Skip to main content

சுதந்திரத்தின் பலனை அரசியல்வாதிகள் 74 வருடங்களாக அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள் - நடிகர் ராஜ்கிரண்

Published on 15/08/2020 | Edited on 15/08/2020
fd


நாம் பெற்ற சுதந்திரம்  என்ற தலைப்பில்  நடிகர் ராஜ்கிரண்   எழுதிய வரிகள் வருமாறு,

நம் இந்திய தேசத்தின்
சுதந்திர வரலாறு,
மிக நீளமானது, மிக ஆழமானது....

 

பளபளப்பான மேடைகள் போட்டு,
கவர்ச்சிகரமான வசனங்கள் பேசி,
பொய்யான வாக்குறுதிகள் கொடுத்துக்
கிடைத்ததல்ல, சுதந்திரம்...

 

நம் முன்னோர்களின்
செல்வங்களையும், உடைமைகளையும்,
உறவுகளையும், உதிரங்களையும்,
உடல்களையும், உயிர்களையும்
இந்த மண்ணில் விதைத்துக்
கிடைத்தது, சுதந்திரம்...

 

சுதந்திரத்தின் பலனை,
அரசியல்வாதிகள் 74 வருடங்களாக
அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்

 

விதைத்தவர்களின் சந்ததிகள்
தெருவில் நிற்கிறார்கள்...

 

விதைக்கப்பட்டவர்களின் ஆன்மாக்கள்,
எல்லாவற்றையும்
கவனித்துக்கொண்டு தான் இருக்கின்றன....

 

நம் தேசியக்கொடியின் "காவி நிறம்",
பெரும்பான்மையான இஸ்லாமியர்கள்
உட்பட, சுதந்திரத்துக்காகப்போராடிய
அனைத்து மக்களும் சிந்திய ரத்தத்தையும், அவர்களின் தியாகத்தையும் குறிக்கிறது...

 

வெள்ளை நிறத்தின் நடுவில் இருக்கும்
"சக்கரம்", அதன் ஆரங்கள் அனைத்தும்
சமமாக இருப்பதைப்போல, இங்கு
அனைத்துப்பிரிவு மக்களும், சமத்துவத்தோடும், சமநீதியோடும்
நடத்தப்பட வேண்டும் என்ற, நமது
அரசியல் சாசனத்தை குறிக்கிறது...

 

அப்படி நடத்தப்பட்டால் தான்,
நாட்டில் அமைதி நிலவும் என்பதை,
"வெள்ளை நிறம்" குறிக்கிறது...

 

அப்படியான அமைதி நிலவினால் தான்,
நாடு சுபிட்சம் அடையும் என்பதை,
"பச்சை நிறம்" குறிக்கிறது...

 

இதையெல்லாம்,
வருடத்திற்கு ஒரு முறையாவது,
ஒவ்வொரு இந்தியக்குடிமக்களும்
நெஞ்சில் நிறுத்திக்கொள்ள வேண்டும்
என்பதற்காகத்தான்,
தேசியக்கொடி ஏற்றப்பட்டு, "சுதந்திரம்"
கொண்டாடப்படுகிறது...

 

சட்டைப்பையில் மூவர்ணக்கொடி குத்தி,
குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து, ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்வதோடு நின்று விடாமல்,

 

நம் சுதந்திரத்துக்காக உயிர்த்தியாகம்
செய்தவர்களின் வாழ்க்கையும்,
போராட்டங்களும், வளரும் குழந்தைகளுக்கு, பாடப்புத்தகங்கள்
வழியாக போதிக்கப்பட வேண்டும்...

 

இந்தியா நமது தேசம்.
ஹிந்துஸ்தான் ஹமாரா...

 

Next Story

மெரினாவில் அருங்காட்சியகம்; மக்களின் பங்களிப்பை நாடும் தமிழ்நாடு அரசு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 The Tamil Nadu government will make a request to the people on Independence Day Museum at Marina

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் எதிரே பிரம்மாண்ட சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் 75ஆவது சுதந்திர தினவிழா உரையின் போது அறிவித்துள்ளார்.

அதன்படி, சென்னை மெரினா கடற்கரையின் எதிரில், பாரம்பரியக் கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் பெரிய அளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. பொது மக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ சீருடைகள், ஐ.என்.ஏ. அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற இனங்களை நன்கொடையாக அளிக்கலாம். தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை சென்னை அல்லது 23 மாவட்ட அருங்காட்சியகங்களுக்கு நேரிடையாக சென்று வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியக ஆணையரால் வழங்கப்படும்.

இவ்வாறான அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போது அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம்பெறும். ஆகவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரப் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை அமையவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் வேண்டும்' - எழும் கோரிக்கை

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 Mani Mandapam for Kodikatha Kumaran - the demand that arises

கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் வேண்டும் என கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று சமுதாய அமைப்பு அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகில் உள்ள மேலப்பாளையம் என்னும் கிராமத்தில் 1904 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக குமரன் பிறந்தார். இவருடைய இயற்பெயர் குமாரசாமி.

தன் குடும்பத்தின் வறுமை சூழ்நிலை காரணமாகப் பள்ளிப் படிப்பை ஆரம்பப் பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். பின்னர் அவர் கைத்தறி நெசவு தொழிலை செய்து வந்தனர். 1923ல் ராமாயி என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் மாற்று தொழில் தேடி திருப்பூர் சென்று அங்கு இருக்கும் ஈஞ்சையூரில் ஒரு மில்லில் எடை போடும் வேலையில் சேர்ந்தார்.

திருப்பூரில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய சிப்பாய்களால் அடிபட்டு கையில் இந்திய தேசியக் கொடியுடன் மயங்கி விழுந்து இறந்ததால் இவருக்கு கொடி காத்த குமரன் என்ற பெயர் வந்தது. இவருக்கு சென்னிமலையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக  சமுதாய அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகிறது. இதுகுறித்து செங்குந்த மகாஜன சங்க தலைவர் நந்தகோபால் மற்றும் செயலாளர் ஆசை தம்பி ஆகியோர் கூறும்போது, "அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த கொடிகாத்த குமரனுக்கு மட்டும் அரங்கம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  தேச விடுதலைக்காகப் போராடிய கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் அவர் பிறந்த சென்னிமலையில் கட்ட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னிமலையில் விரைவில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.