Skip to main content

அப்பாவி பெண்ணை ஏமாற்றிய வாலிபர்... உடனடியாக கைது செய்த காவல்துறையினர்!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

The young man who cheated on the innocent girl ... The police arrested him immediately

 

காஞ்சிபுரம் மாவட்டம் திரிசூலம் சாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி தனலட்சுமி. இவர் கடந்த மாதம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் நாட்டார் மங்கலம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு வந்தவர் கை செலவுக்குப் பணம் எடுப்பதற்காக அங்கு உள்ள இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்திற்குச் சென்றுள்ளார். தனலட்சுமிக்கு தனது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்க தெரியவில்லை. அதனால் அங்கிருந்த வாலிபரிடம் கார்டை கொடுத்து பணம் எடுத்துத் தருமாறு கூறியுள்ளார்.

 

அந்த நபர் ஏடிஎம் கார்டை போட்டுப் பார்த்துவிட்டு ஏடிஎம்மில் பணம் இல்லை என்று பொய் கூறி, அந்தக் கார்டை தனலட்சுமியிடம் திருப்பிக் கொடுத்துள்ளார். ஆனால் அன்று மாலை தனலட்சுமியின் செல்ஃபோனுக்கு அவரது வங்கிக் கணக்கில் இருந்து 51,000 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அப்போதுதான் ஏடிஎம்மில் அவர் எடுத்து தருமாறு கொடுத்த ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்து ஏமாற்றிப் பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து தனலட்சுமி செஞ்சி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் டி.எஸ்.பி இளங்கோ மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சக்தி, சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்ட போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

சம்பந்தப்பட்ட ஏடிஎம்மில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வுசெய்து, அதன்படி விசாரணை மேற்கொண்டனர். அதன்மூலம் செஞ்சி அருகில் உள்ள ரெட்டணை பகுதியைச் சேர்ந்த சோலை என்பவரது மகன், டிரைவராக வேலை பார்க்கும் அன்பு என்பவர் தனலட்சுமி கார்டை மாற்றிக் கொடுத்து, அவரது வங்கிக் கணக்கிலிருந்து 51 ஆயிரம் பணம் எடுத்ததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து மோசடி ஆசாமி அன்புவை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். நீதிமன்றத்தின் மூலம் அன்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்