மீன் வளத்தை கொள்ளையடிப்பதாக தமிழக மீனவர்கள் மீது ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார்: கலைஞர்
மீன் வளத்தை கொள்ளையடிப்பதாக தமிழக மீனவர்கள் மீது ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார். எனவே, தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேள்வி: பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசுகையில், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே இந்திய மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்தால் இருபதாண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்பதைப் போல சொல்லியிருக்கிறாரே?.
பதில்: தமிழக மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கையின் கடல் பரப்புக்கு வருவதாகவும் சிறிய மீன் குஞ்சுகளையும் பிடிக்க உதவும் இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் வளத்தையும், அரிய கடல் செல்வங்களையும் கொள்ளையிடுவதாகவும் ராஜபக்சே குற்றம் சாட்டியிருக்கிறார். இந்தியாவின் பெயரையோ, தமிழ்நாட்டின் பெயரையோ அவர் நேரடியாகக் கூறவில்லை என்றாலும், இலங்கைக்கு அருகில் வடக்கில் உள்ள பக்கத்து நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் என்று அடையாளம் காட்டியிருக்கிறார்.
இலங்கைக் கடல் பரப்பில் மீன் பிடிப்பதாக தமிழக மீனவர்களைக் கைது செய்தாலே இனி இந்தச் சட்டப்படி அவர்களைத் தொடர்ந்து இருபதாண்டுகளுக்கு சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர் என்பதை அவருடைய இந்தப் பேச்சு உணர்த்துகிறது. எனவே இதுகுறித்து மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.