|
|

மஹ்தொகத்
அந்த பசுமையான, அழகான பூந்தோட்டம் (சுவர் கள் சேற்றையும் வைக்கோலையும் கொண்டு அமைக்கப்பட்டவை) ஆற்றைப் பார்த்துக் கொண்டு இருந்தது. அதற்குப் பின்னால் கிராமம். நதி ஓடிக்கொண்டிருந்த பகுதியில் சுவர் இல்லை. நதிதான் எல்லை. எல்லையில் இனிப்பும் கசப்பும் உள்ள செர்ரிப்பழங்கள் ஏராளமாக இருந்தன. மூன்று அறைகளைக் கொண்ட ஒரு வீடு இருந்தது. (பாதி கிராமிய பாணியிலும் பாதி நாகரீக முறை யிலும் அமைந்தது). வீட்டின் முன் பகுதியில் ஒரு குளம் காணப்பட் டது. குளத்தில் நிறைய அழுக் கும் தவளைகளும்... குளத் தைச் சுற்றிலும் சரளைக் கற்கள் பரவிக் கிடந்தன. இங்குமங்குமாக மூங் கில்கள் வளர்ந்திருந் தன. மாலை நேரங் களில் அந்த மூங்கில்களின் இளம் பச்சை நிறங்கள் குளத்தின் அடர்த்தியான பச்சை நிறத்துடன் மவுனப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தன. அது மஹ்தொகத்தை மனதில் அமைதி இல்லாமல் ஆக்கிக் கொண்டிருந்தது. அவளால் சண்டைகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. காரணம் அது தான். ஒரு சாதாரண பெண்... இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும் ஒன்றோடொன்று அனுசரித்துக் கொண்டு வாழ வேண்டுமென்று அவள் விரும்புகிறாள்."என்ன ஒரு பிரகாசமான நிறம்! எனினும்...'அவள் சிந்தித்தாள்.குளத்தின் கரையிலிருந்த ஒரு மரத்தினடியில் நீளமான ஒரு பெஞ்ச் இருந்தது. அதன் சிதிலமடைந்த நிலையைப் பார்த்தால், எங்கே அது சரிந்து இப்போது ஆற்றுக்குள் விழுந்துவிடுமோ என்று அதைப் பார்க்கும்போது தோன்றும். அந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டுதான் அவள் ஆற்றின் நீருக்கும் மூங்கில்களின் தோற்றங்களுக்குமிடையே நடந்து கொண்டிருக்கும் சண்டையைப் பார்த்துக் கொண்டிருப்பாள். வானத்தின் நீல நிறம் (சாயங்கால வேளைகளில் பச்சை நிறத்திற்கு அடர்த்தி அதிகமாக இருக்கும்) சுத்தமான ஒரு நீதிபதியைப்போல அவளுக்குத் தோன்றும்.இளவேனிற் காலத்தில் மஹ்தொகத் எதையாவது தைத்துக் கொண்டோ, ஃப்ரெஞ்ச் படிப்பதைப் பற்றியோ, எங்காவது பயணம் போவதைப் பற்றியோ நினைத்துக் கொண்டோ இருப்பாள். காரணம்- குளிர்காலத்தின்போதுதான் சுத்தமான, குளிர்ந்த காற்றை சுவாசிக்க முடியும். கோடை காலத்தில் அது எதையும் பார்க்கவே முடியாது. ஏராளமான புகையும், பாய்ந்து போய்க்கொண்டிருக்கும் கார்களும் மனிதர்களும், சுழன்று அடித்துக் கொண்டிருக்கும் கார்மேகங்களைப் போன்ற தூசிப் படலங்களும், பிரகாசித்துக் கொண்டிருக்கும் சூரியனுக்குக் கீழே சோகத்துடன் காணப்படும் சாளரங்களும்தான் அப்போது கண்களில் படும்.நாசம் பிடித்த விஷயம்! என்ன மனிதர்கள்! இந்த நாட்டின் வேதனைகளுக்கு சாளரங்கள் எந்தச் சமயத்திலும் ஒரு தீர்வாக இருக்கப் போவதில்லை. அவர்கள் ஏன் அதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கி றார்கள்?மஹ்தொகத் அதைப் பற்றி சிந்தித்துப் பார்த்தாள்.இந்தப் பூந்தோட்டத்திற்கு வரவேண்டும்... பிறகு குழந்தைகளின் தொல்லைகள் நிறைந்த மொழிகளைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.... அவளுடைய மூத்த சகோதரன் ஹொஸாங்கின் ஒரே வற்புறுத்தல் அதுதான். பகல் முழுவதும் செர்ரிப் பழங்களைத் தின்று கொண்டு இங்குமங்குமாக அலைந்து கொண்டிருப்பான். இரவில் எந்த நேரமாக இருந்தாலும், கட்டித் தயிர் சாப்பிடுவான்."கட்டித் தயிர் கிராமிய உணவு.'"மிகவும் சுவையானது.'"குழந்தைகளைப் பார்த்தாய் அல்லவா? அதே நேரத்தில்- சாப்பாட்டுக்கு ஏதாவது குறை இருக்கிறதா? அவர்கள் நன்றாக சாப்பிட்டு வளரட்டும்...' அவளுடைய உம்மா கூறுவாள்.பள்ளிக்கூட ஆசிரியையாக இருந்த காலத்தில் இஹ்திஸாமி ஆசிரியர் அவளிடம் கூறுவார்:"பர்ஹானி டீச்சர்... இந்த நோட்டுப் புத்தகத்தை அங்கே வையுங்க... பர்ஹானி டீச்சர், அந்த மணியை அடிங்க... பர்ஹானி டீச்சர், ஸொக்ராவிடம் ஒரு விஷயம் கேட்கட்டுமா? என்ன வேண்டும்? எதுவுமே புரியவில்லை.'அவளை ஒவ்வொரு காரியத்தையும் செய்ய வைப்பது என்பது அவருக்கு விருப்பமான விஷயமாக இருந்தது. அது இருக்கட்டும். பரவாயில்லை. ஆனால், இன்னொரு நாள் இஹ்திஸாமி ஆசிரியர் அவளிடம் கூறினார். "பர்ஹானி டீச்சர், இன்று இரவு ஒரு திரைப்படம் பார்ப்பதற்கு வருகிறீர்களா? நல்ல ஒரு திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.'மஹ்தொகத் வெளிறிப் போய்விட்டாள். இப்படி ஒரு அவமானச் செயலுக்கு என்ன பதில் கூறுவது என்றே அவளுக்குத் தெரியவில்லை. அவர் தன்னைப் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்? அவருடைய மனதில் எப்படிப்பட்ட நினைப்பு இருக்கிறது! அந்த ஆசிரியர் தன்னிடம் பேசும்போது புன்னகைப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அவர் என்னவோ மனதில் கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறார். அவர் ஏதோ தவறான எண்ணத்தில் இருக்கிறார். தான் யார் என்பதைக் காட்டியே ஆக வேண்டும். மஹ்தொகத் பள்ளிக்கூடத்திற்குச் செல்வதையே அத்துடன் நிறுத்திக் கொண்டாள். அந்த ஆசிரியர் வரலாற்று ஆசிரியையான அதாஈ டீச்சரைத் திருமணம் செய்து கொண்டுவிட்டதாக அடுத்த வருடமே அவளுக்கு செய்தி தெரிய வந்தது. மனதிற்குள் அதிர்ச்சியடைந்துவிட்டாள்."என்ன இருந்தாலும்... உன்னுடைய அன்பான வாப்பா விரும்புகிற அளவிற்கு பணம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார் அல்லவா?'அப்படியென்றால் அதுதான் விஷயம்... அடுத்த குளிர்காலம் முழுவதும் அவள் தைத்துக் கொண்டு நேரத்தைப் போக்கினாள். ஹொஸாங்கின் மூத்த இரண்டு பிள்ளைகளுக்குத்தான் அவற்றை அவள் தைத்துக் கொண்டிருந்தாள். குழந்தைகள் இப்போதுதான் நடக்க ஆரம்பித்திருந்தன. பத்து வருடங்கள் கடந்தபிறகு, அவள் மீண்டும் ஐந்து பிள்ளைகளுக்கு ஆடைகள் தைத்துக் கொடுத்தாள்."இவ்வளவு பிள்ளைகள் எதற்கு? புரியவே இல்லை....'அப்போது ஹொஸாங் கூறுவான்: "தேவை என்று நினைத்தா நடக்கிறது? நான் என்ன செய்வது?'"சரிதான்... அவன் என்ன செய்வான்?' மஹ்தொகத் மனதிற்குள் நினைப்பாள்.சமீபத்தில் ஜூலி ஆன்ட்ரூஸ் நடித்த ஒரு திரைப்படத்தை அவள் பார்த்தாள். கணவன் ஆஸ்ட்ரியாவைச் சேர்ந்தவன். மொத்தம் ஏழு பிள்ளைகள். விசில் அடித்துக் கொண்டே அவன் பிள்ளைகளை இங்குமங்குமாக விரட்டிக் கொண்டு இருப்பான். இறுதியில் அவன் ஜூலியை திருமணம் செய்து கொண்டான். அவள் கன்யாஸ்த்ரீயாக ஆகவேண்டும் என்று மடத்தைத் தேடிச் சென்றவள். எட்டாவது குழந்தை வயிற்றில் இருந்தபோதுதான், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதுதான் நல்லது என்று தோன்றுகிறது. குறிப்பாக- ஜெர்மன்காரர்கள் வந்து, காரியங்கள் அனைத் தும் நொடி நேரத்தில் நடந்தபோது..."நானும் ஜூலியைப்போலவேதான்...' அவள் தன் மனதில் நினைத்தாள்.அவள் கூறியதென்னவோ உண்மைதான். அவளும் ஜூலியைப் போலவேதான்... கால் ஒடிந்த ஒரு எறும்பைக் கண்டுவிட்டால் போதும், அவள் கண்கலங்கி விடுவாள். தெருவில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் சொறி நாய்க்கு நான்கு முறை அவள் உணவு கொடுத்திருக்கிறாள். தன்னிடம் புத்தம் புதிதாக இருந்த ஒரே மேலாடையைக் கொண்டு போய் பள்ளிக்கூட காவலாளிக்கு அவள் கொடுத்தாள். பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏழைகளின் நிகழ்ச்சியொன்றுக்கு கிலோ கணக்கில் இனிப்பு வாங்கிக் கொண்டுபோய் அனாதைகளுக்கு என்று கூறி கொடுத்தாள்."எவ்வளவு நல்ல குழந்தைகள்!' மஹ்தொகத் மனதிற்குள் நினைத்தாள்.அவர்களில் சிலரைத் தத்தெடுத்து தன்னுடைய சொந்தக் குழந்தைகளைப்போல நினைத்து காப்பாற்றி வளர்க்க வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். அதில் என்ன தவறு இருக்கிறது? அருமையான ஆடைகளை அணிந்து, மூக்கில் இருந்து சளி ஒழுகாமல் நடக்கலாம். "மலம் கழிக்க வேண்டும்... மலம் கழிக்க வேண்டும்' என்று சத்தம் போட்டுக் கூறாமல் இருப்பார்கள்."அதனால் என்ன பயன்?'அது ஒரு மிகப் பெரிய கேள்விதான். சில நேரங்களில் அரசாங் கம் வானொலி மூலமாகவும் தொலைக்காட்சியின் வழியாகவும் அறிவிப்பதைக் கேட்கலாம்- அனாதைகளான குழந்தைகளின் விஷயத்தில் ஏதாவது செய்ய வேண்டுமென்று...அரசாங்கமும் மஹ்தொகத்தும்- இருவருமே குழந்தைகளின் விஷயத்தில் மனதில் கவலைப்படுபவர்கள்தான். ஓராயிரம் கைகள் இருந்தால், வாரத்தில் ஐந்நூறு ஸ்வெட்டர்களைத் தைத்துக் கொடுத்துவிடலாம். இரண்டு கைகளைக் கொண்டு ஒரு ஸ்வெட்டர் வீதம் மொத்தத்தில் ஐந்நூறு ஸ்வெட்டர்கள்.ஆனால், ஒரு ஆளுக்கு ஆயிரம் கைகள் கிடைக்காது அல்லவா? குளிர்காலத்தில், மாலை நேரங்களில் நடந்து செல்வாள். இவையெல்லாம் அவளுக்கு மிகவும் பிடித்த விஷயங்களே. அது மட்டுமல்ல- ஆயிரம் கையுறைகள் இருந்து, அவை ஒவ்வொன்றையும் அணிந்து வரும்போது, அதற்கே குறைந்தபட்சம் ஐந்து மணி நேரம் ஆகும்."தேவையில்லையே! முதல் ஐந்நூறு கைகளைக் கொண்டு எஞ்சியிருக்கும் ஐநூறு கைகளில் உறைகளை அணிவிக்கலாம். அதற்கு அதிகபட்சம் மூன்று நிமிடங்கள் ஆகும்...அது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை. அது சர்வசாதாரணமாக சரி பண்ணக் கூடியதே. அவையெல்லாம் அரசாங்கத்தின் பொறுப்பு கள். அவர்கள் ஸ்வெட்டர் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளைத் திறக்கட்டும்.மஹ்தொகத் தன் கால்களை குளத்தில் இருந்த நீருக்குள் இட்டு ஆட்டிக் கொண்டிருந்தாள்.அந்த ஊருக்கு வந்த முதல் நாளன்றே மஹ்தொகத் தோட்டத்திற்குச் சென்றாள். பிறகு, ஆற்றின் கரையிலிருந்து இறங்கி நீரில் போய் நின் றாள். நல்ல குளிர்ச்சியான காற்று வந்து மோதியவுடன் வேகமாக அவள் கரைக்கு வந்து விட்டாள். ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும். பாதங்களைச் செருப்புகளுக்குள் நுழைத்துவிட்டு தோட்டத்தை நோக்கி மீண்டும் நடந்தாள். கதவுகள் திறந்தே கிடந்தன. அப்போது உள்ளே வீசிக் கொண்டிருந்த ஈரமான காற்றுக்கு கோடை காலத்தில் இருப்பதைவிட வெப்பம் அதிகமாக இருந்தது. பல வருடங்களுக்கு முன்னால் இஹ்திஸாமி கூறுவார்- தோட்டத்தில் பகல் வேளையில் வீசிக் கொண்டிருக்கும் ஈரமான காற்றை சுவாசிப்பது மிகவும் நல்லது என்று. காரணம்- மலர்கள் வெளியே விடும் ஆக்ஸிஜன்தான் அங்கு முழுவதும் நிறைந்திருக்கும். பூ மரங்கள் அனைத்தையும் வேருடன் பிடுங்கி பூந்தோட்டத்தில் நடுவதற்காக அவற்றைக் கொண்டு போனால்கூட அவர் அதைத்தான் கூறுவார்.மஹ்தொகத் தோட்டத்தின் ஒற்றையடிப் பாதை வழியாக தூசி படிந்த சாளரங்களைப் பார்த்துக்கொண்டே நடந்தாள். அப்போது ஒரு குதிப்பின், ஒரு மூச்சு விடுதலின் சத்தம்... ஏதோ ஒன்றின் வெப்பமும் சுறுசுறுப்பும்... மனித உடல்களின் வாசனை...மஹ்தொகத்தின் நெஞ்சு அடித்துக் கொண்டது. பதினைந்து வயது நிறைந்த ஃபாத்மா தோட்டத்தின் மூலையில் தோட்ட வேலை செய்யும் யாதல்லாவுடன் சுகத்தில் மூழ்கிக் கொண்டு நின்றிருந்தாள். அவனுடைய வழுக்கை விழுந்த தலையையும், கலங்கிக் காணப்படும் கண்களையும் பார்த்தால் பயம் உண்டாகும்.சுற்றிலும் இருள் வந்து மூடியதைப்போல இருந்தது. கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. மஹ்தொகத் மேஜையின் நுனிப்பகுதியை தன் னையே அறியாமல் எட்டிப் பிடித்தாள். கண்கள் அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தன. அப்படி பார்த்துக் கொண்டு... பார்த்துக்கொண்டு நின்றிருக்க, அவர்கள் அவளைப் பார்த்துவிட்டார்கள். அப்போது அவன் பதைபதைப்பைக் காட்ட ஆரம்பித்தான். தப்பித்து ஓட வேண்டும் போலவும் இருந்தது. முடியவில்லை. இப்போது அவன் அந்த இளம்பெண்ணை கண்ணில் இரக்கமே இல்லாமல் அடிக்க ஆரம்பித்தான். அந்த இளம்பெண் தன் கைகளை மஹ்தொகத்தை நோக்கி நீட்டினாள். மஹ்தொகத் தோட்டத்தை விட்டு வெளியேறி னாள். என்ன செய்ய வேண்டும் என்று அவளுக்குத் தெரியவில்லை. மஹ்தொகத் தூக்கத்தில் நடப்பதைப் போல ஆற்றின் கரையை நோக்கி வேகமாக நடந்தாள். வாந்தி வருவதைப்போல இருந்தது. தன் கைகளைக் கழுவிவிட்டு, பெஞ்சில் போய் உட்கார்ந்தாள்.