Skip to main content

தனது ஜூலியட்டுக்காக 11 ஆண்டுகளாக காத்திருக்கும் ரோமியோ! தனிமையில் வாடும் ஆண் தவளை!!

Published on 13/02/2018 | Edited on 20/02/2019

பொலிவியா நாட்டில் கடந்த 11 ஆண்டுகளாக தனது இணைக்காக தனிமையில் காத்திருக்கும் தவளை கவனம் பெற்றுள்ளது. 

 

உலகிலேயே தனிமையில் இருக்கும் ஒரே தவளை என அழைக்கப்படும் இதன் இனம் அழிந்துபோவதிலிருந்து தடுக்க, அந்த ஜூலியட் வந்தே தீரவேண்டும். இதற்காக உலக வனவிலங்குகள் பாதுகாப்பு நிறுவனம், பிரபல டேட்டிங் இணையதளமான மேட்ச்.காம் மற்றும் பொலிவிய நாட்டின் ஊர்வன பாதுகாப்பு அமைப்பு இணைந்து நிதி திரட்டி வருகின்றன. செஹுவேன்காஸ் என்ற இனத்தைச் சேர்ந்த இந்த தவளைக்காக 15 ஆயிரம் டாலர் நிதியை காதலர் தினத்திற்கு முன் திரட்டவும் இந்த அணி முடிவு செய்துள்ளது. 

 

Frog

 

மேட்ச் இணையதளத்தில் இந்தத் தவளை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள தன்குறிப்பில், இதுவரை திருமணமே ஆகாதவர், குழந்தைகள் கிடையாது மற்றும் கண்டிப்பாக குழந்தைகள் பெற்றாக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும், இந்தத் தவளையின் மன ஓட்டங்களைப் பிரதிபலிக்கும் விதமாக வரும் குரல், ‘நான் ஒரு அழகான, சாதாரண பையன். நான் இரவுகளை வீட்டில் கழிக்க ஆசைப்படுகிறவன். சாப்பிடப் பிடிக்கும்; யாருக்குத் தான் பிடிக்காது? என்னைப் போன்ற தவளைக்கு இங்கு என்ன வேலை என நீங்கள் அதிசயித்திருப்பீர்கள் என உறுதியாக என்னால் கூறமுடியும். நான் என்னுடைய இணையைத் தேடி இங்கு வந்திருக்கிறேன். உங்களைப் போலவே (சோகமான குரலில்)’ விவரிக்கிறது.

 

இதுகுறித்து மேட்ச் இணையதளத்தின் செயல் அதிகாரி ஹெசம், ‘ரோமியோவுக்கான இணையைத் தேடுவது எங்களுக்கு வந்துள்ள மிகப்பெரிய சவால். ஆனால், அதன் ஒட்டுமொத்த இனமும் அழியாமல் இருக்க இதை நாங்கள் நிறைவேற்றியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

 

கடந்த சில ஆண்டுகளாக தனது இணைக்காக ரோமியோ ஏங்குவதாகவும், கூடிய விரைவில் அதற்கு அந்த வசதியை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அதன் பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்தடுத்து கரோனா தாக்குதலுக்கு ஆளாகும் அதிபர்கள்...

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

bolivian president tested positive for corona

 

பிரேசில் அதிபர் ஜேர் பொல்சோனரோவை தொடர்ந்து பொலிவியா அதிபர் ஜீனைன் ஆனெஜ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

 

உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ள நிலையில், கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.5 லட்சத்தைக் கடந்துள்ளது. பல நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ள இந்த வைரஸ், பல உலக தலைவர்களையும் அடுத்தடுத்து பாதித்து வருகிறது. லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராசின் அதிபர் ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டசுக்கு கரோனா பாதிப்பு அண்மையில் உறுதி செய்யப்பட்டது, அதனைத்தொடர்ந்து பிரேசில் நாட்டின் அதிபர் ஜேர் பொல்சோனரோவுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

 

இந்த வரிசையில் பொலிவியா நாட்டின் அதிபராகப் பதவியிலிருந்து வரும் ஜீனைன் ஆனெஜ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "எனக்கு நடந்த பரிசோதனையில் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.  நான் நலமுடன் இருக்கிறேன்.  என்னைத் தனிமைப்படுத்தி கொண்டு தொடர்ந்து பணியாற்றுவேன். 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்ட பிறகு மற்றொரு பரிசோதனை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

"தண்ணீர் பற்றாக்குறைக்கு பொதுப்பணித்துறையினரின் அலட்சியமே காரணம்" - இ.பெரியசாமி தாக்கு!

