Skip to main content

எடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...!!! எழுதப்பட்ட புது வரலாறு!

Published on 02/12/2020 | Edited on 03/12/2020

 

natarajan

 

"இது ஒரு மனிதன் எடுத்துவைத்த சிறிய காலடி. ஆனால் மனிதக் குலத்தின் பெரும் பாய்ச்சல்" நிலவில் கால் வைத்தபோது, நீல் ஆர்ம்ஸ்ட்ராங் கூறிய வார்த்தைகள் இவை. நடராஜன் இன்று, இந்திய அணியில் இடம்பிடித்தது, சாதாரணமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், வரலாறு அறிந்தவர்களுக்கு, இது நிலவில் கால் வைப்பது போன்ற சாதனைதான் என்பது நன்றாகத் தெரியும். அதனால்தான், அவரின் ஒரு விக்கெட்டிற்குக்கூட இவ்வளவு பெரிய கொண்டாட்டம்.

 

நடராஜன் இன்று, 'முதல்' விக்கெட்டை வீழ்த்தியபோது, 'கிரிக்பஸ்' என்ற மிகப் பிரபலமான கிரிக்கெட் இணையதளம், "சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ் புறப்பட்டுவிட்டது" என வர்ணித்தது. இதற்கு முன்பு இந்திய அணிக்கு, தமிழ்நாட்டிலிருந்து கிளம்பிய எக்ஸ்பிரஸ்கள், சென்னை போன்ற பெரும் நகரங்களிலிருந்தே கிளம்பியிருக்கின்றன. முதல்முறையாகக் கிராமத்திலிருந்து ஒரு எக்ஸ்பிரஸ் கிளம்பியதால்தான், இவ்வளவு கொண்டாட்டங்கள்.

 

மேலும், இதற்குமுன்பு கிளம்பிய  எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு, இந்திய அணிக்குள் நுழையும் வரை ஒரு எக்ஸ்ட்ரா என்ஜின் துணையுண்டு. ஆனால், சின்னம்பட்டி  எக்ஸ்பிரஸிற்கு எப்போதும் ஒரே ஒரு என்ஜினின் துணைதான். ஆம்! நடராஜனை தவிர இதற்கு முன்பு இந்திய அணிக்குள் நுழைந்தவர்களுக்கு, அதிகாரம், செல்வாக்கின் துணையிருந்தது. நடராஜனுக்கோ, அவரது திறமை மட்டும்தான் இன்றுவரை துணையாக இருந்து வருகிறது. 

 

நடராஜனுக்கு  முன், அதிகாரம், பின்புலம், செல்வாக்குடன் சென்றவர்கள்கூட சிறிது காலத்தில் கழட்டி விடப்பட்டிருக்கிறார்கள். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 80 -களில் நிலையான இடத்தை, தக்க வைத்திருந்தார். பிறகு லட்சுமிபதி பாலாஜி, நிலையான இடத்தை தக்கவைப்பார் என நினைக்கும்போது, காயங்கள் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையைக் காயப்படுத்தியது. தற்போது, தினேஷ் கார்த்திக் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளே வெளியே ஆடிக் கொண்டிருக்கிறார்கள். நடுவில், சடகோபன்ரமேஷ்,ஹேமங் பாதனி ஆகியோர் இந்திய அணிக்கு ஆடியதை, வர்ணனைக்கு நடுவே கூறும்பொழுது, "இதெல்லாம் நீ சொல்லித்தானேப்பு எனக்கே தெரியும்" என்பதே ரசிகர்களின் மைண்ட் வாய்ஸாகா இருக்கிறது.

 

முதல் தர கிரிக்கெட்டில் 50-க்கு மேல் ஆவரேஜ் வைத்திருக்கும் பத்ரிநாத், இந்திய அணிக்காக ஆடியது வெறும் இரண்டே டெஸ்ட்டுகள்தான். இன்னொரு தமிழக வீரர் அபினவ் முகுந்த், இந்திய அணிக்கான தனது கடைசி ஆட்டத்தில் 80 ரன்கள் அடித்துவிட்டு, வாய்ப்புக்குக் காத்திருக்கிறார். இப்படித் தமிழக வீரர்களால் நுழையமுடியாத, நுழைந்தாலும் நிற்கமுடியாத இரும்புக் கோட்டையில்தான் திறமையை மட்டும் கொண்டு நடராஜன், தன் தடம் பதித்திருக்கிறார்.

