|
|
இந்து சமயத்தின் ஆறு பிரிவுகளில், சக்தி வழிபாட்டு முறையில்தான் அதிக அளவில் மந்திர தந்திரங்கள் கையாளப் படுகின்றன. அவ்வகை வழிபாட்டுக் கென்று சிறப்பான ஆலயங்களும் உள்ளன. அவற்றிலொன்று காமாக்யா தேவி கோவில். அஸ்ஸாம் மாநிலத் தலைநகர் கௌஹாத்தி அருகேயுள்ள நிலாஞ்சல் என்னும் குன்றின்மீது இவ்வாலயம் அமைந்துள்ளது.தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட சதிதேவி நெருப்பில் விழுந்து உயிர் துறக்க, இறந்த மனைவியின் உடலை சுமந்துகொண்டு கடுங்கோபத்துடன் ஊழித் தாண்டவம் ஆடினார் சிவபெருமான். இதனால் உலகெங்கும் இருள் சூழ்ந்து அழியும் நிலை உருவாக, தேவர்களும் முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். விஷ்ணு பகவான் தன் சக்கராயுதத்தால் சதிதேவியின் உடலை 51 துண்டுகளாக அறுத்து பூமியில் வீழ்த்தினார். அந்த உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்பட்டு, அவை புனிதமாகப் போற்றி வணங்கப்பட்டு வருகின்றன. சதிதேவியின் யோனிப்பகுதி விழுந்த இடமாக காமாக்யா போற்றப்பட்டு, 51 சக்தி பீடங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.முற்காலத்தில் இந்தப் பகுதி காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம் என்ற பெயர்களில் விளங்கியது.இரண்யாட்சன் பூமியை அபகரித்துச் சென்று பாதாளத்தில் ஒளித்து வைத்தபோது, மகாவிஷ்ணு ஸ்வேத வராக அவதாரம் எடுத்து பூமாதேவியை மீட்டு வந்தார். அந்த வராக வடிவத்திலேயே பூதேவியை மணந்து இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தார். அப்போது அவர்களுக்குப் பிறந்த மகனே நரகாசுரன். மகாவிஷ்ணு நரகாசுரனை பிரக்ஜோதிஷபுரத்துக்கு அரசனாக்கி வைகுந்தம் புறப்பட்டார். அப்போது அவர் பூமாதேவியிடம், "இவன் உலகத்துக்கு மிகவும் கெடுதல்கள் புரிவான்; அதனால் கொல்லவும் படுவான்' என்று எச்சரித்தார். அப்போது பூமாதேவி, "அப்படியாயின் என் கைகளால்தான் இவன் மரணம் அடைவான் என்னும் வரத்தைத் தாருங்கள்' என்று கேட்க, மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரம் தந்து வைகுந்தம் சேர்ந்தார்.பல வரங்களைப் பெற்ற நரகாசுரன் அனைத்துலகையும் அடிமைப்படுத்தி பல்வேறு கொடுமைகள் புரிந்து வந்தான். பல யுகங்கள் கடந்தன. சக்தி தேவியின் மாயவடிவமான காமாக்யா தேவியை வழிபட்டு மேலும் பல வரங்களைப் பெற்றான் நரகாசுரன்.இந்த நிலையில் மகாவிஷ்ணு ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்திருந்தார். அப்போது தேவர்கள் நரகாசுரனை அழிக்குமாறு கிருஷ்ணரை வேண்ட, அவரும் மனைவி சத்யபாமாவுடன் போருக்குப் புறப்பட்டார். கடும்போர் நடந்த நிலையில், வரத்தின் காரணமாக கிருஷ்ண பகவானால் நரகாசுரனைக் கொல்ல முடியவில்லை. அப்போது நரகாசுரன் மிகவும் கேவலமாகப் பேச, கோபம் கொண்ட சத்யபாமா வில்லை தன் கையில் எடுத்தாள். கிருஷ்ணர் அஸ்திரத்தைத் தர, நரகாசுரன் தன் மகன்தான் என்பதை அறியாத பூமாதேவியின் அம்சமான சத்யபாமா அம்பை எய்தாள். நரகாசுரன் மடிந்தான்.இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்த பகுதி இதுதான் என்று சொல்லப்படுகிறது. நரகாசுரனுக்கு வரங்கள் பல தந்து, பின் அவன்மேல் கோபம் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டிருந்த காமாக்யா தேவி, அசுரனின் வதத்திற்குப்பின் மீண்டும் வந்து கோவில் கொண்டாள் என்கிறார்கள்.இவ்வாலயத்தில் சுயம்புவாக அமைந்த யோனி வடிவப் பாறையே தேவியாக வழிபடப்படுகிறது. அதன் அருகிலிருந்து இயற்கையாக ஊறிவரும் நீரே பக்தர்களுக்கு அபிஷேக தீர்த்தமாக வழங்கப்படுகிறது. பில்லி, சூன்யம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர், வசதிகள் பல இருந்தும் நிம்மதியற்றுத் தவிப்போர், மனநிலை பாதிக் கப்பட்டவர்கள்- இன்னும் இதுபோன்ற பல பிரச்சினைகளில் சிக்கித் தவிப்போர் இங்கு வந்து வழிபட்டு நலம் பெறுகின்றனர்.வசந்த காலத்தின்போது- ஆண்டுக்கு மூன்று நாட்கள் இவ்வாலயம் மூடப்படுகிறது. காரணம், அந்த நாட்கள் தேவி விலக்காகி இருக்கும் நாட்களாம். இந்த நாட்களில் தேவி பீடத்திலிருந்து இயற்கையாக வரும் நீரூற்று செந்நிறத்தில் வருவது அதிசயம்!இந்த மூன்று நாட்களில் பக்தர்களுக்கு ஆலயம் செல்ல அனுமதி இல்லையென்றாலும், ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் யந்திர- மந்திர- தந்திர சாதனை செய்யும் யோகிகள் ஒன்றுகூடி வழிபாடு செய்கிறார்கள். இதனால் அவர்களின் சக்தி அதிகரிக்கிறதாம்.இவ்வாலயத்தில் பைரவர், கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுள்களின் சந்நிதிகளும் உள்ளன.சென்னையிலிருந்து கொல்கத்தா வழியாக கௌஹாத்தி சென்று காமாக்யா கோவிலை தரிசிக்கலாம்.
|
|
|
Name |
: |
arumugam |
Date & Time |
: |
7/24/2012 12:29:13 PM |
-----------------------------------------------------------------------------------------------------
வெரி உசெபுல் இந்பொர்மதிஒந் -----------------------------------------------------------------------------------------------------
|
|
|