Skip to main content

தமிழனென்பதால் பாத்திரம் கழுவ வைத்தார்கள்... ஆனால், இன்று? - 5 நிமிட எனர்ஜி கதை  

Published on 19/03/2018 | Edited on 19/03/2018

1990ஆம் வருடம்... மும்பை பாந்த்ரா ரயில் நிலையம்... 17 வயது சிறுவன் அல்லது இளைஞன்... சென்னையிலிருந்து தன்னை அழைத்து வந்தவரை காணவில்லை... சுற்றியிருப்பவர்கள் பேசும் மொழி புரியவில்லை... ஒரு ஆர்வத்திலும் அசட்டு தைரியத்திலும், யாரிடமும்  சொல்லாமல் ஊரை விட்டு வந்துவிட்டான். இப்பொழுது, இந்த சூழ்நிலையில், தனக்கு சற்றும் சம்மந்தமில்லாத இந்த மாநகரில் என்ன செய்வது? இன்னொரு தமிழரொருவர் இவனைப் பார்த்து பாவமாக உணர்ந்து அருகே இருந்த மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த இன்னும் சில தமிழர்களிடம் இவனது நிலையை சொல்கிறார். ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு, பையனை திருப்பி சென்னைக்கு ரயிலேற்றலாம் என்று முடிவு செய்து அவனிடம் சொல்கிறார்கள். அவனோ மறுக்கிறான். 'இங்கே தான் என் எதிர்காலம் என்று முடிவு செய்து வந்துவிட்டேன். நான் போகமாட்டேன். எனக்கு ஏதாவது வேலை வாங்கித் தாங்க' என்றான். 'ஊரிலிருந்து வந்தது என்னவோ அசட்டு தைரியத்தில் தான். ஆனால், அங்கேயே இருக்கவேண்டுமென்று முடிவு செய்தது அசல் தைரியத்தில்.
 

Prem Ganapathy



தூத்துக்குடி அருகே நகலாபுரத்தில் பிறந்து பத்தாம் வகுப்பு வரை மட்டும் படித்து, குடும்ப சூழ்நிலையால் சென்னைக்கு வந்து அங்கு ஓரிரு கடைகளில் வேலை பார்த்து, அது போதாது, இன்னும் பெரிய ஊருக்குச் செல்ல வேண்டும், முன்னேற வேண்டுமென்று மும்பைக்கு வந்த பிரேம் கணபதிக்கு முதலில் கிடைத்தது ஒரு பேக்கரியில் பாத்திரம் கழுவும் வேலை. ஆம், அப்போதைய பம்பாயில் மதராசிகளுக்கு அந்த நிலை தான். கடைகளில், உணவகங்களில் வாடிக்கையாளர்களை கையாளும் வேலைகளில் மராத்திக்காரர்களும் ஹிந்திக்காரர்களும் மங்களூர்காரர்களும்தான் முன்னுரிமை பெற்றார்கள். ஹிந்தி தெரிந்தாலும் கூட மதராசிகளுக்கு அந்த வேலைகளை எளிதில் தர மாட்டார்கள். பாத்திரம் கழுவும் வேலையை ஏற்றுக்கொண்டு செய்தார், கடை செயல்பாடுகளை கவனித்தார். ஆறு மாதங்களில் அடுத்த வேலை, அதற்கடுத்த வேலை என பாத்திரம் கழுவும் வேலைதான் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்ததுதான் அந்த வேலை, ஆனால் பிரேம் அதை மட்டும் கவனிக்கவில்லை, முழுதாய் கவனித்தார். பின்னொருநாள் ஒரு டீக்கடையில் கடைகள், அலுவலகங்களுக்குச் சென்று தேனீர் கொடுக்கும் 'சாய் வாலா' வேலை. இப்படி, பாத்திரம் கழுவுபவராய்  தொடங்கிய பிரேம் கணபதி, இன்று இந்தியாவில் 52, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என்று பல வெளிநாடுகளில் 10 கிளைகள் என தோசை சாம்ராஜ்யமாக திகழும் 'தோசா பிளாஸா' உணவகங்களின் அதிபர்.
 

