Skip to main content

காஷ்மீர் விவகாரம்: “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மேலும் சிக்கலை உருவாக்கும்” - இம்ரான் கான்

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
Imran Khan says Supreme Court's verdict will further complicate the Kashmir issue

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும் எதிர்ப்பும் கிளம்பியது. 

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தற்போது வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை நேற்று முன் தினம் (11-12-23) வழங்கியது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கினார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இந்திய உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மேலும் சிக்கலை உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளார். இம்ரான் கான் தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கூறியதாக அவருடைய பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாஃப் கட்சி தனது பக்கத்தில் கூறியதாவது, “இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சர்ச்சைக்குரிய மற்றும் சட்டத்திற்கு புறம்பான தீர்ப்பு ஆகும். பல தசாப்தங்களாக நீடித்து வரும் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க வைப்பதற்குப் பதிலாக மேலும் சிக்கலை உருவாக்கும். 

இது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை (UNSC) மீறும் செயலாகும். காஷ்மீர் மக்களுக்கு தங்களின் தார்மீக ஆதரவு எப்போதும் இருக்கும். தங்களினுடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடன் நல்லுறவு ஏற்படுத்த முயன்றோம். ஆனால் ஆகஸ்ட் 5, 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு அது முடியாமல் போய்விட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்