Skip to main content

ஜார்ஜ் ப்ளாய்ட் கொலை: குற்றவாளிக்கு தண்டனை அறிவித்த நீதிமன்றம்... வரவேற்ற குடும்பத்தினர்!  

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

DEREK CHAUVIN

 

கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின்போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர், மினியாபோலிஸ் நகரப் போலீசாரால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு முடிவு காண வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆதரவும், ஜார்ஜ் ப்ளாய்டின் மரணத்திற்குக் கண்டனமும் தெரிவித்தனர். ட்விட்டரில் #blacklivesmatter என்ற ஹாஷ்டேக்கை பல்வேறு தரப்பு மக்கள் ட்ரெண்ட் செய்தனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக மினியாபோலிஸ் நகர நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, மினியாபோலிஸ் நகர நிர்வாகம் ஜார்ஜ் ப்ளாய்ட்டுக்கு இழப்பீடாக 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கவும் ஒப்புக்கொண்டது. இது இந்திய மதிப்பில் 196 கோடியாகும். இதற்கிடையே ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்பட்டது குறித்த வழக்கின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட டெரிக் சாவில் என்ற பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியை நீதிமன்றம் ஏற்கனவே குற்றவாளியாக அறிவித்திருந்தது.

 

இந்தநிலையில் ஜார்ஜ் ப்ளாய்ட் கொலை செய்யப்பட்ட வழக்கில், டெரிக் சாவிலுக்கு 22 வருடங்கள் மற்றும் ஆறுமாத சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. "இந்தச் சிறை தண்டனை, உங்கள் பதவி மீதான நம்பிக்கை மற்றும் அதன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததையும், ஜார்ஜ் ப்ளாய்ட்டுக்கு நீங்கள் காட்டிய கொடூரத்தையும் அடிப்படையாக கொண்டது" என நீதிபதி டெரிக் சாவிலிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பை ஜார்ஜ் ப்ளாய்ட்டின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்