கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் வாழும் 18 கிராம பழங்குடி இருளர் மக்களுக்கு 180 மன பட்டா வழங்கிய நிலையில் அந்த குடும்பத்தினருக்கு பட்டா வழங்கிய இடத்தை காட்டக் கோரியும், அதை பயனாளிகளுக்கு அளந்து கொடுத்து ‘அ’ பதிவேட்டில் கணக்கு திருத்தம் செய்ய கோரி பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடலூர் அம்பேத்கர் சிலை அருகில் தமிழக அரசையும், வருவாய்த் துறையும் கண்டித்து பழங்குடியினர் இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பண்ருட்டி வட்டத்தில் வாழும் பழங்குடி இருளர் சமூக மக்கள் சுமார் 250-க்கும் மேலாக குடும்பத்தோடு பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள் பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுநல இயக்கங்களும் ஆதரவு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்ட முடிவில் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த வாரத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதாக அவர் உறுதியளித்து உள்ளார். தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டனர்.