Skip to main content

துணை கேப்டன் பதவியிலிருந்து ரோகித்தை மாற்ற கோரிக்கை விடுத்த விராட் கோலி?

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

virat - rohit

 


இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக இருந்த விராட் கோலி, நடைபெறவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய இருபது ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதனையடுத்து இருபது ஓவர் உலகக்கோப்பைக்குப் பிறகு, 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மா ஏற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

 

இந்தநிலையில் இந்திய ஒருநாள் அணியில் துணை கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை மாற்ற வேண்டும் என விராட் கோலி, தேர்வுக் குழுவிடம் வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மாவிற்கு 34 வயதாவதால், அவருக்குப் பதிலாக கே.எல். ராகுலை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும் என விராட் கோலி தேர்வுக்குழுவைக் கேட்டுக்கொண்டதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அதேபோல் இருபது ஓவர் போட்டிகளில், இளம் வீரரான ரிஷப் பந்தைத் துணை கேப்டனாக நியமிக்க வேண்டும் எனவும் விராட் கோலி கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டனை மாற்ற வேண்டும் கோலியின் கோரிக்கையைத் தேர்வுக் குழு ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.