Skip to main content

ஜெகத்ரட்சகனின் கவிதை அரண்மனை! திறந்துவைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

Poetry Palace of Jagathratsakan! Chief Minister MK Stalin opens!

 

திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், மாமல்லபுரம் கடற்கரையில் மிகப் பிரம்மாண்டமான நட்சத்திர ஹோட்டல் ஒன்றைக் கட்டி முடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் வகையில் இந்தக் கவிதை அரண்மனையைக் கட்டி முடித்துள்ளார் ஜெகத்ரட்சகன் எம்.பி. தமிழ் மரபுகளையும், கட்டட கலையையும் பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள அந்த அரண்மனைக்கு ‘கால்டன் சமுத்ரா’ என பெயரிடப்பட்டிருக்கிறது. 

 

கால்டன் சமுத்ராவை வருகிற வியாழக்கிழமை (09.12.2021) காலை 9 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கிறார். விழாவில் கலந்துகொள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரையும் அழைத்திருக்கிறார் ஜெகத்ரட்சகன் எம்.பி. இதற்காக, அனைவருக்கும் அழைப்பிதழ் தரப்பட்டிருக்கிறது. 

 

விழாவிற்கான அழைப்பிதழில், ‘பல்லவன் காணாத பளிங்கு மாளிகை! கடலோரத்தில் கற்பனைக்கு விருந்தளிக்கும் கவிதை அரண்மனை! கல்லைக் கனிவித்த மல்லைக் கடற்கரையில் உள்ளம் மகிழ்விக்கும் உன்னத திறப்பு விழா! திங்கள் முடிசூடி, தென்றல் விளையாடி, பொங்கும் கடல்பாடி, பூரிக்கும் எல்லையிலேயே தங்கும் விடுதிகள்! கலையும் அலையும் கலந்து பேசும் திருக்கடல் மல்லையில் உங்கள் காந்தக் கனவுகளின் காவியமாய் மலர்கிறது.. கால்டன் சமுத்ரா! திறந்து வைப்பவர்.. திராவிடத்தின் திசைகள் அனைத்தையும் திறந்து வைத்திருக்கும் தீரர்.. தமிழக மக்கள் தவிக்கும் போதெல்லாம் விழி மூடாமல் உழைக்கும் வீரர்.. விரலசைவில் மக்களை காக்கின்றவர்.. விழியசைவில் சேனைகளை சேர்க்கின்றவர்.. குரலசைவில் கலைஞரை குவிக்கின்றனர்.. குணஅசைவில் தாய்போல் அணைக்கின்றவர்.. மின்னலாய் ஒளிரும் மேன்மைத் தலைவர்..

 

தங்கத் தமிழகத்தின் தாய்மொழியாய்த் திகழும் எங்கள் தளபதி.. முத்தமிழ் நாட்டை முதலிடத்தில் அலங்கரிக்கும் மான்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். வண்ணத்தமிழ் கொண்டு வாழ்த்தி மகிழுங்கள்” என்று கவிபாடி அனைவரையும் அழைத்திருக்கிறார் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி.

 

 

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.