என்ன செய்வது?போய் ஹொஸாங்கிடமும் அவனுடைய மனைவியிடமும் நடந்த விஷயத்தைக் கூறினால் என்ன? அவர்களுடைய பாதுகாப்பில்தானே ஃபாத்மா இருக்கிறாள்?பதினைந்து வயது கொண்ட ஒரு சிறுமி... ச்சே...!ஹொஸாங் அவளிடம் நன்றாகப் பேசுவான். சந்தேகமே இல்லை. பிறகு அவளை வழியனுப்பியும் வைப்பான். ஃபாத்மாவின் சகோதரர்கள் அவளை விட்டுவைக்க மாட்டார்கள். "என்ன செய்வது?'பொருட்கள் அனைத்தையும் சேகரித்துக் கட்டி வைத்து, டெஹ்ரானிற்குத் திரும்பிச் சென்றால் என்ன என்று அவள் நினைத்தாள். இந்தக் குழப்பங்களைவிட அதுதான் நல்லது."அப்படியென்றால் என்ன செய்வது?'மஹ்தொகத் அதிர்ச்சியடைந்து நின்றுகொண்டிருந்தாள். எனினும், மனதில் பயம் இருந்தாலும், தோட்டத்திற்குத் திரும்பவும் செல்லாமல் இருக்க முடியாது. அந்த இளம்பெண் பரபரப்பில் "சாடோ'ரை உடலின்மீது வாரி எடுத்து சுற்றிவிட்டிருந்தாள். முகம் காயம்பட்டு சிவந்திருந்தது.""இத்தா...'' அவள் மஹ்தொகத்தின் கால்களில் விழுந்தாள்.முனகுவதைப் பார்க்க வேண்டுமே! நாயைப்போல...' மஹ்தொகத் மனதிற்குள் நினைத்தாள்: ""போடி... நாசமாய் போனவளே!''""அப்படிச் சொல்லாதீங்க, சின்னம்மா... கடவுளை மனதில் நினைத்து, என்னைக் கொன்னுடுங்க. அதனால எனக்கு ஒண்ணும் ஆகப் போவது இல்லை!''""பேசாதே... இங்கேயிருந்து போ...''""கடவுள்மேல ஆணையாக சொல்றேன்... சின்னம்மா, நீங்க என்ன செய்தாலும், பரவாயில்லை... உம்மாவிடம் சொன்னால், அவங்க என்னைக் கொன்னுடுவாங்க.''""நான் சொல்லப் போகிறேன்னு யார் சொன்னது?''""நான் சொல்றது உண்மை. அந்த ஆளு என்னைத் திருமணம் செய்துகொள்வதாகச் சொன்னார். நாளையில இருந்து அந்த ஆளைப் பார்க்க மாட்டேன்.''யாரிடமும் கூறப்போவதில்லை என்று உறுதிமொழி கிடைக்க வேண்டும். அப்படியென்றால்தான் அவள் அங்கிருந்து கிளம்புவாள்போல தெரிந்தது. அவளுடைய கைகள் மஹ்தொகத்தின் பாதங்களைத் தொட்டன. அப்போது மஹ்தொகத்திற்கு தாங்க முடியாத அளவிற்கு வெறுப்பு உண்டானது. அந்தச் சிறுமி தன் தலையைக் குனிந்துகொண்டே தோட்டத்தை நோக்கி திரும்பி நடந்து சென்றாள். மஹ்தொகத் நீண்ட பெருமூச்சை விட்டாள். அவளுக்கு அழவேண்டும்போல இருந்தது.இப்போது மூன்று மாதங்கள் கடந்தோடிவிட்டன. சில நாட்களில் கோடைக் காலமும் முடிந்துவிடும். அவர்கள் எல்லாரும் நகரத்திற்குத் திரும்பிச் செல்லும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். யாதல்லா என்ற அந்த தோட்ட வேலை செய்யும் மனிதன் எதுவுமே கூறாமல் ஏன் போனான் என்ற விஷயம் யாருக்குமே தெரியாது. ஹொஸாங் சொன்னார்: ""ஆச்சரியமாகத்தான் இருக்கிறது... தான் போகப் போவதில்லை என்று அவன் ஒரு நூறு முறை கூறியிருப்பான்...''இனி பூந்தோட்டத்தைக் கவனித்துக் கொள்வதற்கு ஒரு ஆளைத் தேட வேண்டும். குளிர்காலத்தின்போது அதைப் பார்த்துக் கொள்வதற்கு ஒரு ஆள் இல்லையென்றால், நிலைமை மிகவும் மோசமாக ஆகிவிடும். ""ஆற்றின்கரையில் பெஞ்சைக் கொண்டு வந்து போட்டு சுற்றித் திரிந்துகொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கு அதை வாடகைக்குக் கொடுத்தால், தினமும் முப்பது தொமான் எந்தவித சிரமமும் இல்லாமல் சம்பாதிக்கலாம்.'' ஹொஸாங் சொன்னான். எல்லாரும் அதை ஏற்றுக்கொண்டார்கள்.ஃபாத்மாவின் ஆரவாரமும் கூக்குரலும் பூந்தோட்டத்தின் அந்தப் பக்க எல்லையிலிருந்து உரத்துக் கேட்டுக்கொண்டிருக்கும். குழந்தைகளைக் குளிக்கச் செய்வதற்காக அவள் தன்னுடன் அழைத் துக் கொண்டு சென்றிருக்கிறாள். அவள் குழந்தைகளுக்கு அப்படி என்ன விளையாட்டுகளைக் கற்றுத் தருவாளோ தெரியவில்லை. மஹ்தொகத் அறைக்குள் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தாள். இடையில் அவ்வப்போது கதவிலும் சுவரிலும் தட்டும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. குழந்தையைப் பற்றி அவள் சிந்தித்து மனதில் நிம்மதி இல்லாமல் இருந்தாள்.கர்ப்பம் என்றுதான் தோன்றுகிறது. அப்படியென்றால், அவர்கள் அவளைக் கொன்று விடுவார்கள். அவள் சிந்தித்தாள். கர்ப்பமாக இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்! சகோதரர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து பாய்ந்து அவளை அடித்தே கொன்றுவிடுவார்கள். அப்படி நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! குழந்தைகள் நாசமாகிப் போகாமல் வாழலாமே!"என் கன்னித்தன்மை ஒரு மரத்தைப் போன்றது...' திடீரென்று மஹ்தொகத் சிந்தித்தாள். ஒரு கண்ணாடி வேண்டுமென்று தோன்றியது. சற்று முகத்தைப் பார்க்க வேண்டும். ""நான் பசுமையாக நின்று கொண்டிருப்பதற்கு அதுதான் காரணமாக இருக்க வேண்டும்.''அவளுடைய முகம் மஞ்சள் நிறம் கலந்த பச்சை நிறத்தில் இருந்தது. கண்களுக்குக் கீழே கறுப்பு நிறம் ஏறிவிட்டிருந்தது. நெற்றியில் நரம்பு நன்கு தெரிந்தது.இஹ்திஸாமி கூறுவார்: "குளிர்ந்து போய் இருக்கிறாயே! பனிக்கட்டியைப்போல...'இப்போது அவள் சிந்தித்தாள்: "பனிக்கட்டியைப்போல அல்ல... நான் ஒரு மரத்தைப் போன்றவள்... என்னை நானே பூமிக்குள் நட வேண்டும்... நான் வித்து அல்ல... என்னை நானே நட்டுக்கொள்ள வேண்டும்.'இதை ஹொஸாங்கிடம் எப்படிக் கூறுவது? இப்படிக் கூறலாம்: "அண்ணா, நாம் உட்கார்ந்து சகோதர உணர்வுடன் பேசிக் கொண்டிருப்போம். தொழிற்சாலைகள் கம்பளி ஆடைகளை உற்பத்தி செய்யும் விஷயம் தெரியுமல்லவா?' ஆனால், இதைக் கூற ஆரம்பிக்கும்போது, ஆயிரம் கைகள் பற்றிய விஷயத்தையும் விளக்கிக் கூற வேண்டியதிருக்கும். அது அவளால் முடியாது. அதையெல்லாம் கூறினால், ஹொஸாங்கிற்குப் புரியவே புரியாது. ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் கம்பளி ஆடைகளைத் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்க, அவள் அதை எப்படிக் கூறுவாள்? அவள் அதைத் தைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே!சரி... இனி வேறு வழியில்லை. பூந்தோட்டத்தில் வசிப்பதற்கும், அடுத்த குளிர் காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே தன்னைத் தானே மரமாக நட்டுக் கொள்வதற்கும் அவள் தீர்மானித்து விட்டாள். ஆள் அனுப்பி தோட்ட வேலை செய்பவர்களிடம் நடுவதற்கான சரியான நேரத்தை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அது அவளுக்குத் தெரியாது. அதில் பிரச்சினை எதுவுமில்லை. அந்த வகையில்தான் தான் ஒருவேளை இங்கு வளர்ந்து ஒரு மரமாகி விட்டிருக்கிறோம் என்று கூறலாம். குளத்திலிருக்கும் பாசியைவிட நிறத்தைக் கொண்ட பச்சை இலைகளாக குளத்தின் கரையில் வளர வேண்டும் என்பதுதான் அவளுடைய ஆசை. குளத்தின் பச்சை நிற வேறுபாடுகளுடன் அதற்குப் பிறகுதான் சண்டை போட்டுப் பார்க்க வேண்டும். மரமாக ஆவது என்று வந்துவிட்டால், புதிய தளிர் இலைகள் முளைத்து வரும். அவள் முழுக்க புத்தம் புது இலைகளைக் கொண்டு மூடப்படுவாள். அவள் தன்னுடைய தளிர் இலைகளைக் காற்றுக்குக் கொடுப்பாள். அந்த வகையில் பூந்தோட்டமெங்கும் ஏராளமான மஹ்தொகத்துகள். இனிப்பும் துவர்ப்பும் உள்ள எல்லா செர்ரி மரங்களும் வெட்டியெடுக்கப்படட்டும். மஹ்தொகத்திற்கு வளர்ந்து பரவி நிற்க வேண்டும் என்று தோன்றுகிறது. மஹ்தொகத் வளர்வாள். அவள் ஆயிரமாயிரம் கிளைகளையும் கொப்புகளையும் இட்டு வளர்வாள். உலகம் முழுவதும் படர்ந்து பரவி நிற்பாள். அமெரிக்கர்கள் அவளுடைய கொம்புகளை வாங்கி கலிஃபோர்னியாவிற்குக் கொண்டு செல்வார்கள். மஹ்தொகத் வனத்தை அவர்கள் மஹ்தெட் வனம் என்று அழைப்பார்கள். அப் படியே அழைக்கப்பட்டு அழைக்கப்பட்டு... மதுக் என்றும் சில இடங்களில் மாதுக் என்றும்கூட அழைப்பார்கள். நாநூறு வருடங்கள் கடந்தோடிய பிறகு ஒருநாள், மொழி அறிஞர்கள் நெற்றியில் விறகுக் கொள்ளியைப்போல எழுந்து நின்று கொண்டிருக்கும் நரம்புகளுடன், வெப்பம் உண்டாக்கும் வாதம், எதிர்வாதங்களில் மூழ்கி இறுதியில் கண்டுபிடிப்பார்கள்- இரண்டு சொற்களின் ஆரம்ப சொல் "மதீகின்' என்று அது ஆஃப்ரிக்காவின் சொல். அப்போது தாவரவியல் வல்லுநர்கள் அதைக் கண்டிப்பதற்காக வந்து நிற்பார்கள். குளிர் பிரதேசத்தில் வளரும் மரம் எந்தக் காலத்திலும் ஆஃப்ரிக்காவிலிருந்து வருவதற்கு வழியே இல்லை என்பார்கள் அவர்கள்.மஹ்தொகத் அதற்குப் பிறகும்... பிறகும்... தன் தலையைச் சுவரின்மீது மோதச் செய்து கொண்டிருந்தாள். இறுதியில் கண்ணீரில் மூழ்கி விட்டிருந்தாள். தேம்பித் தேம்பி அழுதபோது, அவள் நினைத்தாள். எது எப்படி இருந்தாலும், இந்த வருடமே ஆஃப்ரிக்காவிற்குச் சென்றாக வேண்டும். பிறகு, அங்கு மரமாக வளரவேண்டும். வெப்பம் நிறைந்த சூழ்நிலையில் வளர்வதைத்தான் அவள் விரும்பினாள். உற்சாகமடையும் அளவிற்கு எப்போதும் அவளுக்குள் இருந்து கொண்டிருக்கும் விருப்பம் அதுதான்.ஃபாஇஸா
நீண்ட நாட்களாக தயங்கிக்கொண்டு நின்ற பிறகு, 1953-ஆகஸ்டு மாதம் இருபத்தைந்தாம் தேதி சாயங்காலம் நான்கு மணிக்கு ஃபாஇஸா இந்த மாதிரியாக ஒரு தீர்மானத்திற்கு வந்து சேர்ந்தாள். பேசாமல் இருப்பதால், இனி எந்தவொரு பயனுமில்லை.
அனைத்தும் வெடித்துச் சிதறி அழிந்துபோய்விட்டிருக்கும் என்பதுதான் பலன்... தன்னுடைய உரிமைகளைப் பாதுகாத்துக் காப்பாற்ற வேண்டியதிருக்கிறது.
மனம் எந்த அளவிற்கு உறுதியாக இருந்தாலும், அதைத் தயார் பண்ணுவதற்கு ஒரு மணி நேரமானது. மெதுவாக சாக்ஸை மேல் நோக்கி இழுத்துவிட்டு, லினன் மேலாடைகளையும் பாவாடையையும் எடுத்து அணிந்தாள். ஆடைகளை அணியும்போது, அவள் ஒரு நிமிடம் சிந்தித்தாள். அமீர் அங்கு இருப்பானா? அந்தச் சிந்தனைகள் கடந்து வந்த நிமிடத்தில், உடலில் வெப்பம் உண்டாக ஆரம்பித்தது. அவன் அங்கு இருக்கும்பட்சம், கூற நினைத்தது எதையும் கூற முடியாத சூழ்நிலை உண்டாகும். எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே மறைத்து வைக்கவேண்டிய நிலை உண்டாகும். தாங்கிக்கொள்ள முடியாத தொல்லைகளை மீண்டுமொருமுறை ஏற்றுக்கொள்ள வேண்டியதிருக்கும். கூற ஆரம்பிப்பதற்கு முன்னால்... இதற்கு முன்பும்- அந்த அனுபவம்தான் உண்டாகியிருக்கிறது. தயங்கிக்கொண்டு நின்றதன் இறுதியில் சாய்ந்து ஆடவும் தடுமாறவும் தொடங்குவாள்.
முகத்தில் பவுடர் பூசிக்கொண்டு கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தபோது, அவள் தனக்குத்தானே கூறிக் கொள்வதைப் போல கூறினாள்: "வயது அதிகரித்துக்கொண்டு வருகிறது. வாழ்க்கையில் இருபத்தெட்டு வருடங்களும் இரண்டு மாதங்களும் கடந்து சென்றிருக்கின்றன.' அது அந்த அளவிற்கு அதிக வயதொன்றுமில்லை. கொஞ்சம் களைத்துப்போய் விட்டிருக்கிறாள். அவ்வளவுதான்...
ஷூக்களை அணிந்து, பர்ஸை எடுத்துக்கொண்டு படிகளில் இறங்கினாள். வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் குளத்தைப் பார்த்துக் கொண்டு, பாட்டி உட்கார்ந்திருந்தாள். ஃபாஇஸாவின் ஷூக்களின் ஓசை அவளுடைய கவனத்தைத் திருப்பின. ""வெளியே செல்கிறாயா?'' அவள் கேட்டாள்.
""ஆமாம்...''
""வேண்டாம். தெரியுதா? ஒரே கூட்டமாக இருக்கும்.''
பக்கத்து வீட்டு வானொலியின் சத்தம் உரக்க, இந்த வீட்டின் வாசல் வரை கேட்டுக் கொண்டிருந்தது. ஃபாஇஸா சற்று தயங்கி நின்றாள். பாட்டி கூறியது உண்மைதான்.
""அப்படியென்றால் அந்த "சாடோ'ரையாவது எடுத்துக்கொண்டு போ, மகளே.''
