Skip to main content

ஆர்.டி.ஓ. சோதனைச் சாவடிகளில் வசூல் வேட்டை! லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Truck owners condemn for RTO Check Post

மாநில எல்லைகளில் உள்ள ஆர்.டி.ஓ. சோதனைச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, டிச. 18ம் தேதி, சேலத்தில் ஊடகத்தினரைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வந்ததில் இருந்து, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாநில எல்லைகளில் போக்குவரத்துத் துறை (ஆர்டிஓ) கட்டுப்பாட்டில் உள்ள 1924 சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டன. ஆனால், தென்னிந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் மட்டும் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் ஓசூர் அத்திப்பள்ளி சோதனைச் சாவடியில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு சரக்கு லாரிகள் செல்ல வேண்டுமெனில், வழியில் 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் கொடுக்க வேண்டியுள்ளது. 

பா.ஜ.க. ஆட்சியில் உள்ள 14 மாநிலங்களில் இத்தகைய சோதனைச் சாவடிகள் இல்லை. மற்ற மாநிலங்களில் உள்ளவற்றை அகற்ற வேண்டும் என்று கோரியும், இதுவரை அகற்றப்படவில்லை. எனவே, டிச. 25ம் தேதி முதல் மாநில எல்லைகளில் உள்ள ஆர்.டி.ஓ. சோதனைச் சாவடிகளில் பணம் செலுத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். இதையும் மீறி பணம் கேட்டு கட்டாயப்படுத்தினால், லாரிகளை அங்கேயே நிறுத்திவிட்டு தகவல் தெரிவிக்கும்படி ஓட்டுநர்களிடம் அறிவுறுத்தி இருக்கிறோம். உரிய ஆவணங்கள் இருந்தால், லாரிகளை நிறுத்தி அதிகாரிகள் பணம் கேட்கக்கூடாது. 

இந்தப் பிரச்சனையை கையில் எடுத்தது முதல், லாரிகள் மீது ஆன்லைன் மூலம் வழக்குப்பதிவு செய்வது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகள் உட்பட நாடு முழுவதும் 114 சாவடிகள் காலாவதியாகி விட்டன. அந்த சுங்கச்சாவடிகளில் பராமரிப்புக் கட்டணம் 40 சதவீதம்தான் வசூலிக்க வேண்டும். ஆனால் அங்கு முழு கட்டணம் வசூலிக்கின்றனர். ஓராண்டுக்கான சுங்கக் கட்டணத்தை, ஒரே தவணையாக மொத்தமாக செலுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. 

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் ஜனவரி மாதம் இந்திய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். தமிழகத்தில் டீசல் விலை அதிகம் என்பதால், கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்குச் சென்று எரிபொருள் நிரப்புகிறோம். இதனால் தமிழக அரசுக்கு நாளொன்றுக்கு 4 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து தமிழக முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த பேட்டியின்போது, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் தனராஜ், சேலம் மாவட்டச் செயலாளர் குமார், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

குன்னூர் பேருந்து விபத்து; ஆர்டிஓ அதிரடி நடவடிக்கை

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

Coonoor bus incident RTO action

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பர்லியாறு என்ற இடத்திற்கு அருகே சுற்றுலா பேருந்து ஒன்று கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி (30-9-2023) மாலை 6 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திலிருந்து புறப்பட்டு உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று தென்காசிக்குத் திரும்பிச் செல்வதற்காகப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

 

இதனையடுத்து இந்த விபத்து தொடர்பாக 4 பேர் மீது 3 பிரிவின் கீழ் குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதன்படி பேருந்து உரிமையாளர் சுப்பிரமணி (வயது 65), ஓட்டுநர்கள் முத்துக்குட்டி (வயது 65), கோபால் (வயது 32) மற்றும் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் (வயது 64) ஆகியோர் மீது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட சட்டப்பிரிவு 279, 337, 304 (A) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், இந்த விபத்து குறித்து காவல் துறையினருடன் இணைந்து உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர். தியாகராஜன் விசாரணை மேற்கொண்டு வந்தாரர். இந்த விசாரணையில் பேருந்தின் ஓட்டுநர் முத்துக்குட்டி பேருந்தை அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாக இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஓட்டுநர் முத்துக்குட்டியின் ஓட்டுநர் உரிமத்தை 18.10.2023 முதல் 17.10.2033 வரை என 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர். தியாகராஜன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். 

 

 

 

Next Story

ஏர் ஹாரன் ரெய்டு; தனியார் பேருந்துகளை அலறவிட்ட பெண் ஆர்.டி.ஓ

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

sound Horn Raid; The woman who screamed at the bus station is RTO

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் காதை கிழிக்கும் வகையில் ஏர் ஹாரன் அடித்துச் சென்ற தனியார் பேருந்துகளை நிறுத்தி பெண் ஆர்.டி.ஓ ஹாரன்களை கழட்ட வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தனியார் பேருந்துகள் அதிக அளவில் ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், பேருந்து நிலையத்திற்கு சென்ற மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா, பல்வேறு தனியார் பேருந்துகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

 

அப்பொழுது விதியை மீறி பேருந்துகளில் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்களை கழட்ட உத்தரவிட்டார். பேருந்து நிலையத்தில் ஒவ்வொரு தனியார் பேருந்துகளையும் சோதனை செய்து அதிலிருந்த ஏர் ஹாரன்களை கழட்ட வைத்தார். 'அடுத்த முறை வரும்போது இந்த ஏர் ஹாரனை யூஸ் பண்றத பார்த்தேன் அவ்வளவுதான்'  என எச்சரித்தார். சிலர் ஹாரனை கழட்ட மறுத்த நிலையில் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார் ஆர்.டி.ஓ ஆய்வாளர்.

 

ஏர் ஹாரன் குறித்து ஆய்வு மேற்கொள்வதை அறிந்த சில தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அவர் கண்ணில் படுவதற்கு முன்பாகவே ஹாரன்களை கழட்டிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த பெண் ஆர்டிஓ, ''பொறுமையா கழட்டுங்க. ஒன்னும் அவசரம் இல்ல. சூப்பர் வெரி குட் இப்படித்தான் இருக்க வேண்டும்' என  பாராட்டுவது போல் எச்சரித்தார்.

 

''ஏர் ஹாரன்களை வைக்கும் பொழுது வேக்கம் பிரஷர் குறைந்து பேருந்தின் பிரேக் சரியாக பிடிக்காது என தெரிந்தும் ஏன் நீங்கள் இப்படி இதை பயன்படுத்துகிறீர்கள். இது உங்கள் உயிருக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் உலை' என ஓட்டுநர்களிடம் கடிந்து கொண்டார். சில பேருந்து ஓட்டுநர்கள் ஏர் ஹாரன்களை கழட்டி பேருந்து நிலையத்திலிருந்த டீக்கடைகளில் மறைத்து வைத்திருந்தனர். அதனையும் கண்டுபிடித்த பெண் ஆர்டிஓ, அந்த ஹாரன்களைக் கைப்பற்றி தனியார் பேருந்துகளின் சக்கரத்திலேயே வைத்து ஏற்ற வைத்து நசுக்கினார். இப்படி பெண் ஆர்.டி.ஓவின் திடீர் ஆய்வால் பேருந்து நிலையத்தில் சிறிய பரபரப்பு ஏற்பட்டது.