Skip to main content

ரூ. 2500 -க்கு வாங்கப்பட்டு 5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட கிண்ணம்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Published on 02/04/2021 | Edited on 02/04/2021

 

chinese artifact bowl sold for huge price in auction

 

15 ஆம் நூற்றாண்டின் ஒரு அரிய சீன கலைப்பொருள், 35 டாலருக்கு நபர் ஒருவரால் வாங்கப்பட்டு சுமார் 7,00,000 டாலருக்கு அண்மையில் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இங்கிலாந்தின் கனெக்டிக்கட் (Connecticut) பகுதியில் இருந்து நபர் ஒருவரால் 35 டாலருக்கு வாங்கப்பட்ட ஒரு மலர் பீங்கான் கிண்ணம், சோத்பேயின் (Sotheby) ஏலத்தில் 7,00,000 டாலருக்கு விற்கப்பட்டது. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சோத்பே (Sotheby) நிறுவனத்தின் சீன கலைப்பொருள் நிபுணர்கள் இந்த கிண்ணத்தை ஆய்வு செய்த போது, சீனாவில் ஆட்சி செய்த 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிங் வம்சத்துக்குச் சொந்தமான கிண்ணம் என்பதைக் கண்டுபிடித்தனர். உலகிலேயே  இது போன்ற கிண்ணங்கள் இதுவரை 6 மட்டுமே உள்ளதாக அறியப்படுகிறது. அவற்றில் தைவானில் உள்ள தைப்பேயில் தேசிய அருங்காட்சியகத்தில் இரண்டு கிண்ணங்கள், லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இரண்டு கிண்ணங்கள் மற்றும் ஈரானின் தேசிய அருங்காட்சியகத்தில் மற்றொன்று உள்ளது.

 

தாமரை மொட்டு போல வடிவமைக்கப்பட்டு நீல நிற கோபால்ட் கொண்டு வரையப்பட்ட இந்த கிண்ணத்தை 3,00,000 முதல் 5,00,000 டாலர் வரை மதிப்புள்ளதாக நிபுணர்கள் மதிப்பிட்டனர். ஆனால், கடந்த மார்ச் 17 அன்று நியூயார்க்கில் நடந்த சோத்பேயின் (Sotheby) முக்கியமான சீன கலை ஏலத்தில் நான்கு ஏலதாரர்களுக்கு இடையிலான போட்டிக்குப் பின்னர், கிண்ணம் 7,21,800 டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. இது ஏலத்தின் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட விலையை விட 20,000 மடங்கு அதிகமாகும். மிகவும் விலை உயர்ந்த கலைப் பொருட்களுள் ஒன்றாகக் கருதப்படும் இந்த கிண்ணம் 16 சென்டி மீட்டர் விட்டத்துடன் உள்ளது.

 

"இந்த கிண்ணம் 1403 முதல் 1424 வரை ஆட்சி செய்த யோங்கிள் பேரரசர் என அழைக்கப்படும் மிங் வம்சத்தின் மூன்றாவது பேரரசரின் ஆட்சிக்கு முந்தையது. இது யோங்கிள் அரசின் நீதிமன்றத்திற்காகச் செய்யப்பட்ட கிண்ணம் என நம்பப்படுகிறது. இது ஜிங்டெஷன் நகரில் உள்ள பீங்கான் சூளையில் யோங்கிள் நீதிமன்றத்திற்காக புதிய பாணியில் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மிகச்சிறந்த யோங்கிள் தயாரிப்பாகும். அந்த காலத்தின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அதன் வண்ணம் மற்றும் வடிவமைப்புகள் இருந்துள்ளன. அந்த கிண்ணம் தொடுவதற்கு மிகவும் மென்மையாக இருந்தது. அவர்கள் ஆட்சி செய்த காலத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கிண்ணங்களின் பொற்காலம்" என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

இதுகுறித்து சோதேபியின் மூத்த துணைத் தலைவரும் சீன கலைத் துறையின் தலைவருமான மெக்டீர் கூறும்போது, "நாங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பொருளைப் பார்க்கிறோம். ஐந்து நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த கிண்ணத்தில் நம்பமுடியாத கதை உள்ளது" என்றார். மேலும் அவர் ஒரு அறிக்கையில், "கிண்ணத்தை முதன் முறையாகப் பார்த்தவுடன், எங்கள் குழு இந்த மறுக்க முடியாத ரத்தினத்தின் தரத்தை உடனடியாக அங்கீகரித்தது. இது விலைமதிப்பற்ற கலைப் பொருட்களுள் ஒன்றாகக் கருதப்படும்" என்றார். மேலும் அவர், மிகவும் அரியவகை கலைப்பொருட்களில் ஒன்றான இந்த கிண்ணம் கிடைத்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.