உண்ணாவிரதத்தை கைவிட விவேக் மறுப்பு
கடலூர் மத்திய சிறைக்குள் மாவோயிஸ்ட் தீவிரவாதி நேற்று 14 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார். இதனை முடிவுக்கு கொண்டுவர சிறைத்துறை டி.ஜி.ஜி, மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையை அவர் ஏற்க மறுத்துவிட்டதால் அவர் மீது தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. வலுக்கட்டாயமாக அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் விவேக். பெரியகுளம் வழக்கு ஒன்றில் பல ஆண்டுகளாக தலைமறைவு குற்றவாளியாக இருந்த இவர் சென்னையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் விவேக் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 6ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறை அலுவலர்கள் கூறியதை அவர் ஏற்க மறுத்து தண்ணீர் மட்டும் அருந்தி உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அவரின் உடல்நிலை தினமும் டாக்டர்களால் பரிசோதிக்கப்பட்டு வந்தது. பெரியகுளம் நீதிமன்றம் அவரின் நீதிமன்ற காவலை 22 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையில் அவர் தன்னை வேறு சிறைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்நிலையில் நேற்று 14 வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். மருத்துவ பணிகள் இணை இயக்குநர் டாக்டர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று காலை அவரின் உடல்நிலையை பரிசோதித்தனர். அதில் அவர் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்திருந்தது. ரத்த அழுத்தமும் குறைவாக இருந்தது. இதனால் அவர் உடல்நிலை அபாய கட்டத்தை நோக்கி செல்வதாக டாக்டர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி துரைசாமி, மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ ஆகியோர் விவேக்குடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறையில் தரமான உணவு அளிக்க வேண்டும். சர்க்கரை, இதய நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை, மருந்து மாத்திரைகள் அளிக்கப்பட வேண்டும்.
அரசு உத்தரவின் படி சிறைக்குள் காயின் போன் வைக்கவும், இரவு காவலர்களின் படியை உயர்த்தி தர வேண்டும். 14 வருடம் ஆயுள்தண்டனை முடித்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சிறையில் கைதிகள் நடைபயிற்சி செய்ய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவேக் தெரிவித்தார்.
அவற்றில் பல அரசு முடிவு செய்ய வேண்டியுள்ளது என்றும் இதர கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என டி.ஐ.ஜி கூறியதாக தெரிகிறது. எழுத்து பூர்வமாக எழுதி தரவேண்டும். இல்லை என்றால் உண்ணாவிரதம் தொடரும் என விவேக் கூறியதால் பேச்சுவார்த்தை முடிவு பெற்றது.
சிறை அலுவலர் குப்பன் கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் விவேக் மீது தற்கொலைக்கு முயற்சிப்பதாக புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் சிறை விதிமுறைகளின் படி விவேக்கின் உயிரை காப்பாற்றும் நடவடிக்கையாக அவருக்கு வலுக்கட்டாயமாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அவரின் அறை 24 மணி நேரமும் சிறை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டுள்ளது. சிறையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறை விதிமுறைகளின் படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன என்று மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ தெரிவித்தார்.