ஃபாஇஸா எதுவும் கூறாமல் மாடிக்கு ஏறிச் சென்றாள். ஆடைகளின் குவியலுக்கு மத்தியிலிருந்து பர்தாவை இழுத்து எடுத்தாள். கண்ணாடிக்கு முன்னால் போய் நின்றாள். மினுமினுத்துக் கொண்டிருந்த அந்த பர்தாவில் அந்த அளவிற்கு சுருக்கங்கள் விழுந்து காணப்பட்டன.
அமீர் பார்த்திருந்தால், கிண்டல் பண்ணுவதற்கு அது போதும்.
அமீர் கேலி செய்வது என்பது அவளுக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருந்தது. ஆனால், இப்படி அல்ல. திருமண விஷயத்தைச் சொல்லி வேண்டுமானால் கேலி செய்து கொள்ளட்டும் ஆனால், பவுடரைப் பற்றியெல்லாம் பேசினால், மனதில் கவலை தோன்றும். சில நேரங்களில் அழுதாலும் அழலாம். அமீருக்கு முன்னால் இருந்துகொண்டு அழுவது என்பது சற்று குறைச்சல்தான். வேறு வழியில்லை. அவள் படிகளில் இறங்கினாள். அந்தச் சமயம் அவளுடைய கையில் "சடோர்' இருந்தது.
அதற்குப் பிறகு பாட்டி எதுவும் கூறவில்லை. கொஞ்ச நாட் களாகவே அவள் ஆட்களுக்கு முன்னால் அறிவுரைகள் எதுவும் கூறுவதில்லை.
அவள் பாதையில் நடந்தாள். தூரத்திலிருந்து சத்தங்களும், ஆரவாரங்களும் கேட்டுக் கொண்டிருந்தன. உடனே ஒரு வாடகைக் கார் வந்து கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். அதில் ஏறி உட்கார்ந்தாள்.
""ஸெஸாவர்.'' அவள் சொன்னாள்.
ஓட்டுநர் தன்னை கண்ணாடியின் வழியாகப் பார்ப்பதை அவள் பார்த்தாள். திருப்பத்தில் திரும்பும்போது அவன் கேட்டான். ""பயம் இல்லையா! அங்கு ஒரே கூட்டமாக இருக்குமே!''
""வேறு வழி இல்லையே!''
""ஆனால், சுற்றி வளைத்துப் போகவேண்டியதிருக்கும். நேராக சாலையின் வழியாகச் செல்ல முடியாது. அது ஆபத்தானது.''
""இருக்கட்டும்...''
சிறிய சந்துகளின் வழியாக ஓட்டுநர் வாடகைக் காரை ஓட்டினான். ஒரு சந்திப்பை அடைந்தபோது, அங்கு வாகனங் கள் நிறைய நின்றிருந்தன. கார்களை நிறுத்தும்படி கூறியவாறு ஒரு ஆள் வழியில் நின்று கொண்டிருந்தான். திடீரென்று அவன் பாதையின் ஓரத்தை நோக்கி ஒரே தாவலாகத் தாவினான். அவன் ஓடிக்கொண்டிருந்தான். இன்னொரு மனிதன் அவனைப் பின்தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தான். முன்னால் ஓடிக்கொண்டிருந்த ஆள் ஒரு சந்துக்குள் திரும்பி மறைந்து விட்டான். கார்கள் மீண்டும் ஓட ஆரம்பித்தன.
இன்னொரு ஆள் ஃபாஇஸா ஏறிய வாடகைக் காருக்குப் பின்னால் பாய்ந்து விழுந்தான். தொடர்ந்து ஒரு கத்தியால் பக்கவாட்டு கண்ணாடியை அடிக்க ஆரம்பித்தான். ஃபாஇஸா அந்தப் பக்கம் பார்க்கவேயில்லை. முழங்கால்களுக்கு மத்தியில் தன் தலையைக் குனிய வைத்துக்கொண்டு அவள் உட்கார்ந்திருந்தாள். இப்போதுதான் வெளியே புறப்பட்டு வந்ததற்காக வருத்தப்பட்டாள். ஓட்டுநர் திடீரென்று ப்ரேக்கை மிதித்தான். ஃபாஇஸாவின் தலை முன்னால் இருந்த இருக்கையில் போய் மோதியது. அவன் ஆக்ஸிலேட்டரில் பலமாக மிதித்தான்.
அவளுடைய உடல் பின்னோக்கி நகர்ந்தது. பாய்ந்து விழுந்த ஆள் வாடகைக் காரின் வெளிப்பகுதியிலிருந்து சிதறி கீழே விழுந்தான். ஓட்டுநர் சொன்னான் ""ஆபத்து என்று சொன்னேன். அல்லவா? இன்றைய நாள் மோசமான நாள்.''
ஃபாஇஸா எதுவும் கூறவில்லை. ஓட்டுநர் முனகினான்: ""தொலைஞ்சது! என்னிடம் சொன்ன விஷயம்தான்... என் மனைவி ஒரு டஜன் முறை சொன்னாள்- போக வேண்டாம்... போக வேண்டாம் என்று...''
அதற்கு ஃபாஇஸா எந்தவொரு பதிலும் கூறவில்லை. கண்ணாடியின் வழியாக அவன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை அவள் விரும்பவில்லை. எந்தவிதத்திலாவது வெளியே கடந்து சென்றால் போதும் என்று அவள் விரும்பினாள்.
இறுதியாக இறங்க வேண்டிய இடத்தை அடைந்தாள்.
அவள் வாடகைப் பணத்தைக் கொடுத்தாள். சில்லறைக்காக காத்திருக்கவில்லை. அவனுடைய கை படுவதை அவள் தவிர்க்க நினைத்தாள்.
தூரத்திலிருந்து இப்போது ஆரவாரங்கள் கேட்டுக் கொண்டி ருந்தன. ஃபாஇஸா "பெல்'லை அழுத்தினாள். இரண்டு நிமிட நேரம் பொறுமையற்று காத்துக்கொண்டு நின்றதன் இறுதியில் ஆலியா வந்து கதவைத் திறந்தாள். அவளைப் பார்த்தபோது சரியாக இன்னும் தூங்காமல் இருப்பதைப்போல தோன்றியது. ""என்ன? இப்போதும் தூக்கமா?'' ஃபாஇஸா கேட்டாள்.
மரியாதை நிமித்தம் ஆலியா பாதை ஒதுக்கிக் கொடுத்தாள்.
""முனீஸ் இல்லையா!'' ஃபாஇஸா கேட்டாள்.
""ம்... இருக்கிறாங்களே!''
""எங்கு?''
""மஜிலிஸில் இருப்பாங்க.''
ஃபாஇஸா உட்காரும் அறையை நோக்கி நடந்தாள். ஒரு அடி வைத்தவுடன் நினைத்தாள்- அவள் அங்குதான் இருப்பாள். இரண்டாவது அடியை வைத்தபோது தோன்றியது- இருக்க மாட்டாள். அவ்வாறு சிந்தித்துக் கொண்டே கதவிற்கு அருகில் வந்தாள். அதற்குள் அவள் ஐந்து அடிகள் வைத்திருந்தாள். இருப்பாள் என்ற எண்ணத்துடன் கதவைத் திறந்தாள். முனீஸ் வானொலிப் பெட்டிக்கு முன்னால் என்னவோ சிந்தனையில் மூழ்கியவாறு அமர்ந்திருந்தாள். அங்கு அமீர் இல்லை. மேலே தூங்கிக்கொண்டு இருக்க வேண்டும் அவள் நினைத்தாள்.
முனீஸின் முகம் பிரகாசமானது. ""தங்கமே! என்ன விசேஷங்கள்? கடவுளே? பார்த்து எவ்வளவு காலமாச்சு!'' மெதுவாக எழுந்து நின்று கொண்டே அவள் சொன்னாள். அவள் வானொலியின் சத்தத்தைக் குறைத்தாள்: ""எங்கே இருந்தாய்? ஒரு தகவலும் இல்லையே!''
பெண்கள் இருவரும் ஒருவரையொருவர் இறுக அணைத்துக் கொண்டு, முத்தங்களைப் பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் வானொலிப் பெட்டிக்கு அருகிலேயே அமர்ந்திருந்தார்கள்.
""நீ தனியாக இருக்கிறாயா?'' ஃபாஇஸா கேட்டாள்.
""ஆமாம்... அவர்கள் எல்லாரும் மஸ்கட்டுக்குப் போய்விட்டார்கள்.''
""பிறகு ஏன் அந்த விஷயத்தை நீ என்னிடம் கூறவில்லை?''
""இதோ... அவர்கள் போய் இரண்டு நாட்கள்தான் ஆகியிருக் கின்றன.''
""அப்படியென்றால்... அமீர்?''
""இங்கே இல்லை. வேலைக்குப் போயிருக்கான்.''
""இந்த பிரச்சினைகளைப் பார்த்துக்கொண்டு எப்படி வேலை செய்ய முடியும்?''
""வெளியே போறப்போ, இதோ நான் போகிறேன் என்று கூறுவான். எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?''
""சரி... விடு...''
""இப்போ சந்தோஷம்...''
""அதை விடு...''
""இல்லை.... உண்மையாகவே...! உனக்கு தேநீர் வேண்டுமா?''
""சிரமம் இல்லாமலிருந்தால்...''
முனீஸ் எழுந்து வானொலியை "ஆஃப்' செய்தாள்.
வானொலியை ஒலிக்கவிட்டால், பேச முடியாது. வெறுமனே சிறிது நடந்துவிட்டு, திரும்பி வந்து ஃபாஇஸாவிற்கு நேரெதிரில் எதுவுமே பேசாமல் உட்கார்ந்திருந்தாள்.
ஃபாஇஸா எங்கோ வாசித்திருக்கிறாள்- வட்ட முகத்தைக் கொண்டவர்கள் மந்த புத்தி உள்ளவர்களாக இருப்பார்கள் என்று.
அதை வாசித்து முடித்தவுடன், கண்ணாடியில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. தன்னுடைய முகம் வட்டமான முகமல்ல என்ற விஷயம் அவளுக்குத் தெரியும். தன் முகம் குதிரையின் முகத்தைப் போன்றது என்று மற்றவர்கள் கூறி கேள்விப்பட்டிருக்கி றாள். அவளுடைய உம்மாவே அந்த மாதிரி எரிச்சலுடன் எவ்வ ளவோ முறை கூறியிருக்கிறாள். எது எப்படியிருந்தாலும் தான் ஒரு மந்த புத்தி கொண்ட பெண் இல்லையே! அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்குத்தான் அந்த வேகம்...
அதற்குப் பிறகு மனிதர்களின் குணத்தைக் கூர்ந்து கவனிப்பது என்பது வழக்கமாகிவிட்டது. சதுரமான முகத்தையும், சதுரமான தாடை எலும்பையும் கொண்டவன் அமீர். முனீஸின் முகம் வட்டவடிவமானது. முழுமையான வட்டம். கிட்டத்தட்ட நிலவு, கோழிமுட்டை- இவற்றுக்கு மத்தியில் அமைந்த ஒரு அமைப்பு. முனீஸ் மந்தபுத்தியைக் கொண்ட பெண் என்ற எண்ணம் அவளிடம் கொஞ்ச காலமாகவே இருக்கிறது. அவளைவிட முனீஸ் பத்து வயது மூத்தவளாக இருந்தாலும்கூட... எனினும், முனீஸுடன் கொண்டிருக்கும் நட்பு தொடர்ந்து இருந்து கொண்டிருப்பதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன.
அமீர் இரண்டு வருடங்கள் கழித்து வந்திருக்கிறான். இப்போது அவள் தன்னுடைய தேவைக்காகவும் அமீரின் விஷயமாகவும்தான் முனீஸைப் பார்க்கவே வந்திருக்கிறாள். முனீஸ் நீண்ட முகத்தை உடையவளாக இருந்திருந்தால், ஃபாஇஸா, அமீர்- இருவரின் திருமணம் நடைபெறுவதற்கான உதவிகளைச் செய்து கொடுத்தி ருப்பாள். ஃபாஇஸா பல நேரங்களில் நினைப்பாள்- பாவம்
அந்தப் பெண்! அந்த முகம் ஏன் அந்த அளவிற்கு வட்டமாக அமைந்துவிட்டது!
ஆலியா தேநீருடன் வந்தாள். அதைப் பருகிக்கொண்டிருந்தபோது, முனீஸின் பார்வை வானொலியை நோக்கி திரும்பியது. மூத்தவளாக இருந்தாலும், தன்னுடைய சொந்த வீட்டில் இருந்தாலும், அவள் அதை "ஆன்' செய்ய வேண்டுமென்று அப்போது நினைக்கவில்லை.
அவள் கேட்டாள்: ""வெளியே ஏதோ ஆரவாரம் கேட்கிறதோ?''
""ஆமாம்... விஷயம் மோசம்...''
""வெளியே செல்ல வேண்டாம் என்று அமீர் சொன்னான். வெளியே வெறிபிடித்துப் போய் மனிதர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னான்.''
""சொன்னது சரிதான்... என் வாடகைக் காருக்குப் பின்னால் ஒருவன் தாவி விழுந்துவிட்டான்.'' சிறிது நேரம் கழித்து அவள் கேட்டாள்: ""பிறகு பர்வீனை எங்கேயாவது பார்த்தாயா?'
""ஒரு மாத காலமாக இல்லை.''
""என்ன காரணம்?''
""மகன் உடல் நலமில்லாமல் கிடக்கிறான். மஞ்சள் பித்தம் என்று அவள் சொன்னாள். ஆட்கள் போவது நல்லது இல்லை. மற்றவர்களுக்குப் பரவிவிடுமாம். அவள்தான் சொன்னாள்.''
""அப்படியென்றால், பார்க்கப் போகாமலிருந்தது நல்லதுதான்...''
முனீஸ் ஃபாஇஸாவை ஓரக்கண்களால் பார்த்தாள். அவள் ஏதாவது சொல்லுவாள். நாம் கேட்டுக் கொண்டிருப்போம் என்று எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஃபாஇஸா அப்போது அவளிடம் கூறலாம் அல்லவா? அவளோ தரைவிரிப்பில் இருந்த பூக்களைப் பார்த்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
ஃபாஇஸா தொடர்ந்து சொன்னாள்: ""இந்த மாதிரியான ஒரு வெட்கம் கெட்ட பெண்ணை நான் என்னுடைய பிறவிலேயே பார்த்ததில்லை.''
முனீஸ் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தாள்: ""என்ன?'
வெறும் எந்தவித கெட்ட நோக்கமும் இல்லாத கேள்விதான்.
ஆனால், ஃபாஇஸா வேறொன்றைப் பற்றி சிந்தித்தாள்- இந்தப் பெண்ணுக்கு வட்டமுகம் இல்லாமல் போயிருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்?
""அவளுடைய நடத்தை அது... பத்துப் பதினைந்து வருடங்கள் கடந்த பிறகு இப்போதுதானே இதெல்லாம் தெரிய வருகிறது? வெளியே.... ஹா... எவ்வளவு நல்ல ஆள்... வெறும் தரை... எதற்கும் தயார் என்று வெளியேறினாள்....''
முனீஸ் அதிர்ச்சியடைந்து விட்டாள்: ""பிறகு அவள் என்ன செய்ய வேண்டும்? மொழி சொல்ல வேண்டுமா?''
""இல்லை... ஒரு சின்ன பெண்தானே? மொழி அல்லாததையெல்லாம் அவள் செய்திருக்கிறாள். நாணமில்லாதவள். என் அண்ணன் பாவம்...''
முனீஸ் பதைபதைப்புடன் இருந்தாள். பர்வீனின் நாணம் கெட்ட செயல் என்ன என்பதை சிறிது நேரம் மனதில் நினைத்துப் பார்த்தாள். எதுவுமே புரியவில்லை. ஃபாஇஸாவின் வீட்டில் பல நேரங்களில் அவளைப் பார்த்திருக்கிறாள். அதேபோல விருந்திலும் மரண வீடுகளிலும் வைத்துப் பார்த்திருக்கிறாள். அவர்களுக்கிடையே ஒரு மாதிரியான ஈடுபாடுகூட உண்டாகி விட்டிருந்தது. விருப்பமில்லாமல் போவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை.
முனீஸ் ஃபாஇஸாவைப் பார்த்தாள். அவளுக்கு அந்த நாணம் கெட்ட செயலைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ஃபாஇஸா அழ ஆரம்பித்தாள். அவளுடைய கண்ணீர் முனீஸின் கண்களில் தெரிந்தது. முனீஸும் அழ ஆரம்பித்தாள். அது எப்போதும் நடக்கக் கூடியதுதான். யாராவது அழுவதைப் பார்த்துவிட்டால், அவளும் அழ ஆரம்பித்து விடுவாள். காரணமெதுவும் தெரிந்து அல்ல. முனீஸ் அவளைத் தேற்றினாள். ""அழாதே அழாதே... கடவுளே! அழுற அளவுக்கு இப்போ இங்கே என்ன நடந்துவிட்டது?''
