Skip to main content

இடைக்கால பயிற்சியாளர் இல்லை... 2023 உலகக்கோப்பை வரை பொறுப்பேற்கவிருக்கும் ராகுல் டிராவிட்! 

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

rahul dravid - ganguly

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், இம்மாதம் தொடங்கவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதனையடுத்து பிசிசிஐ, அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியை, அதிகாரபூர்வமற்ற முறையில் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

 

பிசிசிஐ முதலில் ராகுல் டிராவிட்டிடம் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சொன்னதாகவும், ஆனால் டிராவிட் மறுத்துவிட்டதாகவும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனையடுத்து பிசிசிஐ, அனில் கும்ப்ளே அல்லது வி.வி.எஸ். லட்சுமணை அடுத்த பயிற்சியாளராக  நியமிக்க ஆலோசித்துவருவதாகவும், இதுதொடர்பாக அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

 

இந்தநிலையில், நேற்று (15.10.2021) இரவு நடைபெற்ற ஐபிஎல் இறுதிபோட்டியின்போது, ராகுல் டிராவிட்டோடு பிசிசிஐ தலைவர் கங்குலியும், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது ராகுல் டிராவிட் 2023 வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

ராகுல் டிராவிட்டுக்கு 2 வருட ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளதாகவும், அதற்காக அவருக்கு 10 கோடி சம்பளம் வழங்கப்படவுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதன்மூலம் ராகுல் டிராவிட் 2023 உலகக்கோப்பை முடியும்வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பார் என கருதப்படுகிறது.

 

ராகுல் டிராவிட், அடுத்து இந்தியாவில் நடைபெறும் நியூசிலாந்து தொடரின்போது தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பார் எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.