Published on 29/11/2019 | Edited on 29/11/2019


 

ஆத்தூர் தொகுதியில் குடிநீர் பஞ்சத்திற்கும் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் போனதற்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

 

 E.Periyasamy

 


திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலிருந்து மழை பெய்யும் போது பெரியாற்றின் மூலமாக வரும் மழைத் தண்ணீரானது பெரிய  கன்னிமார் கோவில் அருகே இயற்கையாகவே அமைந்துள்ள பாறாங்கற்களால் ஆன தடுப்பில் உள்ள இடுக்கின் வழியாகவும், அதற்கு மேலாகவும் வெளியேறும் தண்ணீர், கூழையாற்று தண்ணீருடன் கலக்கிறது.

பின்னர் அது ஆத்தூர் பகுதியில் உள்ள கருங்குளம், பகடைக்குளம், புல்வெட்டிக்குளம் ஆகிய குளங்களுக்கும் குடகனாறு வழியே தாமரைக்குளம், அணைப்பட்டி குளம் நிறைந்து அனுமந்தராயன்கோட்டை, பொன்னிமாந்துறை, மயிலாப்பூர், குட்டத்துப்பட்டி, ஆவாரம்பட்டி, அணைப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் விவசாய பாசனத்திற்காவும், குடிதண்ணீருக்காகவும் பயன்பட்டிருந்தது. மேலும் வக்கம்பட்டி, சீவல்சரகு, வீரக்கல், அனுமந்தராயன்கோட்டை, பித்தளைப்பட்டி ஆகிய கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இருந்து வந்தது. தற்போது சித்தையன்கோட்டை பகுதியில் சிமிண்ட் வாய்க்கால் அமைக்கும்போது பொதுப்பணித்துறையினரின் அலட்சியப் போக்கால் பாறாங்கற்கள் மீது சிமிண்ட்டினால் ஆன கலவையை கொட்டி தடுப்பணை அமைத்துவிட்டனர். 

இதனால் கடந்த ஒரு வருட காலமாக மேற்கண்ட பகுதிகளில் குடிதண்ணீர் பஞ்சமும், விவசாய பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமாக கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாய சங்க கூட்டத்தினை கூட்டுவதற்கு பலமுறை வலியுறுத்தியும் இதுநாள் வரை கூட்டம் கூட்டவில்லை. இதனை கண்டித்தும், குடிதண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் கிராம மக்கள் நலன் கருதியும் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற தி.மு.க.  உறுப்பினருமான இ.பெரியசாமி அவர்கள் சித்தையன்கோட்டை பாசன சங்க விவசாயிகள் சங்கம், ஆத்தூர் பாசன சங்க விவசாயிகள் சங்கம், தாமரைக்குளம் பாசன விவசாயிகள் சங்கம் (பொன்னிமாந்துறை, அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூர், ஆவாரம்பட்டி, அணைப்பட்டி) ஆகிய விவசாயிகளுடன் சேர்ந்து பழனி பொதுப்பணித்துறையைச் சேர்ந்த இ.இ. மற்றும் பெரியகுளம் பொதுப்பணித்துறையைச் சேர்ந்த இ.இ. ஆகியோரை அழைத்து கூட்டம் நடத்தி மேற்கண்ட அனைத்து பகுதி விவசாயிகளின் பிரச்சனைகளுக்கும் பொதுமக்களின் குடிதண்ணீர் பிரச்சனைக்கும் தீர்வுகாண மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். 

 

 E.Periyasamy



மனு கொடுத்துவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் பேசிய, திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமி, "சிமிண்ட் வாய்க்கால் கட்டும்போதே பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இப்பகுதி விவசாயிகள் பலமுறை எடுத்துக்கூறியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் ஆத்தூர் தொகுதி முழுவதும் கடுமையான குடிதண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பலமுறை நான் உட்பட விவசாய சங்கத்தினரும் பலமுறை மனுக்கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குடகனாற்று கரையோரம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது பாதிக்கப்பட்டுள்ளது. 

குளங்களில் நீர் நிரம்பாமல் குளத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை. இதனால் ஆத்தூர் தொகுதி மக்கள் கடுமையான குடிதண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் பாதிக்கப்பட்டால் நாங்கள் விவசாயிகள், பொதுமக்களை ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் எனக் கூறினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் ஆத்தூர் தொகுதி மக்கள் விவசாயிகள் நலன் கருதி கன்னிமார் கோவில் அருகே உள்ள தடுப்பணையை ஆய்வு செய்து முறையாக தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மாவட்ட ஆட்சியரின் சந்திப்பின் போது முன்னாள் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், அனுமந்தராயன்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.இன்பராஜ், ஸ்ரீராமபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜா, பொன்னிமாந்துறை விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அறிவழகன், ஆத்தூர் பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த மௌலானா, சுப்பிரமணி மற்றும் தாமரைக்குளம் பாசன விவசாயிகள் பலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும்போது உடன் இருந்தனர். இப்பிரச்சனைக்கு விரைவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீர்வு காணாவிட்டால் மாபெரும்  போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.