மாணவியரிடம் ஆசிரியர் "சில்மிஷம்' ஊராட்சி பள்ளியில் பெற்றோர் முற்றுகை
ஆசிரியர் ஒருவர், மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால், ஆவேசமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த வடுகப்பட்டியில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி தலைமையாசிரியராக கிருஷ்ணவேணியும், ஏழு பெண் ஆசிரியர்களும், சத்யபிரபு (33) என்ற ஒரு ஆண் ஆசிரியர் உள்பட, எட்டு பேர் பணியாற்றி வருகின்றனர்.
அதில், ஆசிரியர் சத்யபிரபு, பள்ளி மாணவியரிடம் சில்மிஷம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதாகவும் புகார் எழுந்தது. அதே போல், பெண் ஆசிரியர்களிடம் இரட்டை அர்த்ததில் பேசி, முகம் சுளிக்கச் செய்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இது குறித்து அறிந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு பலமுறை புகார் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பெற்றோர், பொதுமக்கள், 300க்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டு வந்து, பள்ளியை முற்றுகையிட்டனர். அதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சத்யபிரபு வந்த காரை தடுத்து நிறுத்தி, அவரை வெளியே வரும்படி கூச்சலிட்டனர். தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மக்களை சமரசம் செய்து, ஆசிரியருடன் காரை மீட்டு பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து, சில்மிஷ ஆசிரியரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள், பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த, ஏ.இ.இ.ஓ., ஆசிரியர் சத்யபிரபு மற்றும் பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தினார். அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், உரிய நடவடிக்கை எடுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தார்.அதனால், நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.