Skip to main content

மீண்டும் நடைபெறும் ரத்தான ஐந்தாவது டெஸ்ட்; எங்கு? எப்போது?

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

INDIA VS ENGLAND

 

இந்தியா - இங்கிலாந்திற்கு இடையே கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில்  டெஸ்ட் தொடர் நடைபெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்து வந்த நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.  அதனைத்தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருணுக்கும், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதருக்கும் கரோனா உறுதியானது.

 

இதனையடுத்து கரோனா காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ரத்தான ஐந்தாவது டெஸ்ட் போட்டியை நடத்த முயற்சி எடுத்தன.

 

இந்தநிலையில் ரத்தான ஐந்தாவது டெஸ்ட் போட்டி அடுத்தாண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை எட்க்பாஸ்டனில் நடைபெறவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியை தொடர்ந்து மூன்று 20 ஓவர், மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.