ஃபாஇஸா சுற்றிலும் தேடினாள். ஒரு டிஷ்யூ வேண்டும்.
ஆனால், அங்கு எங்குமில்லை. விரிந்து கிடக்கும் "சாடோர்' தலைப்பைக் கொண்டு அவள் தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
""எனக்கு அவள்மீது எந்த அளவிற்கு அக்கறை இருக்கிறது என்ற விஷயம் உனக்குத் தெரியுமா? நான் இல்லை என்பதால், அவளுக்கு அங்கு பெரிய அளவில் சந்தோஷம் இருக்கும் என்று தோன்றுகிறதா? இதோ... கடந்த வருடம்தான் அண்ணனும் அவளும்... இரண்டு பேரும் பிரிந்தார்கள். தவறு அவள் பக்கம்தான். பெட்டியைத் தூக்கிக் கொண்டு அந்த விவரம் கெட்ட பெண் தன்னுடைய உம்மாவின் வீட்டுக்குப் போய்விட்டாள். கொஞ்சமாவது நாணமும் மானமும் இருப்பவர்கள் இந்த வேலையைச் செய்ய மாட்டார்கள். அதற்குப் பிறகு இதை யார் சரி பண்ணினது என்று தெரியுமா? இந்த... நான் ஊரில் இருக்கும் ஒரு ஆள்கூட மறக்காத அளவிற்கு ஒரு விருந்து வைத்தேன். அந்த மாமிச வியாபாரி மிர்காவன்ஷை சந்தோஷமடையச் செய்தேன். நல்ல மாமிசமாகப் பார்த்துத் தருவானே! முட்டை ஆப்பம் நான் பண்ணினேன். சோறு, ஆட்டுக்கறி ஆகியவற்றையும் நானே தயார் பண்ணினேன். அதே மாதிரி கோழி வறுவல்... கோழி வறுவல் என்றால் எப்படி என்கிறாய்? எலுமிச்சம்பழம்,
புதினா, மசாலா பொருட்கள்- எல்லாம் சேர்த்து அவை எல்லாவற்றையும் வாசலில் இருந்துகொண்டு வறுத்து எடுப்பதற்கு ஒன்றரை மணி நேரமானது. தயிரையும் தயார் பண்ணி வைத்தேன். தக்காளி வாங்கவில்லையா என்று நீ நினைக்கலாம். அதையும் நானே கடைக்குப் போய் வாங்கிக்கொண்டு வந்தேன். அந்த ராணுவ அதிகாரியின் உதவியாளர் மூலம் வோட்காவும் ஏற்பாடு செய்தேன். அவளுடைய தந்தையின் வாய்க்குள் அந்த வகையில் ஊற்றலாமே!''
ஃபாஇஸா தன் உதடுகளைக் கடித்தாள். அவளுடைய மனதிற்குள் வெறுப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது.
""அதற்குப் பிறகு என்ன நடந்தது?''
""நீ என்ன நினைத்தாய்? திருமணம் திரும்பவும் ஒருமுறை நடந்தது. அது முடிந்தவுடன், அவளை அண்ணனின் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு சென்றோம். பிறகு இரண்டு மாதங்கள் கழித்து, திருட்டு நாய் திரும்பக் கொண்டு செல்வதற்கு வந்திருக்கு... என்னைக் குழந்தையாக ஆக்குவதற்கு! வேறு என்ன? ஒரு நாள் இரவு வேளையில் ஒரு விருந்து... அந்தக் கேடு கெட்டவனுக்குப் பிறந்தவள் என்ன தயார் பண்ணினாள் தெரியுமா? ஐரோப்பிய உணவு... ஏதோ சில தோலாலான துண்டுகளை ப்ளேட்டில் வைத்துத் தந்துவிட்டு, "மாமிசம்' என்கிறாள். நாய்களிடம் கூறுவதைப்போல... நாங்கள் யாரும் இவை எதையும் சாப்பிட்டதே இல்லை என்பதைப்போல. "அந்த நிமிடத்திலிருந்து எனக்குத் தோன்றியது- இவள் பழிவாங்குவதற்காக வந்திருக்கிறாள் என்று. போர் என்றால் போர். என் கையிலிருந்து கிடைத்தால், கிடைத்ததைப்போல உண்டாகும்.''
""அப்படிப்பட்ட ஒரு போர் பற்றிய தகவலையே அவள் என்னிடம் கூறவில்லையே!''
""அவள் என்ன சொல்லுவாள்? அப்படியே இல்லையென்றாலும், என்ன கூற முடியும்? என்னைவிட பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்று அவள் நினைக்கிறாள். இந்தப் பிறவியில். ஃபாஇஸாவின் கையிலிருந்து வாங்கிச் சாப்பிட்டவர்கள் ஒரே மாதிரி "மெஹப்' தருவதைத் தவிர, வேறு என்ன செய்வார்கள்? அதற்குப் பிறகுதான் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்த இந்தக் கேவலமான பிறவி ஒரு போர் தொடுக்கும் எண்ணத்துடன் வந்திருக்கிறாள்.''
""அது சரி...''
""அந்தச் சமயத்தில் நான் ஒரு சமையல் புத்தகத்தை வாங்கிக் கொண்டு வந்தேன். மாமிசமும், சோறும் தயாரிக்க தெரிந்துகொண்டு விட்டால் போதும், அதற்குப் பிறகு எதை வேண்டுமானாலும் அவள் உண்டாக்கிவிடலாம். நான் எல்லாவற்றையும் புரிந்துகொண்டேன்.''
""பிறகு உனக்குத் தெரியாமல் என்ன இருக்கிறது? அதில் எதுவுமே இல்லை. தினமும் வானொலியில் எப்படி சமையல் பண்ணுவது என்பதைப் பற்றித்தான் கூறிக்கொண்டிருக்கிறார்களே?''
""அவ்வளவுதான். எனக்கு அதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.
அதைத் தொடர்ந்து இன்னொரு விருந்து வைத்தேன்.''
""எப்போது?''
""ஒரு மாதத்திற்கு முன்னால்... ஐரோப்பிய பாணி சமையல் இருக்கிறது என்று கூறி எல்லாரையும் வரவழைத்தேன். போய் மிர்காவன்ஷைக் கைக்குள் போட்டு, எட்டு மிக்னான் நிறைத்துக்கொண்டு வந்தேன். ஒரு ஆளுக்கு ஒன்று... ஃப்ரெஞ்ச் கடலை, பச்சைப் பயறு, வெளியிலிருந்து வாங்கிக்கொண்டு வந்த தக்காளி, உருளைக்கிழங்கு- இப்படி எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வந்தேன். அரிசியையும் பயறையும் சேர்த்து "சாலட்' உண்டாக்கினேன். கீரையையும் தயிரையும் ஒன்று சேர்த்தேன். என் தங்கமே, மாமிசத்திற்கு நான் ஒரு சட்னி தயார் பண்ணியிருந்தேன். இந்தப் பிறவியில் நீ இந்த மாதிரி சாப்பிட்டிருக்க மாட்டாய். நல்ல பெரிய பீச்சையும் இனிப்புகளையும் கசப்பான செரியையும் நானே கடைக்குப் போய் வாங்கிக்கொண்டு வந்தேன். ராணுவ அதிகாரியின் உதவியாளரை அனுப்பி, வோட்கா கொண்டு வரும்படி செய்தேன். அதை ஒரு கைப்பாத்திரத்தில் வைத்து பாட்டியின் புட்டிக்குள் பனிக்கட்டிகளை வைத்து, அதன்மீது வைத்தேன்.''
முனீஸ் அவளையே ஆர்வத்துடன் பார்த்தாள்: ""ஏன் அப்படிச் செய்தாய்?''
ஃபாஇஸா புன்னகைத்தாள்: ""வோட்கா குளிர்ச்சியாக இருக்க வேண்டாமா? அதனால்தான்...''
""அப்படியா?''
""நீ சற்று அதைப் பார்க்க வேண்டும்.''
""என்னை ஏன் அழைக்கவில்லை?''
""அதற்கு... அமீர் சிராஸில் இருந்தானே? இரவு வேளையில் நீ தனியாக திரும்பிச் செல்ல முடியாது என்று நான் நினைத்தேன்.''
""அது சரிதான்...''
""ஆனால்... ஒரு விஷயம் கூறட்டுமா? எல்லாரும் நன்றாகச் சாப்பிட்டார்கள். நன்றாக இருக்கிறது என்று கூறவும் செய்தார்கள்.
அவளோ அந்த நிமிடமே செத்துப் போவதைப்போல ஆகிவிட்டாள்.''
""பர்வீனா?''
""நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்? அதற்குப் பிறகு அவள் என்ன செய்தாள் என்று தெரியுமா?''
""தெரியாது...''
""தங்கமே ஃபௌஸீன்னு ஒரு உரத்த சத்தம்... அவளுடைய தைரியத்தைப் பார்க்க வேண்டும். அந்த கேடு கெட்ட பெண் அழைத் ததைக் கேட்டாயா? தங்கமே ஃபௌஸீ. என்று ஃபாஇஸா என்று வாயைத் திறந்து அழைத்தால் சிறிது சேதம் உண்டாகி விடும்போல... அதற்குப் பிறகு, அவள் கூறியதைக் கேள். "தங்கமே ஃபௌஸீ... நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா? மிக்னானை நிறைக்கிறப்போ, சட்னி உண்டாக்கக் கூடாது.' அருகில் இருப்பவர்கள் யாரும் கேட்காத அளவிற்கு அல்லவா அவள் கூறினாள்!''
""அப்படியா?''
""என்னுடைய அப்போதைய மனநிலையை உன்னால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. மிக்னானுடன் சட்னியைச் சேர்க்க கூடாது என்று யார் சொன்னார்கள் என்று நான் கேட்டேன்.
அவள் சொன்னாள், "நான் வானொலியில் கேட்டேன்' என்று. நான் சொன்னேன்- "நான் இதை புத்தகத்தில் வாசித்தேன்' என்று.
அவள் சொன்னாள், "நானும் புத்தகத்தில் அப்படிப் பார்த்திருக்கிறேன்' என்று. நான் சொன்னேன், "நீ பார்த்த புத்தகம் தவறான ஒன்றாக இருக்கும்' என்று. அண்ணன் இடையில் புகுந்ததுதான் தப்பாகிவிட்டது.
அண்ணனும் என் பக்கம் சேர்ந்தவுடன், அந்த பிச்சைக்காரிக்கு நிற்பதற்கு இடமில்லாமல் போய்விட்டது. இரவு முழுவதும் மூச்சுவிட முடியாமல் படுத்துக் கிடந்திருப்பாள்.''
ஃபாஇஸா சிறிது நேரம் கவலையும் ஆறுதலும் கலந்து கூறிய கதைகளைக் கேட்டு முனீஸ் தளர்ந்து போய்விட்டிருந்தாள். ஃபாஇஸா சொன்னாள். ""ஆண்கள் எல்லாரும் வாசல் திண்ணைக்குப் போனவுடன், அவள் கழுவுவதற்கும் துடைப்பதற்கும் இருப்பதைப்போல அங்கே என்னுடனே இருந்துவிட்டாள்.''
அதற்குப் பிறகு ஃபாஇஸா எதுவும் பேசாமல் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள். அந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கக்கூட முடியாததைப்போல கண்ணீர் அவளின் கன்னங்களின் வழியாக வழிந்து கொண்டிருந்தது.
""ஆண்டவனை மனதில் நினைத்துக்கொண்டு, அழக்கூடாது.''
அதைக் கூறிவிட்டு, முனீஸ் அழ ஆரம்பித்தாள்.
""மேஜைகள் எல்லாவற்றையும் சுத்தம் செய்து முடித்தபிறகு அந்தப் பெண்ணாகப் பிறந்தவள் கூறுகிறாள்-ஆயுளின் பாதி நாட்கள் வரை ஹமீத் என்று கூறி' வெளியே சுற்றிக்கொண்டு திரிந்தவள்தானே? கன்னித்தன்மை என்ற போர்வையை நீக்குவதற்கு இப்போது நேரம் வந்துவிட்டது. சமையலறையில் சமையல் செய்கிறேன் என்று கூறிக்கொண்டு நேரத்தை வீண் பண்ணாதே.''
கண்ணீர் விழுந்து ஃபாஇஸாவின் பாவாடையை நனைத்தது.
முனீஸ் அதிர்ச்சியடைந்து விட்டாள். அவள் கேட்டாள்: ""யார் ஹமீத்?''
""அவளுடைய அண்ணன்தான்- அந்த நாசமாய் போறவன்...
அந்த அழுக்கு மூட்டை.. இந்த அளவிற்குப் போன நாற்றம் பிடித்தவள் தொலைந்து போகவில்லையே! இப்போது நானும் ஹமீதும்... எனக்கு அவனைப் பார்க்கவே எரிச்சலாக இருந்தது. அந்தத் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்து, காதில் அணிந்திருந்த கல்லைச் சற்று உடைத்தால் என்ன என்று முதலில் தோன்றியது. என் அண்ணன் அங்கு இருக்கிறானே
"அது மோசமான செயலாகிவிடுமே' என்று பிறகு தோன்றியது. நெருப்புப் போருக்கு நெருப்புப் போர்...! நான் சொன்னேன்: "பிறகு... அண்ணனுடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருப்பது உண்மையிலேயே இவளைத் தவிர வேறு யார்? புத்திசாலிப் பெண்! பிறகு... நீ இன்னொரு விஷயம் சொன்னாயே! கன்னித்தன்மையைப் பற்றிய காரியம்... கன்னித்தன்மை என்பது ஒரு திரை இல்லையடி... அது ஒரு ஓட்டை... மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகும், அது ஒரு துவாரம் என்ற விஷயம் இப்போதும் தெரியவில்லையாடீ திரை அல்ல என்ற உண்மை... புரிந்துகொண்டாயா? அதற்குப் பிறகு வந்திருக்கிறாய்- ஆட்களைப் பற்றி தேவையற்ற விஷயங்களையெல்லாம் கூறிப் பரப்புவதற்கு...''
முனீஸ் தன் அழுகையை நிறுத்தினாள். அவள் ஃபாஇஸாவையே வெறித்துப் பார்த்தாள். ஃபாஇஸா தொடர்ந்து சொன்னாள்: ""நான் அவளிடம் சொன்னேன்- "இனியும் அந்த நாற்றமெடுத்த வாயைத் திறந்தால், அறுத்து நூறு துண்டுகளாக்கி விடுவேன்.' எது எப்படி இருந்தாலும், அந்த நாய்க்கு என் அண்ணனிடம் பயம் என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அதற்குப் பிறகு வாயைத் திறந்து ஒரு வார்த்தையாவது பேசவேண்டுமே!''
முனீஸ் எதுவும் பேசாமல் தரை விரிப்பில் இருந்த பூக்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் தன் கண்களைத் துடைக்க, ஃபாஇஸா முனீஸின் முகத்தையே கூர்ந்து பார்த்தாள். அவள் தொடர்ந்து சொன்னாள்: ""அவள் ஒரு பாம்புடீ ஒரு ஆளையாவது கொத்தாமல் அவள் நகர்ந்து செல்ல மாட்டாள். இனி என்னைப் பற்றி வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டு திரிவாள். அதனால் எனக்கு என்ன? இன்றுவரை ஆட்களைக் கொண்டு தேவையற்ற விஷயங்களைப் பேச வைக்காதவர்கள், அப்படிக் கேட்பவர்களைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமே இல்லையே!
என்னை கோபம் கொள்ள வைக்கும் விஷயம் அதுவல்ல. நான் மஹ்ஜபினிடம் சென்று கன்னித்தன்மை இருக்கிறது என்பதற்கான நற்சான்றிதழை வாங்கி, கண்ணாடி போட்டு சுவரில் தொங்கவிட வேண்டும்போல இருக்கிறது. அந்த குசும்பு செய்யும் பெண்ணுக்குப் புரிய வைப்பதற்காக.''
முனீஸின் பார்வை தரைவிரிப்பிலேயே இருந்தது. அவள் சொன்னாள்: ""கன்னித்தன்மை என்பது ஒரு சவ்வு என்று உம்மா கூறுவாங்க. மேலேயிருந்து கீழே குதித்தால் அந்த சவ்வு கிழிந்துவிடும். அது ஒரு சவ்வு. அது கிழிந்து விடும்.''