 

abd bowled

 

நடராஜன், டி.என்.பி.எல்லில் வீசிய யார்க்கர்கள், அவருக்கு ஐ.பி.எல் வாய்ப்பை பெற்றுத்தந்தது. அவர், ஐ.பி.எல்லில் வீசிய யார்க்கர்கள், குறிப்பாக அவர் ஏ.பி.டிவில்லியர்க்ஸ்க்கு வீசிய யார்க்கர்தான், அவருக்கு இந்திய அணியின் ராட்சச கதவுகளைத் திறந்தது. வருண் சக்கரவர்த்தி காயம்தான், நடராஜனுக்கு அதிர்ஷ்டமாக மாறி, அவருக்கு இந்திய அணியில் இடம்பிடிக்க உதவியது. ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டியது "தைரியசாலிக்கே அதிர்ஷ்டம் துணை நிற்கும்" எனும் பழமொழியை.

 

ஏனெனில், யார்க்கர் பந்தை வீசுவது எளிதல்ல. கொஞ்சம், பந்து பேட்ஸ்மேனுக்கு முன்பு பிட்ச் ஆனாலும் அல்லது பிட்ச்சாகாமல் பேட்ஸ்மேனிடம் வந்தாலோ, பந்தை பவுண்டரியை நோக்கி கடாசிவிடுவார்கள். அதானால்தான் யார்க்கருக்கு பெயர்போன பும்ராவே சில போட்டிகளில் யார்க்கர் போட யோசிப்பார். டிவில்லியர்ஸோ யார்க்கர் பந்துகளில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பவர். இந்த சிக்கல்களையெல்லம் மீறி, யார்க்கரில் டிவில்லியர்ஸின் மிடில் ஸ்டம்பை பறக்கவிட்ட தைரியம்தான், மற்ற நெட்பவுலர்களை தாண்டி நடராஜனை, இந்திய அணியில் இடம்பிடிக்கச் செய்துள்ளது.

 

cnc

 

அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் மோசமான பந்துவீச்சுக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் நடராஜனுக்கு ஏன் வாய்ப்பளிக்கப்படவில்லை என ரசிகர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. அவர்கள் எழுப்பிய கேள்வி, அதிர்ஷ்டத்தால் எழுந்ததல்ல. அவரின் திறமையால் எழுந்தது. அந்த திறமையே மொஹம்மது ஷமி  போன்ற ஒரு பெரும் வீரருக்கு மாற்றாக ஆடும் அணியில் இடம்பிடிக்கக் காரணம். அதுமட்டுமில்லாமல், ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரரையும், கடைசி நேரத்தில் வெற்றியைப் பறிப்பதுபோல் ஆடிய இன்னொரு வீரரையும் ஆட்டமிழக்கச் செய்து, அதிர்ஷ்டத்தால் கிடைத்த இடம் எனக் கூறியவர்களுக்கு அழுத்தமான பதிலையும், எந்த பின்புலமுமில்லாமல், செல்வாக்குமில்லாமல் இந்திய அணியில் நுழைந்த தமிழக வீரர் என்ற வரலாற்றை எழுதியிருக்கிறார் நடராஜன் .  

 

ஆர்ம்ஸ்ட்ராங், நிலவில் கால் வைத்ததும், அதை மனிதக் குலத்தின் மாபெரும் பாய்ச்சல்  என அவர் கூற காரணம், அவரின் அந்த ஒரு அடி, மனிதக் குலம் அறிவியலால் பல அடிகளை எடுத்துவைக்கும் என்பதால். நிலவில் இடத்தை விற்பது முதல், விண்வெளியில் ஸ்பெஸ் ஸ்டேஷன் அமைத்துத் தங்குவது என அவரின் வார்த்தைகள் உண்மையாகியிருக்கிறது.

 

அதேபோல்தான், நடராஜன் இந்திய அணியில் பதித்த இடமும். திறமையை மட்டும் கொண்டே இந்தியாவிற்கு ஆடலாம் என்ற நம்பிக்கையை விதைத்து. இன்னும், பல தமிழக இளைஞர்களை இந்திய அணிக்கு ஆட வைக்கப்போகிறது. "ஏர் டெக்கானை ஆரம்பிக்கப் போராடும், நெடுமாறன் ராஜாங்கம், "ஏர் ஒட்டுபவனும் இனி ஏரோபிளேன்ல போவான்" எனச் சொல்வதைப் போல, தனது ஊரில் இலவச கிரிக்கெட்  பயிற்சி மையத்தை நடத்திவரும் நடராஜன், இனி மூலைமுடுக்கில் உள்ள  தமிழர்களும், இந்திய அணியில் தடம்பதிப்பார்கள் எனச் சொல்லாமால் சொல்கிறார்.