Dosa plaza



'எல்லா ரௌடிகளுக்கும் ஒரே ஃபிளாஷ்பேக் தான?' என்பது போல் 'எல்லா ஹோட்டல்களுக்கும் ஒரே  ஃபிளாஷ்பேக் தான?' என்று கேட்டால், பதில் கிட்டத்தட்ட 'ஆம்' தான். ஆனால், இவர் வித்தியாசமாக செய்தது என்ன? செய்த எல்லாவற்றையும் வித்தியாசமாக செய்ததுதான். 

'சாய் வாலா'வாக இருந்தபோதே, 'இதெல்லாம் ஒரு வேலையா என்று சலித்துக்கொள்ளாமல். 'இதுதான் நம்ம வேலை' என்று வாடிக்கையாளர்களிடம் அன்பாகப் பேசி, அவர்களுக்குத் தேவையான வகையில், நேரத்தில், ஒவ்வொருவருக்கும் பிடித்த சுவையில் டீ கொடுத்து ஒரு கட்டத்தில், பத்து சாய் வாலாக்கள் இருந்தாலும் வாடிக்கையாளர்களையே 'கணபதிகிட்ட சாய் கொடுத்து விடுங்கள்' என்று கேட்க வைத்தார்.   

காசு சேர்த்து தள்ளுவண்டியில் கடை ஆரம்பித்த போது, தள்ளுவண்டினா அழுக்கான இடத்தில, அழுக்கு கைலியோட, கழுவாத தட்டுல போட்டு தருவாங்க என்ற நம்பிக்கையை உடைக்கும் வண்ணம் கிளவுஸ், தொப்பி அணிந்து சுத்தமாக பரிமாறினார். தள்ளுவண்டிக்கு காரில் வந்து  சாப்பிடுவதெல்லாம் மும்பையில் இவர் கடையில் தான் முதலில் நடந்தது.
 

Prem with Abdul Kalam



முதல் கடை பிடித்த போது, சின்னதாக இருந்தாலும் தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்று கடைக்கு பெயர் வைக்க முடிவு செய்தார். 'கோகோ கோலா' என்ற பெயர் இவருக்குப் பிடித்தது. அது போல ரைமிங்காக வைக்க எண்ணினார். இவரது கடை ஸ்பெஷல் தோசா, இவர் இருந்தது மும்பை 'வஷி பிளாஸா', ரெண்டையும் சேர்த்து பேர் வச்சாரு மாசா... ஆம், பிரேம் சாகர் 'தோசா பிளாஸா' என்று முதல், சின்ன கடையையே பெயருடன் துவங்கினார். தள்ளுவண்டியில் கடை நடத்தியபோதே, 'மெக் டொனால்ட்' உணவகத்தை தன் ஆதர்சமாக வைத்து செயல்பட்டார்.  

படித்தது பத்தாம் வகுப்புதான், ஆனாலும் 90களிலேயே, முதல் கடை ஆரம்பித்த சமயத்திலேயே கணினி, இணையம் எல்லாம் இயக்கக்  கற்றுக்கொண்டார். உலகின் பிரபல உணவகங்களைப் பற்றி படித்து, அவர்களைப் போல ஒரு பிராண்டாக உருவாக்க நினைத்தார், உழைத்தார், உருவாக்கினார்.

இன்று சென்னையில் '60 வகை தோசைகள்', '80 வகை தோசைகள்' என்றெல்லாம் கடைகள் பார்க்கிறோம். அதற்கெல்லாம் தொடக்கம் இவர்தான். நூற்றுக்கும் மேற்பட்ட தோசை வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார் பிரேம் கணபதி.   

இன்றும், மெக்சிகன் சில்லியின் சுவை, ஆஸ்திரேலிய மக்களின் தேவை என புதுசு புதுசாக  கற்றுக்கொண்டே இருப்பதாகக் கூறுகிறார் பிரேம் கணபதி. செய்தது எந்த வேலையாக இருந்தாலும்  அதில் சிறந்து விளங்கியது, எந்த புள்ளியிலும் தேங்கி நிற்காமல் அடுத்தடுத்த தேடலுடன் இருந்தது, தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்ததுதான் பிரேம் கணபதி நமக்கு சொல்லும் சக்ஸஸ் சீக்ரெட். 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.