""நீ என்ன சொல்கிறாய்? அது ஒரு ஓட்டைடீ.... சிறிய துவாரம். பிறகு... அது பெரிதாக ஆகும்...''
""அப்படியா?''
முனீஸ் வெளிறிப்போய் காணப்பட்டாள். ஃபாஇஸா அதை கவனித்தாள்: ""என்ன ஆச்சு உனக்கு?''
""ஒண்ணுமில்லை... அது சவ்வுதான்!''
""இல்லையடீ... நான் புத்தகத்தில் வாசித்திருக்கிறேன். எவ்வளவோ இடங்களில்... அது ஒரு துவாரம்தான்...''
ஆலியா ஒரு தட்டில் பழங்களுடன் வந்தபோது அமீர்
அங்கு வந்து சேர்ந்தான். ஃபாஇஸா அவனை மரியாதையுடன் வணங்கி வரவேற்றாள். அந்த சாப்பாட்டுப் பிரியன் பதிலுக்கு வணங்கிவிட்டு, சற்று விலகிச் சென்று ஒரு நாற்காலியில் போய் உட்கார்ந்தான். ""வெளியே மொத்தத்தில் பைத்தியம் பிடித்த நிலை நிலவிக்கொண்டிருக்கிறது. வெளியே எங்கும் போகவேண்டாம்.''
அப்போதுதான் அவன் அந்த இரண்டு பெண்களின் கண்களும் கலங்கி இருப்பதைப் பார்த்தான். ""ஏதாவது பிரச்சினையா?'' அவன் கேட்டான்.
முனீஸ் சொன்னாள்: ""இல்லை...''
அமீரின் முக வெளிப்பாடு மாறியது. ""ஏதாவது பிரச்சினை உண்டானதா என்று கேட்டேன்.''
""கடந்து சென்ற ஒவ்வொரு விஷயங்களையும் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.'' ஃபாஇஸா சொன்னாள்.
""அதற்கு ஏன் அழவேண்டும்?''
""அது... நாங்கள் பெண்கள் அல்லவா?''
அமீர் சற்று புன்னகைத்தான்.
""சரி... நான் புறப்படுகிறேன்.'' ஃபாஇஸா சொன்னாள்.
""எங்கே? மொத்தத்தில் வெளியே ஒரே குழப்பமாக இருக்கிறது.''
அமீர் சொன்னான்.
""புறப்படணும். கொஞ்சம் நேரமாகி விட்டது.''
இரவில் தங்கிவிட்டுச் செல்லலாமே என்று அமீர் கூற நினைத் தான். ஆனால் நடக்காத விஷயம். வீட்டில் உள்ளவர்கள் கவலையில் இருப்பார்கள்.
""நான் கொண்டுவந்து விடுகிறேன்.'' அவன் சொன்னான்: ""வந்ததில் சந்தோஷம்... இருந்தாலும், பெண்கள் தனியாக வெளியே நடந்து திரிவது நல்லதல்ல.''
""அந்த அளவிற்கு நிலைமை மோசமாக இல்லை, அமீர்.''
அமீர் நெற்றியைச் சுழித்தான்: ""எப்படிப் பார்த்தாலும், பெண்கள் வெளியே நடந்து திரிவது நல்லதல்ல. முதலில் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டியவர்கள். வெளியுலகம் என்பது ஆண்களுக்காக இருப்பது.''
ஃபாஇஸா அதற்கு பதிலெதுவும் கூறவில்லை. அமீருடன் வாதம் செய்வதால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. காரியம் நடந்து விட்டதே! இனி பர்வீன் அவளுக்கு ஒரு பிரச்சினையே இல்லை.
அவளைப் பொறுத்தவரையில் அவை அனைத்தும் முடிந்து விட்டன.
அமீர் எழுந்தான். இருட்டுவதற்கு முன்பே வீட்டில் கொண்டு போய்விட வேண்டும். அவனுடன் சேர்ந்து தனியே போவது குறித்து அவளுக்கு சந்தோஷமே. ""திரும்பிச் செல்லும்போது, பெரிய பிரச்சினைகள் இருக்காது என்று தோன்றுகிறது. அந்த வாடகைக் காரின் ஓட்டுனர் அப்படித்தான் சொன்னார்.'' அவள் சொன்னாள்.
முனீஸ்
1953-ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் இருபத்து ஏழாம் தேதி மாலை நான்கு மணிக்கு தெருவைப் பார்த்தவாறு மொட்டை மாடியில் முனீஸ் நின்றுகொண்டிருந்தாள். தூங்கி இப்போது சரியாக ஐம்பத்தாறு மணி நேரம் ஆகிவிட்டது. வெளியே செல்லக் கூடாது என்று அமீர் அவளிடம் கூறியிருக்கிறான்.சாலைகள் படுவேகமாகப் பாய்ந்து சென்று கொண்டிருந்தவர்களால் நிறைந்திருந்தன. மனிதர்களைக் கொண்டு நிறைக்கப்பட்டிருந்த ட்ரக்குகள் கடந்து சென்றுகொண்டிருந்தன. தூரத்திலிருந்து ஒலித்த மெஷின் கன்னின் சத்தம் காதில் விழுந்தது.
சிறிய பூங்காவை நோக்கித் திறந்திருந்த சாளரத்தின் வழியாகப் பார்த்தவாறு, கற்பு என்பது ஒரு திரை என்று நம்பி முப்பத்து எட்டு வருடங்கள் தான் வாழ்ந்தது எப்படி என்பதைப் பற்றி அவள் சிந்தித்துக்கொண்டிருந்தாள். கற்பை இழந்துவிட்டால் எந்தச் சமயத்திலும் தீராத தெய்வக் கோபம் உண்டாகும் என்று எட்டு வயது நடக்கும்போது அவளிடம் அவர்கள் சொன்னார்கள். கற்பு என்பது வெறும் ஒரு துவாரம் என்பதையும் திரை ஒன்றுமில்லை என்பதையும் புரிந்துகொண்டு இப்போது மூன்று இரவுகளும் இரண்டு பகல்களுமாகி விட்டிருக்கின்றன. உள்ளே இருந்த என்னவெல்லாமோ நொறுங்கி விட்டதைப்போல அவளுக்குத் தோன்றியது. அவளுக்குக் கோபம் வந்தது. அவள் நினைத்துப் பார்த்தாள். இளம் வயதில், ஏறவேண்டும் என்ற ஆசையுடன் மரங்களை ஏக்கத்துடன் அவள் பார்த்துக்கொண்டு நின்றிருப்பாள். உள்ளுக்குள் ஏதோ ஒன்று விழுந்து உடைவதைப்போல அவள் உணர்ந்தாள். அவளுக்குள் வெறுப்பு வந்து நிறைந்தது. இளம் வயதுச் சிறுமியாக இருந்தபோது மரங்களை ஆர்வத்துடன் அவள் பார்த்துக்கொண்டு நின்றிருப்பாள். ஒரு முறையாவது அதன்மீது அவளால் ஏற முடிந்திருந்தால்...! ஆனால், கற்பைப் பற்றிய பயம் காரணமாக அவளால் ஒரு முறைகூட அதைச் செய்ய முடியவில்லை. அவளுக்கே தெரியாமல் பனியைப் போன்ற குளிர்ச்சி முழங்கால் வரை ஏறியது. "இதற்கு நான் பழி வாங்குவேன்.' அவள் சொன்னாள்.ஒரு ஆள் தெருவில் திரும்பி வந்து கொண்டிருந்தான். மார்பை இறுகப் பிடித்துக் கொண்டு இப்படியும் அப்படியுமாக ஆடியவாறு அவன் நடந்து வந்து கொண்டிருந்தான். சில அடிகள் நடந்தபிறகு, அவன் ஒரு ஓரத்தில் தலை குப்புற கீழே விழுந்தான். நிறைந்து கிடந்த ஒரு அழுக்குச் சாக்கடை அது. இப்போது அவளால் அந்த மனிதனைப் பார்க்க முடியவில்லை. எனினும், அவனுடைய கால்கள் அழுக்குச் சாக்கடைக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. முனீஸ் தன்னுடைய கண்களை மூடிக்கொண்டு முன்னோக்கி குனிந்தாள். ஒரு ஐந்து நிமிடங்கள்... அந்த ஆள் அதோ தெருவில் மல்லாந்து படுத்திருக்கிறான். ஆனால், கண்கள் திறந்திருந்தன. அவை நிர்மலமான வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தன.
முதலில் அவன் இறந்து விட்டான் என்றுதான் அவள் நினைத்தாள். குறைந்தபட்சம் அவள் தன்னை அந்த நிலையில் வைத்து எண்ணிப் பார்த்தாள். கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு ஒரு நிமிடம் அந்தத் தெருவில் அவள் கிடந்தாள். நிர்மலமான ஆகாயம் சிறிது சிறிதாக இருண்டு கொண்டு வந்தது. கன்னங்களின் வழியாக கண்ணீர் கீழ் நோக்கி வழிந்து கொண்டிருந்தது. அவள் தன் வலது கையை அழுத்தி கண்களைத் துடைத்தாள். பிறகு... எழுந்து நின்றாள். உடல் பயங்கரமாக வலிப்பதைப்போல இருந்தது. தாங்க முடியாத களைப்பு வேறு...
கால்களை வெளியே நீட்டிக்கொண்டு ஒரு ஆள் அழுக்கு றைந்த சாக்கடையில் கிடக்கிறான். முனீஸ் பதைபதைப்புடன் அந்த இடத்தை நோக்கி நடந்தாள். அவன் தன் முகத்தை வானத்தை நோக்கி காட்டிக் கொண்டிருந்தான். கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு.... முனீஸ் கேட்டாள்: ""ஏதாவது காயம் உண்டானதா?'' ""என் கதை முடிந்து விட்டது.''அந்த மனிதன் பதில் சொன்னான். ""ஏதாவது உதவி வேண்டுமா?''""இங்கேயிருந்து சற்று தூக்கி விட்டால் நன்றாகத்தான் இருக்கும். பிரச்சினையில் சிக்கிக் கொள்ளக்கூடாது.'' ""என்ன?''""அந்த ஆரவாரச் சத்தம் காதில் விழுகிறது அல்லவா? எல்லா கணக்குகளையும் அவர்கள் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.''""அப்படியென்றால் இங்கு கிடந்து என்ன செய்யப் போகிறீர்கள்?'' ""அம்மா... என் கதை முடிந்து விட்டது என்று நான்தான் சொன்னேனே?'' ""நான் ஏதாவது செய்து பார்க்கிறேன். ஒரு நிம்மதி கிடைக்கிறது என்னும்பட்சம்...''""இல்லை... அதெல்லாம் சும்மா... மிகவும் தாமதமாகி விட்டது. ஒரு ஃப்ரெஞ்ச் திரைப்படம் இருக்கிறது. "இட் ஈஸ் டூ லேட்' என்று பெயர். அதுதான் என்னுடைய நிலைமை... தாமதமாகி விட்டது...''முனீஸ் மிகுந்த கவலையில் மூழ்கினாள்: ""ஒருவேளை....''அந்த மனிதனுக்கு கோபம் வந்துவிட்டது. ""போகுமாறு நான் கூறினேன் அல்லவா? இது பைத்தியக்காரத்தனம்...''அதற்குப் பிறகு முனீஸ் அந்த இடத்தில் நிற்கவில்லை. ஒரு மாத காலம் அவள் தெருக்களில் நடந்து திரிந்தாள். முதலில் தெருக்கள் மனிதர்கள் நிறைந்து காணப்பட்டன. ஆட்கள் அடித்துக் கொண்டும் கொலை செய்துகொண்டும் நடந்து திரிந்தனர். படிப்படியாக தெருக்கள் யாருமே இல்லாமல் ஆகிவிட்டன. ஆட்கள் வீடுகளுக்குள் இருக்க ஆரம்பித்தனர். இனி எதுவும் எஞ்சியிருக்கவில்லை என்ற சிந்தனை உண்டானதாலோ, கவலை தோன்றிய காரணத்தாலோ அப்படி அவர்கள் நடந்துகொண்டிருக்க வேண்டும். சிலர் சிறைக்குள் சென்றார்கள். சிலர் சந்தோஷத்தில் மூழ்கிக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் வோட்காவையும் சாராயத்தையும் பரிமாறிக் கொண்டாடினார்கள். அவள் விருந்துகளில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக விருந்து நடக்கும் ஹாலின் சாளரத்திற்கு அருகில் போய் நின்று கொண்டு காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு கேட்டாள். ஊரடங்கு உத்தரவு காரணமாக அன்று யாருமே வெளியே வரவில்லை.இறுதியில் அவள் பல்கலைக்கழகத்தைத் தாண்டியிருந்த புத்தகக் கடையை நோக்கி நடந்தாள். பல நாட்கள் ஒரு வகையான கூச்சத்துடன் அவள் புத்தகங்களின் மேலட்டைகளைப் பார்த்துக்கொண்டு நின்றிருப்பாள். அவற்றின் பெயர்களைக்கூட அவள் வாசிக்க மாட்டாள். படிப்படியாக பதைபதைப்பு அவளிடமிருந்து விலகிச் சென்றது. அவள் அவற்றின் பெயர்களை வாசிக்க ஆரம்பித்தாள். இறுதியில் புத்தகக் கடையின் சாளரத்தின் வழியாகப் பார்த்து அல்ல... அதே நேரத்தில், தெருவிலிருந்த இன்னொரு கடையில் இருந்த ஒரு புத்தகம் அவளுடைய கண்களில் பட்டது. "உடலின்பத்தில் திருப்தி அடைவதற்கான ரகசியங்கள் அல்லது நம் உடலை அறிந்து கொள்வது எப்படி?' என்பதுதான் அந்தப் புத்தகத்தின் பெயர்.அந்தப் புத்தகத்தையே மறைந்து பார்த்தவாறு முனீஸ் பன்னிரண்டு நாட்கள் கடைக்கு முன்னாலேயே நடந்து திரிந்துகொண்டிருந்தாள். பதின்மூன்றாவது நாள் கடைக்குள் நுழைந்து விசாரிப்பதற்கான தைரியம் அவளுக்குக் கிடைத்தது.""இதன் விலை என்ன?'' ""ஐந்து தொமான்.''புத்தகத்தை வாங்கி விட்டு, முனீஸ் தெருவில் அமைதியாக இருந்த ஒரு பகுதியை நோக்கி நடந்தாள். ஒரு மரத்திற்குக் கீழே போய் நின்றுகொண்டு வாசிக்க ஆரம்பித்தாள். பக்கங்களை மிகவும் ஆர்வத்துடன் புரட்டினாள். பல முறை... அந்த வகையில் மூன்று நாட்கள் கடந்து சென்றன.மூன்றாவது நாள் அவள் தன் கண்களை உயர்த்தினாள். மரங் கள், சூரிய வெளிச்சம், தெருக்கள்- எல்லாவற்றுக்கும் புதிய அர்த்தங்கள் வந்து சேர்ந்து விட்டிருப்பதைப்போல தோன்றியது. தான் வளர்ந்திருக்கிறோம் என்பதை அவள் உணர்ந்தாள்.புத்தகத்தை சாக்கடைக்குள் வீசி எறிந்துவிட்டு, அவள் தன் வீட்டை நோக்கி நடந்தாள்.இருட்டிய பிறகுதான் அவள் வீட்டையே அடைந்தாள். அவளைப் பார்த்ததும் ஆலியா உரத்த குரலில் கூப்பாடு போட்டவாறு, மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டாள். முனீஸ் அவளை எழுந்து உட்கார வைத்தாள். ""என்ன ஆச்சு உனக்கு?'' அவள் கேட்டாள்.சுய உணர்வு கிடைத்ததும், ஆலியா இவ்வாறு சொன்னாள்: ""ஆளைக் காணோம் என்று நாங்கள் எல்லாரும் கவலையில் மூழ்கிக் கிடந்தோம். ஒருமாத காலமாக உம்மாவும் வாப்பாவும் அண்ணனும் நகரம், கிராமம் என்று எல்லா இடங்களிலும் அலைந்து தேடிப் பார்த்தார்கள். இனி தேடிப் பார்ப்பதற்கு இடமே இல்லை என்ற நிலை உண்டாகி விட்டது. அழுது அழுது கண்ணீரே வற்றிப்போய் விட்டது. இவ்வளவு காலமும் எங்கே இருந்தாய்? என்ன செய்து கொண்டிருந்தாய்?''அதற்கு முனீஸ் பதிலெதுவும் கூறவில்லை. வெறுமனே தலையை ஆட்டிவிட்டு, ஆழமாகப் புன்னகைத்துக் கொண்டு நின்றிருந்தாள். தொடர்ந்து இவ்வாறு கூறினாள்: ""ஆலியா, காதில் வாங்கிக்கொள். இப்போது நான் பழைய ஆள் இல்லை... எவ்வளவோ விஷயங்கள் தெரியும்...''
