!["We have to file an affidavit that we will not drink anymore" - Judge orders](http://image.nakkheeran.in/cdn/farfuture/_h8ez_c8PU-vA9OEY8HA8BHzfDyPWfy7pTaXolSrU34/1631796758/sites/default/files/inline-images/chennai-hight-court-order_3.jpg)
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர், தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் காவல் துறையினர் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி 2 பேரும் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, இந்த 2 வாலிபர்களுக்கும் மது அருந்தும் பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இந்த வழக்கே வந்திருக்காது. எனவே, மனுதாரர்கள் 2 பேரும் இனிமேல் குடிக்க மாட்டோம் எனப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்கப்படும் என்று அறிவுறுத்தினர். இதை ஏற்பதாக மனுதாரர் வழக்கறிஞர் கூறி மது குடிக்க மாட்டோம் என்று சிவக்குமார் மற்றும் கார்த்திகேயன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, பிரமாணப் பத்திரம் போதாது என்றும் ஊர் முக்கியஸ்தர்கள் யாராவது உறுதி மொழி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். உறுதி மொழி வழங்கினால் ஜாமீன் பற்றிப் பரிசீலிக்கலாம் என்று கூறிய நீதிபதி, வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.