வரும் வழியில்
ஒரு காதல் தன் காதலியின் கைபிடித்து,
சாலையில் பறந்து கொண்டிருந்தது
இன்னொரு காதல்
பேருந்து நிறுத்தத்தின் நிழலில்
தன் காதலன் தோளில் சாய்ந்து
உலகை மறந்து கொண்டிருந்தது
பிறகொரு காதல்
தன் காதலி தன்னை நினைப்பதாய் நம்பி
சிரித்துக் கொண்டே தும்மியது
அடுத்தொரு காதல்
பெற்றோர் எதிர்ப்பை எண்ணி
காதலன் மடியில் விம்மியது
கடற்கரையில் ஒரு காமம்
தன்னைக் காதல் என்று சொல்லிக் கொண்டது
தனியறையில் ஒரு காதல்
காமம் மறந்து பேசிக் கொண்டது
கைபேசியில் ஒரு காதல்
கண்ணீர் விட்டுக் கெஞ்சிக் கொண்டிருந்தது
கண்ணீர் காண்டத்தை கடந்த ஒரு காதல்
கல்யாணக் கனவுகள் கண்டு கொண்டிருந்தது
கல்யாணக் காண்டத்தைக் கடந்த ஒரு காதல்
குழந்தையிடம் எரிந்து விழுந்தது
இன்னும் சொல்லாததன் கனத்தை
சுமந்து தவித்தது ஒரு காதல்
சொல்லிமுடித்து விட்ட சுகத்தில்
மிதந்து குதித்தது ஒரு காதல்
நட்புக்குள் சிக்கி
குழம்பிக் கொண்டிருந்தது ஒரு காதல்
நட்பையும் தாண்டி
துணையாய் சென்றது ஒரு காதல்
இப்படி...
வழியெல்லாம் நிறைந்திருந்த
காதல்களைக் கடந்து
தனியே நடந்து வந்த என்னை
பார்த்து சிரித்தபடியே மெல்ல விலகி
தூரம் சென்று கொண்டிருக்கிறது...
என்னுள் இருந்து
ஒரு காதல் !!!
வழியெல்லாம் காதல்...
Next Story
முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கி.மீ பயணித்த ஜி.எம். குமார்
வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி.எம் குமார். பாலாவின் அவன் இவன் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். கடைசியாக கடந்த ஆண்டு கலையரசன் நடிப்பில் வெளியான புர்கா படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
அவரது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பது அவரது வழக்கம். அதில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் அவர், தற்போது தனது முன்னாள் காதலியை பார்க்க 3500 கி.மீ பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மெட்ராஸிலிருந்து பெங்களூரு வழியாக கோவா சென்றுள்ளதாகவும் பின்பு பாம்பே சென்று மீண்டும் மெட்ராஸ் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
Drove 3500 kms to meet my ex. Madras Bangalore Goa Bombay Madras...♥️ pic.twitter.com/lUJGD5iGLH— G.M. Kumar (@gmkhighness) March 6, 2024
Next Story
மீண்டும் ஒரு ஆணவக்கொலை; சென்னையில் பயங்கரம்
சென்னை பள்ளிக்கரணையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். சல்லடையான்பேட்டை பகுதியில் சர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்த திருமணமானது நடைபெற்றது.
காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து நேற்று இரவு அந்த பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பள்ளிக்கரணை போலீசார் நடத்திய விசாரணையில் இது சாதி ஆணவப் படுகொலை என்பதை அறிந்து கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீண்டும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.