இறுதியாக முனீஸ் அமைதியாக மாடியை நோக்கி நடந்தாள். அங்கு ஒரு மூலையில் போய் உட்கார்ந்து சிந்திக்க ஆரம்பித்தாள். சிறிது நேரம் கழித்து அமீர் வாசல் கதவிற்கு அருகில் வந்து நின்றான். அவன் மிகவும் கவலையில் மூழ்கியவனாகவும், பதைபதைப்பு கொண்டவனாகவும் இருந்தான். ""நீ எங்கே இருந்தாய், வெட்கம் கெட்டவளே?''முனீஸ் இதயபூர்வமாக புன்னகைத்தாள். கோபப்படும் அளவிற்கு எந்தவொரு விஷயமும் இதில் இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை. ""நீ குடும்பத்தின் மானத்தைக் கெடுத்து விட்டாய் இல்லையாடீ.....?'' அமீர் தொடர்ந்து சொன்னான்: ""நீ கெட்டுப் போய் விட்டாய் என்ற விஷயத்தைத் தெரிந்து கொள்ளாத ஒரு ஆள்கூட இனி பாக்கியில்லை...''""உங்களிடம் கேட்டுவிட்டுத்தானே நான் போனேன்? வெறுமனே சிறிது நடந்துவிட்டு வருகிறேன் என்று...'' ""இந்த ஆர்ப்பாட்டங்களெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, வெளியே போகக் கூடாது என்று நான் சொன்னேன் அல்லவா, வெட்கம் கெட்டவளே?''
இதைக் கூறிவிட்டு, அவன் தன் பெல்ட்டைக் கழற்றி முனீஸை அடிக்க ஆரம்பித்தான். ஆனால், அவன் தன்னை எதற்காக அடிக்கி றான் என்பதே அவளுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் கழித்து அவள் கேட்டாள்.""அமீர், என்னை எதற்காக இப்படி அடிக்கிறாய்? உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் உண்டாயினவா?'' இதைக் கேட்டதும் அமீரின் கோபம் அதிகமானது. அவன் சாப்பிடும் மேஜையிலிருந்த பழம் வெட்டப் பயன்படும் கத்தியை எடுத்து அவளுடைய மார்பிற்குள் ஆழமாக இறக்கினான்.அந்த வகையில் இரண்டாவது முறையும் முனீஸ் வாழ்க்கைக்கு "சலாம்' கூறினாள்.சத்தம், ஆரவாரம் ஆகியவற்றைக் கேட்டு ஆலியா வந்தாள். ரத்தத்தில் குளித்துக் கிடந்த முனீஸையும் அமீரின் கையிலிருந்த கத்தியையும் பார்த்து அவள் மயக்கமடைந்து விழுந்து விட்டாள். என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் அமீர் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான். ஒரு ஆச்சரியமான விஷயத்தைப் பார்ப்பதைப்போல சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டு நின்று விட்டு அவன் கத்தியை மேஜையின்மீது வைத்தான். பிறகு மனதை மாற்றிக் கொண்டு கத்தியைத் திரும்பவும் கையில் எடுத்து, தன் பைக்குள் இருந்து கைக்குட்டையை எடுத்து விரல் அடையாளத்தைத் துடைத்தான். பிறகு திரும்பவும் மேஜையின்மீது அதை வைத்தான்.அந்த நேரத்தில் கதவின் மணி அடித்தது. அமீர் அங்கு நடந்தான். அவனுடைய உம்மாவும் வாப்பாவும் அங்கு வந்திருந்தார்கள்.""மூன்று காவல் நிலையங்களில் போய் விசாரித்தோம். எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறினார்கள்.''அதைக் கூறி விட்டு அவர்கள் மாடிக்கு நடந்தார்கள். முதலில் அவர்கள் பார்த்தது ஆலியாவைத்தான். பிறகு முனீஸை... ஒரு நிமிடம் அவர்கள் பயத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். பிறகு உரத்த குரலில் வாய்விட்டு அழுதார்கள். தொடர்ந்து மயக்கமடைந்து விழுந்தார்கள்.தரையில் கிடந்த நான்கு உடல்களையும் பார்த்து அமீர் என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தான். "கடவுளே, நான் எதற்கு இதைச் செய்தேன்.' அவன் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.பயத்தை வரவழைக்கக்கூடிய அந்த காட்சியைப் பார்த்துக் கொண்டே அமீர் நாற்காலியின் கைப்பகுதியில் உட்கார்ந்திருந்தான். இனி சிறிதும் தாங்கிக்கொள்ள முடியாது என்ற நிலை வந்ததும், அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான். சில நிமிடங்கள் அவன் அவ்வாறு அழுதுகொண்டிருந்தான். பிறகு கைக்குட்டையை எடுத்து தன் முகத்தைத் துடைத்தான். கைக்குட்டையில் ரத்தம் படர்ந்து விட்டிருப்பதை அவன் பார்த்தான்.அவனுடைய உடலெங்கும் ஒருவித நடுக்கம் பரவியது. கைக்குட்டையை மேஜையின்மீது எறிந்தான். தொடர்ந்து மீண்டும் அந்தக் காட்சியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். சுய உணர்வு திரும்பவும் கிடைப்பதற்கான அறிகுறி தெரியவில்லை. ஏதாவது செய்தே ஆகவேண்டும்.அப்படிப்பட்ட நிலையில் கதவின் மணி மீண்டும் ஒலித்தது.அவனுடைய இதயம் கடிகாரத்தைப் போல துடித்தது. அவன் எழுந்து சொன்னான்: ""கடவுளே காப்பாத்தணும்.'' முனீஸைப் பற்றி பல காவல் நிலையங்களிலும் தகவல் கொடுத் திருந்ததன் காரணமாக ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஐந்து போலீஸ்காரர்களாவது வண்டியை நிறுத்திவிட்டு, கதவு மணியை ஒலிக்கச் செய்துகொண்டிருந்தார்கள். அவன் கதவை நோக்கி நடந்தான். கதவை அசைத்துத் திறந்தான்.
அங்கே ஃபாஇஸா நின்று கொண்டிருந்தாள். ""ஹலோ...''
மறைந்து நின்றிருந்ததால், முதலில் அவனுடைய முகத்தை அவளால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ""ஹலோ....'' தெளிவாகப் பார்த்ததும் அவளுக்குள் இருந்து ஒரு குரல் வெளியே வந்தது. அவன் குனிந்து தரையையே பார்த்தான். ""கடவுளை மனதில் நினைத்துக் கொண்டு, உனக்கும் மயக்கம் வந்து சேரக் கூடாதா?''ஃபாஇஸா பயத்துடன் அவனுடைய முகத்தையே பார்த்தாள். அவளுடைய குரலில் நடுக்கம் தெரிந்தது. ""முனீஸைப் பற்றிய ஏதாவது தகவல்கள் கிடைத்தனவா என்பதைப் பற்றி விசாரிப்பதற்குத்தான் நான் வந்தேன்.''அமீர் மாடியை நோக்கி விரலை நீட்டினான். அவள் அங்கு நடந்தாள். அவன் கீழேயே நின்றுகொண்டிருந்தான். அவள் திரும்பி வந்தபோது, வெளிறிப் போய் காணப்பட்டாள். ""நீங்கள் அவர்களைக் கொன்று வீட்டீர்கள். இல்லையா?'' ""முனீஸை மட்டும்...''""இனி என்ன செய்யப் போறீங்க?'' ""தெரியவில்லை.''அவன் அதைக் கூறிவிட்டு, தரையில் ஒரு மூட்டையைப்போல படுத்து உருண்டான். அந்த நேரத்தில் ஃபாஇஸா இப்படி நினைத்தாள். "இறுதியில் இதோ எனக்கு வழியைக் கண்டுபிடித்து தந்திருக்கிறது...'அவள் பர்தாவை அவிழ்த்து சுருட்டி ஒரு மூலையில் எறிந்தாள். பிறகு அமீருக்கு எதிரில் சுவரில் சாய்ந்தவாறு தரையில் உட்கார்ந் தாள். ""நீங்கள் ஒரு ஆண். நீங்கள் அழக்கூடாது. ஏன் அழ வேண்டும்? உண்மையாகக் கூறப்போனால், சகோதரன் என்ற நிலையில் குடும்பத்தின் நல்லபெயரை நீங்கள் பத்திரமாகக் காப்பாற்றியிருக்கிறீர்கள். நீங்கள் அவளைக் கொன்றுவிட்டதாக கூறுகிறீர்களா? அது நல்லதுதான். சந்தேகம் இருக்கிறதா? ஒரு மாதகாலம் எங்கோ போய்விட்ட பெண் மரணமடைந்ததற்கு சமம்தான். ஒரு பெண் இப்படிப்பட்ட செயல்களைச் செய்யக்கூடாது. உண்மையிலேயே நீங்கள் செய்ததுதான் சரி... நல்லது. நானாகவே இருந்தாலும், இதையேதான் செய்திருப்பேன். அது பெற்ற தாய் வளர்த்ததன் விளைவு....''அதைக் கூறிவிட்டு, அவள் மார்பகங்களுக்கு இடையில் இருந்த துணியை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
அமீர் அழுகையை நிறுத்தினான். அவள் கொடுத்த துணியில் மூக்கைச் சிந்தினான். யாராவது வந்து சமாதானம் கூறமாட்டார்களா என்று காத்துக்கொண்டிருந்த அவனுக்கு வானத்திலிருந்து இறங்கி வந்ததைப்போல அது இருந்தது.
அந்தச் சூழ்நிலையில் இப்படிப்பட்ட ஒரு சிந்தனை அவனுக்குள் உண்டானது.""என்ன ஒரு அசிங்கம் பிடித்த பெண்ணாக இவள் இருக்கிறாள்! தரையில் சப்பணம் போட்டு உட்கார்ந்திருக்கிறாள். பிறகு மார்பகங்களுக்கு மத்தியிலிருந்து துணியை எடுத்துத் தருகிறாள். "அண்டர்வே'ரைக்கூட காட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். சகோதரியாக மட்டும் இவள் இருந்திருந்தால், இவளையும் நான் கொன்றிருப்பேன்!'தொடர்ந்து அவன் வேறு மாதிரி சிந்தித்தான்: "என்ன இருந்தாலும், சகோதரி இல்லையே! அதனால் நான் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அது மட்டுமல்ல- மிகப் பெரிய இக்கட்டானதொரு ஒரு சூழ்நிலையில் இவள் இங்கு வந்து சேர்ந்திருக்கிறாள்.' இறுதியில் நீண்ட பெருமூச்சை விட்டுக் கொண்டே அவன் கேட்டான்: ""நாம் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று நீ சொல்கிறாய்?''""மிகவும் எளிய விஷயம்... ஆள் காணாமல் போய் ஒரு மாதமாகி விட்டது. சரிதானா?'' ""ஆமாம்...''""நாம் இவளைத் தோட்டத்தில் புதைத்து விடுவோம். எவனுக்கும் தெரியப் போவதில்லை. எவ்வளவு பேர் காணாமல் போகிறார்கள்! குற்றங்களை விசாரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. யாரும் இங்கே வந்து இவள் எங்கே போய்விட்டாள் என்று விசாரிக்கப் போவதில்லை.''அப்படிக் கூறியதில் நியாயம் இருப்பதாக அமீருக்குத் தோன்றியது. அவன் வாசலில் இருந்த இருட்டை நோக்கி நடந்தான். தோட்டத்தில் கடப்பாறை, மண்வெட்டி ஆகியவற்றைக் கொண்டு மூன்றடி ஆழத்தில் ஒரு குழியைத் தோண்டினான். பிறகு மாடியை நோக்கி நடந்தான்.
வாப்பாவிற்கும் உம்மாவிற்கும் ஆலியாவிற்கும் அப்போதும் சுய உணர்வு வந்து சேரவில்லை. அமீரும் ஃபாஇஸாவும் சேர்ந்து முனீஸின் உடலைத் தூக்கி தோட்டத்திற்குக் கொண்டு சென்றார்கள். பிறகு, அதைக் குழிக்குள் வைத்தார்கள். மண்வெட்டியை எடுத்து குழிக்குள் மணலை வெட்டிப் போட்டான். அதற்குப் பிறகு திரும்பி நடந்து, ரத்தக் கறையை கழுவி நீக்குவதில் ஈடுபட்டான்.கழுவி முடித்தபோது, அமீரின் வாப்பாவும் உம்மாவும் சுய உணர்வு திரும்ப வந்ததன் அடையாளத்தை வெளிப்படுத்தினார்கள். கடந்து சென்ற மூன்று மணி நேரங்களுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவங்கள்கூட சுய உணர்வு வந்து எழுந்தபோது, மறந்துபோய் விட்டிருந்தன. ஒரு இறந்த உடலைப் பார்த்த மெல்லிய நினைவு மட்டுமே ஆலியாவிற்குக்கூட இருந்தது. பாவம்... வெறும் ஒரு வேலைக்காரியாக இருந்த அவளுக்கு அதைக் கூறுவதற்கான தைரியம் இல்லை. குறிப்பாக- முனீஸைப் பற்றி. இரவில் மொட்டை மாடியின் ஓரத்தில் நடப்பது, தேவையில்லாமல் கொசுவலையை தூக்கி எட்டிப் பார்ப்பது... இப்படித் தொடங்கி அவளைப் பற்றி பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு மத்தியில் சில பேச்சுகள் உலாவிக்கொண்டிருந்த நிலையில், அவள் அமைதியாகவே இருந்தாள்.ஃபாஇஸாவைப் பார்த்ததும், உம்மாவின் முகம் பிரகாசமானது. ""மகளே... ஃபாஇஸா..., நீ நலமாக இருக்கிறாயா? உன்னைப் பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டன!''""வேண்டாம்... நான் எப்போதும் வந்து உங்களுக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.'' ""நீ என்ன சொல்றே? நீ என் மகள் மாதிரி ஆச்சே!''""முனீஸைப் பற்றிய ஏதாவது தகவல்கள் இருக்கின்றனவா என்பதை விசாரித்துவிட்டுப் போகலாமென்று எண்ணித்தான் இங்கே வந்தேன். கிடைத்தாளா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாமே!''உம்மா ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள். ""அந்த அப்பிராணிப் பெண்ணைப் பற்றிய எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை. அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருந்தால், கிடைக்காமல் இருக்கமாட்டாள்.''""அப்படியென்றால், சரி... இனியும் சிரமப்படுத்த விரும்பவில்லை. கண்டுபிடித்தவுடன், தகவலைத் தெரிவிக்க வேண்டும்.''""அப்படிச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று பார்த்தாயா? அது சிறிதும் நடக்காது. உணவு சாப்பிட்டுவிட்டுப் போனால் போதும். ஆலியா, சீக்கிரமா சமையலறைக்குள் போ.''""வேண்டாம் உம்மா, இனியும் உங்களுக்குத் தொல்லை தருவது நல்லதல்ல.''""அது சிறிதும் நடக்காது.''
ஃபாஇஸா அங்கு உணவிற்காக இருந்தாள். ஆலியா சமையலறையை நோக்கி நடந்தாள்.சமையல் வேலைகளில் மூழ்கும்போது காதல் பாடல்களை முணுமுணுக்கும் பழக்கம் ஆலியாவிற்கு உண்டு. எழுதத் தெரிந்திருந் தால், மனதில் கூற நினைத்த விஷயங்களை ஒரு பேனாவை எடுத்து தாளில் எழுதி அனுப்பியிருப்பேனே என்று எங்கோ தூரத்திலிருக்கும் காதலியிடம் காதலன் நடத்தும் இதய உரையாடல்களாக இருக்கும் அப்படிப்பட்ட பாடல்கள்.
