Skip to main content

புகார் சொன்ன மாணவர்; தலைமையாசிரியரை புரட்டியெடுத்த பெற்றோர்

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

tuticorin ettayapuram government aided school incident 

 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கிழநம்பிபுரத்தில் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் குருவம்மாள் (வயது 56) என்பவர் தலைமை ஆசிரியராகவும், பாரத் (வயது 40) என்பவர் ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

 

இந்நிலையில் இந்த பள்ளியில் சிவலிங்கம் - செல்வி ஆகியோரின் மகன் பிரதிஷ் என்பவர் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர் பாரத் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுத்துள்ளார். ஆனால், வீட்டுப்பாடத்தை மாணவன் பிரதிஷ் எழுதாமல் வீட்டில் இருந்தவர்கள் எழுதிக் கொடுத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த ஆசிரியர் பரத் இதுகுறித்து மாணவனைக் கண்டித்துள்ளார். இதனை மாணவன் வீட்டில் சொன்னதால் மாணவனின் தாத்தா முனியசாமி ஆசிரியரிடம் இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

இந்நிலையில், நேற்று மதியம் பள்ளிக்கு வந்த சிறுவனின் பெற்றோர் சிவலிங்கம், செல்வி மற்றும் தாத்தா முனியசாமி ஆகிய மூவரும் ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஆசிரியர் பாரத்தை தாக்கிய அவர்கள் மூவரும் அங்கு வந்த தலைமையாசிரியர் குருவம்மாளையும் தாக்கி உள்ளனர். மேலும், ஆசிரியர்கள் இருவரையும் ஓட ஓட விரட்டி அடித்தும் காலனியாலும் தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் எட்டயபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த சம்பவம் குறித்து தலைமையாசிரியர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்தனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்