்தான் அவர்கள் தட்கல் முன்பதிவுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், முறைகேடுகளை தடுக்கும் வகையில், தட்கல் முன்பதிவுக்கு தனியாக கவுண்ட்டர் திறக்கப்படும். அந்த கவுண்ட்டரில், டிக்கெட் எடுப்பவர்களை கண்காணிக்க ரகசிய கேமராவும் (சி.சி.டி.வி.) பொருத்தப்படும். தட்கல் முன்பதிவு கவுண்ட்டரில் பணியாற்றச் செல்லும் ஊழியர்கள், `செல்போன்' கொண்டு செல்ல தடை விதிக்கப்படும்.
இந்த புதிய முறைகள் (தனி கவுண்ட்டர், ரகசிய கேமரா, ஊழியர்களுக்கு செல்போன் தடை) ஆகியவை எப்போது முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட வில்லை. ஆனால், விரைவில் அமலுக்கு வரும் என்று ரெயில்வே அறிவித்து உள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் 2 ஆயிரத்து 677 ரெயில்களுக்கு தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
கடந்த ஆண்டு (2011-12) மட்டும் தட்கல் முன்பதிவு மூலம் ரெயில்வேக்கு ரூ.847 கோடி வருமானம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.