இறுதியில் அவர்கள் சாப்பிடுவதற்கு உட்கார்ந்தார்கள். சாப்பிட்டு முடித்த பிறகு, ஃபாஇஸாவைக் கொண்டுபோய் விடுவதற்காக அமீர் எழுந்தான். பயணம் முழுவதும் அவன் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான். அவன் மிகுந்த மனக் கவலையில் மூழ்கி விட்டிருந்தான். அவள் பயமே இல்லாமல் அவனுடைய கையை எடுத்து வருடிக்கொண்டிருந்தாள். இறுதியில் நான்கு பக்கங்களிலும் பார்த்துவிட்டு அவள் இப்படிச் சொன்னாள்: ""நடக்க வேண்டியவை அனைத்தும் நடந்து விட்டன. இனி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அந்தச் சமயத்தில் ஆட்கள் முனீஸைப் பற்றிய விஷயங்களை மறந்து விடுவார்கள். உங்களுடைய காரியங்களைப் பார்த்துக்கொள்வதற்கு, எப்படிப் பார்த்தாலும், ஒருத்தி வேண்டுமல்லவா?'' ""அது சரிதான்...''சில நாட்கள் கழித்து அமீர் தன் உம்மாவிடம் வந்தான். ""உம்மா...''""என்ன மகனே?''நாற்காலியின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த அமீர் நிலை குலைந்த நிலையில் இருந்தான். ""இப்போது இந்த விஷயத்தைப் பற்றி பேசக்கூடாது என்பது எனக்குத் தெரியும். பிறகு... சிந்தித்துப் பார்த்த போது தோன்றியது- என்னைக் கவனித்து பார்த்துக் கொள்வதற்கும் மற்ற விஷயங்களுக்கும் ஒரு துணை, மனைவியின் தேவை இருக்கிறது என்று...''""அப்படியா? எப்படிப் பார்த்தாலும், அது நல்ல விஷயம்தான். உன்னுடைய சகோதரி காணாமல் போய்விட்டாள் என்பது என்னவோ உண்மைதான். இந்த சந்தோஷ சூழ்நிலையில் அவளும் உடன் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்! என்ன செய்வது? ம்... அது இருக்கட்டும்... திருமணத்தை எப்போது நடத்த வேண்டும் என்று நீ மனதில் நினைத்துக்கொண்டிருக்கிறாய்? எங்கு வைத்து அதை நடத்துவது?''அமீர் பரபரப்புடன் சற்று இருமினான்! ""அதற்கு ஆளைப் பார்க்க வேண்டாமா?''உம்மாவிற்கு ஆச்சரியம் உண்டானது. ""அப்படியென்றால் நீ ஃபாஇஸாவை திருமணம் செய்து கொள்வதாக இல்லையா?''
""இல்லை, உம்மா. ஹாஜி முஹம்மது ஸொர்க்செ ஹராவின் மகளைத்தான் திருமணம் செய்துகொள்ள நினைத்திருக்கிறேன். பதினெட்டு வயது, மிகச் சிறந்த அழகி. அடக்கமும் பணிவும் நிறைந்தவள். நாணம், இரக்கம், சுறுசுறுப்பு, கடின உழைப்பு, அந்தஸ்து, சுத்தம், அன்பு, நல்ல உடல்நலம்- அனைத்தும் இருக்கின்றன. "சாடோர்' அணிந்து, தலையைக் குனிய வைத்துக் கொண்டு, வெட்கத்துடன் நடப்பாள். உம்மா, நீங்கள் போய் பெண் கேட்கணும்.''""மகனே, அமீர்... உனக்கு உன் தங்கையைவிட இரண்டு வயது அதிகம். வயது நாற்பது ஆகிவிட்டது. அவளைக் கல்யாணம் முடித்து அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு காலமும் நீ திருமணமே செய்து கொள்ளாமல் இருந்தாய். ஒரு பதினெட்டு வயதுப் பெண் வேண்டுமென்று இப்போது எப்படித் தோன்றியது? இளம் வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதால் லாபம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுக்குத்தான் என்றொரு பழமொழி இருக்கிறது. கேட்டிருக்கிறாய் அல்லவா? வெறுமனே தேவையற்ற வம்பை நீயே வரவழைத்துக்கொள்ள வேண்டுமா?''சிறிது நேரம் அமீர் சிந்தனையில் மூழ்கினான். பிறகு இவ்வாறு கூறினான். ""உம்மா கேட்டீர்களா? இருபது வயதுகளைத் தாண்டிய பெண்ணிடம் இரக்கம் வேண்டும் என்னும் ஒரு பழமொழி உண்டு. இருபது வயதுகளுக்கும் கீழே உள்ளவர்களை நான் தேடுவதற்கான காரணம் அதுதான். அது மட்டுமல்ல- அவள் களங்கப்பட்டிருக்க மாட்டாள் என்பதை உறுதியாகக் கூற முடியுமே! அதனால் இன்றே ஆடைகளை மாற்றிக்கொண்டுபோய் பெண் கேட்கணும்.''
அவள் அன்றே வேறு ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு அமீரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு பெண்ணைப் பார்ப்பதற்காக வெளியேறினாள். பெண்ணின் வீட்டில் உள்ளவர் களைப் பார்த்து "சலாம்' சொன்னார்கள். இறுகக் கட்டிய ஆடையை அணிந்து, அடர்த்தியான காலுறை அணிந்து, அந்த இளம்பெண் விருந்தாளிகளுக்கான தேநீருடன் வந்தாள். அமீரின் உம்மாவிற்கு பெண்ணைப் பிடித்துவிட்டது. பெண்ணுக்கு உம்மாவை மிகவும் பிடித்து விட்டது. மணமகனின் உறவி னர்களுக்கு மணப்பெண்ணின் ஆட்களைப் பிடித்து விட்டது. மணமகளின் உறவி னர்களுக்கு மணமகனின் ஆட்களையும். அடுத்த புதன்கிழமையன்று திருமணத்தை நடத்துவது என்று முடிவு செய்தார்கள். காரணம்- பிறகு வரப்போவது புண்ணிய மாதம். காத்திருந்தால் விஷயம் தாமதமாகி விடும். ஆணுக்கு பதினைந்தாயிரம் துமான் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அமீர் கண்ணாடியையும் மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்டையும் கொண்டு வரவேண்டும். சடங்குகள் ஹாஜியின் வீட்டில் வைத்து நடக்கும். காரணம்- வசதியாகவும் சீராகவும் அங்குதான் இருக்கும்.
வீட்டுக்குத் திரும்பி வந்த உம்மாவும் மகனும் நடந்த சம்பவங்களை ஆலியாவிடம் விளக்கிக் கூறினார்கள். அவள் எல்லாவற்றையும் தலையை ஆட்டியவாறு சிரித்துக்கொண்டே கேட்டுக் கொண்டிருந்தாள். தனக்கு கிடைத்த நேரமாகப் பார்த்து "சாடோ'ரை எடுத்து அணிந்துகொண்டு, தகவலைக் கூறுவதற்காக நேராக ஃபாஇஸாவின் வீட்டுக்குச் சென்றாள். தகவலைக் கேள்விப்பட்டதும், ஃபாஇஸா தன் தலையை சுவரின்மீது வைத்து மோதினாள். பிறகு தன் கை முஷ்டியைச் சுருட்டி வைத்துக்கொண்டு சாளரத்தில் அடித்தாள். கண்ணாடி உடைந்து அவளுடைய கையில் காயம் உண்டானது. ஆலியாவின் ஆலோசனையின்படி இருவரும் "சாடோ' ரால் மூடப்பட்டு, ஷா அப்துல் அஸீஸின் நினைவிடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். திருமணம் நின்றுவிட்டால், ஒரு ஆண் ஆட்டை அறுத்து பலி கொடுப்பதாக சத்தியம் செய்து கூறிவிட்டு, அங்கு பன்னிரண்டு மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தார்கள். தொடர்ந்து இருவரும் தர்வாஸஹாருக்கு, மீர்ஸா மனாகிபா அலைவியாவைப் பார்ப்பதற்காகச் சென்றார்கள். அங்கு அன்பை இல்லாமல் செய்யும் மந்திரித்து ஊதிய தாயத்து கிடைத்தது.மந்திரித்து ஊதிய தாயத்துடன் அவர்கள் ஒரு கிராமப் பகுதியைத் தேடிச் சென்றார்கள். பாஜி உம்மாவைப் பார்ப்பதற்காக. பழைய நூல் ஒன்றை வைத்து எதிர்காலத்தைக் கூறும் பெரிய திறமையைக் கொண்ட ஒரு உம்மா அவள். பாஜி உம்மா ஃபாஇஸாவையே வெறித்துப் பார்த்தாள். பிறகு நூலைத் திறந்து வைத்து வாசிக்க ஆரம்பித்தாள். பலனைத் தெரிந்து கொள்ள வேண்டிய ஆள் அதிக உயரத்தைக் கொண்டவள் அல்ல... மிகவும் குள்ளமும் அல்ல... அதிக பருமன் கொண்டவள் இல்லை... மிகவும் மெலிந்தவளும் இல்லை. நல்ல பிரகாசமான நிறத்தைக் கொண்டவள். சதுர முகம், சிறிய கண்கள், மாணிக்கக் கல்லைப் போன்ற மார்பு ஆகியவற்றைக் கொண்டவள்.எல்லா விஷயங்களும் எந்த அளவிற்கு மிகவும் சரியாக அந்த நூலில் எழுதப்பட்டிருக்கிறது! ஃபாஇஸா ஆச்சரியப்பட்டாள். பாஜி உம்மா எதிர்கால பலனைத் தொடர்ந்து கூறினாள். ""நீ மிகுந்த கவலையில் இருக்கிறாய். மண வாழ்க்கை சம்பந்தமாக உண்டான கவலை. கடவுளின் துணை இருக்கும்.''
ஃபாஇஸா தலையை ஆட்டினாள். ஃபாஇஸாவிற்கு அந்த உம்மாவின்மீது தாயிடம் உண்டாகக் கூடிய பாசம் தோன்றியது. ""காதல் இல்லாமல் செய்வதற்கு ஒரு வழி இருக்கிறது.' குள்ளமான அந்தக் கிழவி தொடர்ந்து சொன்னாள்: ""கவலையில் இருப்பவள் மக்காவை நோக்கி ஏழு அடிகள் நடக்க வேண்டும். அது முடிந்தவுடன், பின்னோக்கி ஏழு அடிகள் வெறும் கால்களுடன்... தினமும் இரவு வேளையில் அதைச் செய்ய வேண்டும். இப்படியே ஏழு இரவுகள்... நடக்கும்போது இப்படிக் கூற வேண்டும்- "கடவுளே! பிசாசின் கெட்ட செயல்களிலிருந்தும் எண்ணங்களிலிருந்தும் என்னைக் காப்பாற்ற வேண்டும்!' அது முடிந்தவுடன், நீரில் கால்களைக் கழுவிவிட்டு, போர்வையில் படுத்துத் தூங்க வேண்டும்.'' அப்போது ஃபாஇஸா சொன்னாள்: ""பாஜி உம்மா, எனக்கு ஒரு ஆள்மீது மிகுந்த விருப்பம் தோன்றுகிறது. அவருடைய மனதிற்குள் நுழைய வேண்டும். என்மீது அவருக்கு விருப்பம் உண்டாவது மாதிரி ஒரு தாயத்து எழுதித் தரவேண்டும்.'' பாஜி உம்மா மிகவும் வயதானவளாக இருந்தாள். அவள் சிரித்தாள். ""தங்க மகளே, இந்த விஷயத்தைப் பறித்து வாங்கிவிட முடியாது. காதல் கிடைக்க வேண்டுமென்றால், போர் நடத்த வேண்டும். ஒரு பழமொழி இருக்கிறது. காதல் வருவதாக இருந்தால், இரண்டு தலைகளிலும் வரவேண்டும். ஒரு தலையில் மட்டும் வருவதாக இருந்தால், அதற்குப் பெயர் தலைவேதனை.''தரையில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் ஒரு நாணயத்தை வைத்துவிட்டு, ஃபாஇஸா அங்கிருந்து நகர்ந்தாள். அவள் அங்கிருந்து சென்றவுடன், பாஜி உம்மா சற்று சிரித்துக் கொண்டாள். அவள் அந்த நாணயத்தை எடுத்து, ஒரு உருண்ட மண் பாத்திரத்திற்குள் போட்டாள். தன்னுடைய பேத்திக்காக அதை அவள் சேர்த்து வைத்தாள்.ஃபாஇஸா ஏழு இரவுகளிலும் ஏழு பகல்களிலும் அழுது கொண்டும், இப்படியும் அப்படியுமாக நடந்துகொண்டும் இருந்தாள். போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று அமீர், முனீஸை எப்படிக் கொன்றான் என்பதைக் கூறி விட்டாலென்ன என்று ஒரு நாள் அவள் நினைத்தாள். அவன் முனீஸைக் கொன்றதைப்போல அவனையும் கொன்றால் என்ன என்றும் மனதில் நினைத்தாள். இவ்வாறு ஆயிரத்தொரு விஷயங்களைப் பற்றி அவள் மனதில் நினைத்துக்கொண்டிருந்தாள். எதுவுமே அவளுடைய மனதிற்குப் பிடித்ததாக இல்லை. இறுதியில் திருமண இரவன்று முனீஸைப் புதைத்த இடத்தின் கால் பகுதியில் அந்தத் தாயத்தைப் புதைத்து வைக்க வேண்டுமென்று முடிவு செய்தாள்.திருமணம் நடக்கும் நாளன்று இரவு வேளையில் ஃபாஇஸா அமீரின் வீட்டுக்குச் சென்றாள். இந்த விஷயத்தில் ஆலியா
அவளுக்கு சில உதவிகளைச் செய்தாள். முனீஸ் கொல்லப்பட்டிருக் கிறாள் என்ற விஷயத்தில் சில சந்தேகங்கள் அவளுடைய மனதில் எழுந்திருப்பதே அதற்குக் காரணம். ஹாஜியின் வீட்டுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். யாருக்கும் தெரியாமல் ஆலியா, ஃபாஇஸாவை உள்ளே போகும்படிச் சொன்னாள். அவள் நேராக தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு தாயத்தைப் புதைப்பதற்காக குழிதோண்ட ஆரம்பித்தாள். தோண்டிக்கொண்டிருந்தபோது, ஒரு சத்தம்... அவள் அதிர்ச்சியடைந்து விட்டாள். அந்த சத்தம் முனீஸுக்குச் சொந்தமானது. குரல் இவ்வாறு அழைத்தது. ""அன்பான ஃபாஇஸா...''ஆழமான கிணற்றுக்குள்ளிருந்து அழைப்பதைப்போல அந்தக் குரல் இருந்தது. ஃபாஇஸாவின் தொண்டை வரண்டு போனது. அவள் தன் நெஞ்சுப் பகுதியை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்- பிரிந்து பாய்ந்தோடும் இதயத்தைப் பிடித்து நிறுத்துவதைப்போல, முனீஸின் குரல் தொடர்ந்து ஒலித்தது.""அன்பான ஃபாஇஸா... எனக்கு மூச்சுவிட முடியவில்லையே!''ஃபாஇஸாவால் ஒரு வார்த்தைகூட பேசமுடியவில்லை. ""மிகவும் பசிக்கிறது. தாகத்தால் இறந்துவிடும் நிலையில் இருக்கிறேன். ஒரு சொட்டு நீர் பருகி, ஒரு விதையைச் சாப்பிட்டு எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன!''ஃபாஇஸா ஏதோ கனவில் மூழ்கி விட்டிருப்பவளைப்போல, தன் விரல்களைக் கொண்டு குழியைத் தோண்டிக் கொண்டிருந்தாள். தோண்டித் தோண்டி, இறுதியில் முனீஸின் வட்டமான முகத்தைப் பார்க்கும் நிலைக்கு வந்தது. அந்தக் கண்கள் மெதுவாகத் திறந்தன: ""சகோதரி, சிறிது நீர் கொண்டு வந்து தா.''
