Skip to main content

"அதற்கான விலையை புதின் கொடுப்பார்": பைடன் பதில் - வெடித்த மோதல்!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

JOE BIDEN- PUTIN

 

அமெரிக்காவில் கடந்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி ஜோ பைடன் அமெரிக்காவின் அதிபராக தேர்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜோ பைடன், கடந்த ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையில், ரஷ்ய அதிபர் புதின், ஜோ பைடனை தோற்கடிக்கும் விதமாக ட்ரம்பை ஜெயிக்க வைக்க முயன்றதாக கூறப்பட்டிருந்தது.

 

இந்தநிலையில் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி அளித்த ஜோ பைடனிடம், இதுகுறித்து கேள்வியெழுப்பபட்டது. அதற்குப் பதிலளித்த ஜோ பைடன், “அதற்கான விலையை அவர் (புதின்) கொடுப்பார்” என தெரிவித்தார். மேலும், “எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கும், பிற அரசியல் எதிரிகளுக்கும் விஷம் தர உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள புதினை நீங்கள் கொலைகாரன் என நினைக்கிறீர்களா?” என கேள்வியெழுப்பப்பட, அதற்கு பைடன், “நான் அப்படி நினைக்கிறேன்” என பதிலளித்தார். 

 

அதே நேரத்தில் நவல்னிக்கு விஷம் தரப்பட்டதற்குத் தண்டனையாக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட ஏற்றுமதி கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவதாக அமெரிக்க வர்த்தகத் துறை அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, அமெரிக்காவிற்கான தனது தூதரை ஆலோசனைக்காக தலைநகர் மாஸ்கோவிற்கு அழைத்துள்ளது. அமெரிக்காவுடனான உறவில் அடுத்து என்ன செய்ய வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என ஆலோசிப்பதற்காக அவர் ரஷ்யா அழைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளிவுறவுத்துறை தெரிவித்துள்ளது.

 

இந்த விவகாரம் குறித்து பேசிய ரஷ்ய வெளிவுறவுத்துறையின் துணை அமைச்சர், “அமெரிக்கா - ரஷ்யா இடையேயான உறவு மேலும் பாதிப்பு அடைவதற்கு அவர்கள்தான் பொறுப்பு” என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்