ஃபாஇஸா தோட்டத்திலிருந்த நீர் இருக்கும் பகுதிக்குச் சென்று, நீர் மொண்டு கொண்டு வந்து முனீஸின் முகத்தில் தெளித்தாள், பிறகு மீண்டும் மிகவும் வேகமாகக் கிளற ஆரம்பித்தாள். தோண்டித் தோண்டி, அவளை வெளியே எடுத்தாள். அவள் மொத்தத்தில் செயலற்ற நிலையில் இருந்தாள். ஃபாஇஸா அவளுடைய உடலில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டி விட்டாள். அவள் ஆடியவாறு, சமையலறையை நோக்கி நடந்தாள். ஃபாஇஸாவிற்கு பதைபதைப்பு உண்டானது. சிறிதும் நம்ப முடியாத இந்தச் சம்பவத்தை மற்றவர்களிடம் எப்படி விளக்கிக் கூறுவது? அவள் குழம்பிப்போய் நின்றாள். அவள் மிகவும் கவனமாகவும் பதுங்கிப் பதுங்கியும் சமையலறையை நோக்கி நடந்தாள். முனீஸ்- தூசி, மண் ஆகியவை ஒட்டிய நிலையில் அங்கு நின்றுகொண்டிருந்தாள். சுத்தமில்லாத கைகளால் உணவை அள்ளி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். கண்கள் சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தன. முகத்தில் பயம் கலந்த ஒரு புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.அவள் குட்டிகளைத் தேடும் பெண் சிங்கத்தைப்போல ஒரு சத்தத்தை உண்டாக்கினாள். அரைப் பாத்திரம் உணவைச் சாப்பிட்டு முடித்தவுடன், களைப்பின் காரணமாக இருக்க வேண்டும்- ஆடிக்கொண்டே வாசலில் இருந்த குழாயை நோக்கி நடந்தாள். பிறகு ஒரு பக்கெட்டை எடுத்து வைத்து நீரை நிறைத்தாள். கலங்கலாகக் காணப்பட்ட நீரை பருகினாள். ஒரு நிமிட நேரம் அசையாமல் நின்றுவிட்டு, ஏப்பம் விட்டாள். அதற்குப் பிறகு அணிந்திருந்த ஆடைகளைக் சுழற்றிவிட்டு, குளிப்பதற்காக தோட்டத்தில் இருந்த குளத்திற்குள் இறங்கினாள்.ஃபாஇஸா, முனீஸின் படுக்கையறையை நோக்கி நடந்தாள். அங்கு யாரும் இருப்பது மாதிரி தெரியவில்லை. உள்ளாடையையும், உடுப்புகளையும், துவாலையையும் எடுத்துக் கொண்டு திரும்பவும் வாசலை நோக்கி நடந்தாள். முனீஸ் துவாலையை வாங்கி தலையிலிருந்து கீழ்வரை துவட்ட ஆரம்பித்தாள். பிறகு ஆடைகளை அணிந்து மாடியை நோக்கி நடந்தாள். எப்போதும் செய்வதைப்போல வானொலியின் அருகில் சென்று உட்கார்ந்தாள். ஃபாஇஸாவிற்கு பதைபதைப்பு உண்டானது. அவளும் மாடியை நோக்கி நடந்தாள். பிறகு முனீஸை விட்டு விலகி, ஒரு மூலையில் போய் உட்கார்ந்தாள்.""என் அண்ணனுடைய சதித்திட்டத்தில் நீயும் என்னைக் கொல்வதற்காக சேர்ந்தாய்... இல்லையா? நாணமும் மானமும் இல்லாதவள்!''ஃபாஇஸா நடந்த விஷயங்களை விளக்கிக் கூறுவதற்கு முயற்சித்தாள். ஆனால், அது கல்லுடன் உரையாடுவதைப்போல ஆனது.
""என்னுடைய முகம் வட்ட வடிவமானது. அதனால் மந்த புத்தியுடன் இருக்கக் கூடியவள் நான் என்றுதானே இவ்வளவு காலமும் நீ நினைத்துக்கொண்டிருக்கிறாய்?'' ""நீ என்ன சொல்கிறாய்? யாரால் அப்படியெல்லாம் சிந்திக்க முடியும்?'' ""உன்னால்தான், நாயே!'' ""கடவுள்மீது சத்தியம் பண்ணிக் கூறுகிறேன். அப்படியெல்லாம் நான் நினைக்கவே இல்லை''.""நீ ஒரு முட்டாள். உன்னுடைய மனதை இப்போது என்னால் தெரிந்துகொள்ள முடியும். நான் ஒரு விவரம் கெட்டவள் என்று நீ நினைத்தாய். அது மட்டுமல்ல- வட்ட முகம் வேறு இருக்கிறதே! அதையும் மனதில் நினைத்துக்கொண்டு, என் அண்ணனின் மனைவியாக ஆகலாம் என்று நினைத்தாய். சரிதானா?''""உண்மையிலேயே...''""பேசாதே... பொய்யைச் சொல்லிவிட்டு, இப்போது சத்தியம் வேறு செய்கிறாயா?''அதற்குப் பிறகு ஃபாஇஸா எதுவும் பேசவில்லை. முனீஸ் தொடர்ந்து சொன்னாள். ""பார்... என் முகம் வட்டமாக இல்லை. இப்போது சிறிது நீளமாக ஆகிவிட்டிருக்கிறது... இல்லையா?''ஃபாஇஸா அந்தப் பக்கம் பார்த்தாள். ஆச்சரியமாக இருந்தது. அவளுடைய முகம் ஒரு குதிரையின் முகத்தைப்போல நீளமாக ஆகிவிட்டிருந்தது. அவளுக்கு காய்ச்சல் வருவதைப் போல இருந்தது. உடலை அசைக்க முடியவில்லை. தான் ஒரு செவிடாகவோ குருடியாகவோ ஆகிவிட்டால் நன்றாக இருந்திருக்கும்- ஃபாஇஸா ஆசைப்பட்டாள். அப்படி இருந்திருந்தால், இப்படி ஒரு காட்சியைப் பார்க்கவோ கேட்கவோ நேர்ந்திருக்காதே! முனீஸ் தொடர்ந்து சொன்னாள்: ""என் கண்களின் மணிகள்கூட நீளமானவையே!''ஃபாஇஸா மீண்டும் பார்த்தாள். உண்மைதான்... அவளுடைய கண்மணிகள் நீளமானவையாகத்தான் இருந்தன. அது மட்டுமல்ல- அவை சற்று சிவப்பு நிறத்தில் இருந்தன.அதுவும் உண்மைதான் என்பதை ஃபாஇஸா புரிந்து கொண்டாள். நீளமாக, சிவப்பு நிறத்தில் இருந்த கண்மணிகள்.... அப்படியென்றால் அவளுடைய காலில் காயம் இல்லாமல் இருக்காது. ஃபாஇஸா சந்தேகப்பட்டாள். அப்போது முனீஸ் சொன்னாள்: ""இல்லை.... காயம் எதுவுமில்லை.''அவள் பேய் பிடித்தவளைப்போல விழுந்து விழுந்து சிரித்தாள். ஃபாஇஸா தப்பிப்பதற்கு ஒரு முயற்சி செய்து பார்த்தாள். ஆனால், முனீஸ் விடுவாளா என்ன? ""உன்னுடைய வேலையெல்லாம் இங்கே வேண்டாம். மனம் நிறைய குருட்டு புத்தி. நான் உன்னுடன் சேர்ந்து வாழத்தான் தீர்மானித்திருக்கிறேன். நாம் இங்கிருந்து கிளம்புகிறோம். சகோதரர்கள்- சகோதரிகளைக் கொல்வதற்கு எதிராகச் செயல்படும் கூட்டம் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு மோசமானவளாக நீ நினைக்க வேண்டாம். உன்னுடைய அந்தப் பாழாய்ப் போன மண்டையில் தோன்றக் கூடிய குருட்டுத்தனமான சிந்தனைகள் அனைத்தையும் நான் அந்தந்த சமயத்திலேயே தெரிந்து கொள்வேன் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் போதும். புரியுதா?''""புரிந்தது...''""என் உம்மாவின் உம்மாவிற்கு பரலோகத்தில் நல்லது நடக்கட்டும். ஒரு பூனை இருந்தது. அது இருபத்து நான்கு மணி நேரம் ஒரு பெட்டிக்குள் சிக்கிக் கொண்டது. வெளியே வந்தபோது மெலிந்து போய், ஒரு நீளமான புத்தகத்தைப்போல இருந்தது. வெளியே வந்ததும், வயிறு முட்ட தின்ன ஆரம்பித்தது. வயிறு வெடித்து, அது இறந்து விட்டது. மண்ணுக்கடியிலிருந்து வந்தபோது நானும் அதே மாதிரி ஒரு பூனையோ என்று எனக்குத் தோன்றியது. அப்பிராணி பூனையின் ஆவி எனக்குள் புகுந்து விட்டிருக்குமோ என்று நான் நினைத்தேன்.''""நீ சொன்னது உண்மைதான். உன் கண்கள் பூனையின் கண் களைப்போலவே இருக்கின்றன. எனினும், முகம் குதிரையின் முகத்தைப்போல இருக்கிறது.''""நீ ஏன் ஒரு மாதிரி மிடுக்கான குரலில் பேசுகிறாய்? நான் ஒரு மந்தமான புத்தியைக் கொண்ட பெண் என்று நீ நினைத்திருந்தாலும், எவ்வளவோ நாட்களுக்கு முன்பே நாம் சினேகிதிகளாக இருந்தவர்கள் அல்லவா? இப்போதும் சினேகிதிகள்தான். சாதாரணமாக உரையாடு...''""சரி...''""இன்னொரு விஷயம். ஆண்களையும் பெண்களையும் பற்றிய ஒரு புத்தகத்தை நான் வாசித்தேன். அதனால் எனக்கு முன்னால் உயர்ந்தவள் என்று காட்டிக்கொண்டு வந்து நிற்காதே. புரியுதா?''""ம்..''""இடையில் ஒரு விஷயத்தைச் சொல்லட்டுமா? உன்னைவிட பர்வீனுக்கு நன்றாகச் சமையல் செய்யத் தெரியும். இது என்னுடைய கருத்து. புரியுதா?''ஃபாஇஸாவின் தொண்டை தடுமாறியது. முனீஸ் என்ற வட்டமான முகத்தைக் கொண்ட அந்த குடும்பத்தனமான அழகி தொடர்ந்து சொன்னாள். ""உன்னுடைய சமையலும் அந்த அளவிற்கு மோசமானது இல்லை. எனினும், அவளுடைய சமையல் இன்னும் மேலானது.''""இனி அடுத்த திட்டம் என்ன?''ஃபாஇஸா கேட்டாள்.""புதிய மாப்பிள்ளையும் புதிய மணமகளும் வருவது வரை இங்கே இப்படி இருப்பதுதான்.''சிறிது நேரம் கழித்து சென்றவர்கள் எல்லாரும் திரும்பி வந்தார்கள். அவர்களுடன் மணமகளின் தாய், தந்தையும், மற்ற விருந்தாளிகளும் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஆரவாரம் செய்து, சத்தமாக பேசி, சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். வாத்தியக் கருவிகளின் ஆரவாரத்துடன் மணமகளை விசேஷமாக தயார் பண்ணிய அறைக்குள் அழைத்துக்கொண்டு சென்றார்கள். குடித்துவிட்டு நேராக நிற்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தவர்களை அவளுக்குப் பின்னால் அனுப்பி வைத்தார்கள். அந்தச் சமயத்தில் ஆலியா உரத்த குரலில் கூப்பாடு போட்டவாறு அங்கு ஓடி வந்தாள். கொண்டாட்டங்களைப் பார்த்துக்கொண்டே வழியில் விலகி நின்று கொண்டிருந்த முனீஸை அவள் பார்த்திருக்கிறாள். ஹாஜி ஸொர்க்செஹரா முனீஸைப் பார்த்து தலையை ஆட்டிக் கொண்டே கேட்டார். ""அந்தப் பெண் யார்?''உம்மா பயந்து போன குரலில் சொன்னாள். ""முனீஸ்... என்னுடைய மகள்....''முனீஸ் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அங்கு கூடி நின்றிருந்தவர்கள் அவளுக்குப் பாதையை ஒதுக்கிக்கொடுத்தார்கள். அவள் புதுமணத் தம்பதிகளின் அறையை நோக்கி நடந்தாள். கதவைத் தள்ளினாள். அது உள்ளே பூட்டப்பட்டிருந்தது. ஒரு பொம்மை வீட்டைப்போல அது திறந்து கொண்டு வந்தது. அவள் உள்ளே நுழைந்தாள். அப்போது அமீர் தன்னுடைய ஆடைகளைக் கழற்றிக் கொண்டிருந்தான். அந்த இளம் பெண்ணின் முகம் சுவர் பக்கம் திரும்பியிருந்தது. அவளும் தயங்கித் தயங்கி தன்னுடைய ஆடைகளைக் கழற்றிக்கொண்டிருந்தாள். கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும், அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். ஒரு ஆளுக்கு ஆச்சரியமும், இன்னொரு ஆளுக்கு பதைபதைப்பும் உண்டாயின. முனீஸ் முகத்தையும் கண்மணிகளையும் நீட்டிக்கொண்டே சொன்னாள். "தமாஷ் விளையாட்டுகளையெல்லாம் நிறுத்திக்கொள். நல்ல பிள்ளையாக இங்கு முன்னால் வா.''அமீர் சொன்னதைக் கேட்கும் ஆட்டுக் குட்டியைப்போல முன்னால் வந்து நின்றான்.""பாவம் சின்னப் பொண்ணு... நீ ஏன்டா இந்த அளவு குடிச்சிருக்கே?''""நான் என்ன சொல்றது?''""நீ போயி பதினெட்டு வயது கொண்ட ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வந்திருக்கிறாய். அப்படித்தானே!''""ஆமாம்...''முனீஸ் அந்த இளம்பெண்ணை நோக்கித் திரும்பினாள். ""இனி... நீ...! சென்ற வருடம் அந்த மைத்துனன் ஒருவன் உன்னை வயிறு வீங்கச் செய்தான் அல்லவா? ஃபாத்திமி கிழவிதானே கர்ப்பத்தை கலைத்து விட்டது?''அந்த இளம் பெண்ணுக்கு அழுகை வந்துவிட்டது. அவள் கவலையில் மூழ்க ஆரம்பித்தாள். அதைத் தடுத்துக்கொண்டே முனீஸ் தொடர்ந்து சொன்னாள். ""வேலை எல்லாம் வேண்டாம். ஃபாத்திமி கிழவி சொல்லி, நீ என்னுடைய முட்டாள் அண்ணனை உன்னுடன் சேர்த்துக்கொண்டாய்.''தொடர்ந்து முனீஸ் அமீரின் பக்கம் திரும்பினாள்: ""இனி... உன்னிடம்... டேய் தந்தை இல்லாதவனே! நீ இவளுடன்தான் சேர்ந்து வாழணும். கையை எப்போதாவது இவளை நோக்கி உயர்த்தினால், பிறகு, நான் உன்னை ஒரே விழுங்கா விழுங்கிடுவேன். புரியுதா?''அமீர் ஆட்டுக் குட்டியைப்போல தலையை ஆட்டினான். மணமகனும் மணமகளும் முனீஸிற்கு முன்னால் பயந்துபோய் நடுங்கிக்கொண்டு நின்றிருந்தார்கள். அவள் தொடர்ந்து சொன்னாள்: ""நான் ஃபாஇஸாவுடன் செல்கிறேன். கொஞ்சம் கொஞ்சம் பிரச்சினைகளை உண்டாக்கினாலும், உண்மையாகவே அந்த அப்பிராணி ஒரு கன்னிப் பெண்ணே... இவள் அப்படிப்பட்டவள் இல்லை. முட்டாளான உனக்கு இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் ஒரு விஷயத்தைச் சொல்லாமல் இருக்க முடியாது. இவளை நீ துன்பத்திற்குள்ளாக்கினால்... பிறகு உனக்கு அதனால் கிடைக்கும் சந்தோஷம் கிடைக்காது.''முனீஸ் வெளியேறினாள். அமீர் தன்னுடைய இளம் மனைவியை ஆச்சரியத்துடனும் வெறுப்புடனும் பார்த்தான். பிறகு... கட்டிலில் உட்கார்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதான்: ""இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்பதற்காக நான் என்ன செய்து விட்டேன்?''அவன் ஒவ்வொன்றையும் கூறி அழுதுகொண்டிருந்தான். இளம் மனைவி மீண்டும் கதவை உள்ளே இருந்தவாறு பூட்டினாள்.முனீஸ் வரவேற்பறையை நோக்கி நடந்தாள். ஆலியா அவளுக்கு மிகவும் முன்னால் வந்து நின்றாள். அவளுடன் முனீஸின் உம்மாவும் போகாமல் எஞ்சியிருந்த விருந்தாளிகளும். ஹாஜி ஸொர்க்செஹரா அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த விஷயம்- மணமகனின் சகோதரி திருமணச் சடங்குகளில் பங்கு பெறாமல் இருந்ததற்குக் காரணம் என்ன என்பது. மற்றவர்களுக்கு முன்னால் மகளை சிரமத்திற்குள்ளாக்கக் கூடாது அல்லவா? முனீஸின் உம்மா எதுவும் கூறவில்லை. அது மட்டுமல்ல- அவளைப் பார்த்து உம்மா சிறிது பயப்படவும் செய்தாள்.""வா... நாம வெளியே செல்வோம்.''முனீஸ் ஃபாஇஸாவை அழைத்தாள்.ஆலியா உரத்த குரலில் சொன்னாள்.""என்னையும் உடன் அழைத்துச் செல்...''""பிறகு... பிறகு...''முனீஸ் சத்தமான குரலில் சொன்னாள். அங்கு கூடியிருந்தவர்கள் மிகவும் அமைதியாக பாதையை ஒதுக்கிக் கொடுக்க, நின்றுகொண்டிருக்கும் இரண்டு பெண்களும் கதவை நோக்கி நடந்து, இரவின் இருட்டுக்குள் மறைந்தார்கள்.
|
|