Skip to main content

"உயிரை பணயம் வச்சு படம் எடுத்துருக்கோம்" - மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்!

Published on 08/07/2022 | Edited on 09/07/2022

 

ps

 

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

 

ps

 

இந்நிலையில்  'பொன்னியின் செல்வன்' பாகம் ஒன்றின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் மணிரத்னம் ''என்னுடைய முதல் நன்றி கல்கிக்கு. நான் காலேஜ் ஆரம்பிச்சபோது அந்த புத்தகத்தை படித்தேன். அப்போது முதல்  மனசை விட்டு அது வெளியே போகவே இல்லை. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இது மக்கள் திலகம் எம்ஜிஆர் செய்திருக்க வேண்டிய படம். நாடோடி மன்னனுக்கு பிறகு இந்த படம்தான் எடுக்கப்படுவதாக இருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் நின்று போய்விட்டது. ஆனால் இன்றைக்குதான் எனக்கு புரிந்தது. எதனால் அந்த படம் நின்றது என்று. எங்களுக்காக விட்டு வைத்துவிட்டு போய்விட்டார்.

 

இதனை பலபேர் முயற்சி செய்திருக்கிறார்கள். நானே மூன்றுமுறை முயற்சி செய்தேன்.1980 மற்றும் 2000 அடுத்து 2010 ஆகிய வருடங்களில் படத்தை எடுக்க ட்ரை பண்ணினேன். எனவே இந்த படம் எவ்வளவு பெரிய ரெஸ்பான்சிபிலிட்டி என்று எனக்கு தெரியும். இதில் நடித்திருக்கக் கூடிய கலைஞர்கள், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், ஏ.ஆர்.ரஹ்மான், தோட்டா தரணி என எல்லாருடைய பங்களிப்புடன் சேர்ந்துதான் இது நிகழ்ந்துள்ளது. இல்லையென்றால் இதை என்னால் செய்திருக்க முடியாது. கரோனா காலத்தில் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இந்த படத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அதையும் தாண்டி என்னுடன் பயணித்த அனைவருக்கும் என்னுடைய நன்றி. ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றி'' என்றார்.

 

ps

 

அப்பொழுது ஏ.ஆர்.ரஹ்மான் மேடைக்கு அழைக்கப்பட்டார். மேடையில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், ''நார்மல் ஆட்களிடமிருந்து டேலண்ட்களை எப்படி வெளியே எடுப்பது என்பதை நான் மணிரத்னத்திடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன். என்னிடம் வரும் பாடகர்கள் சொல்வார்கள் எப்படி நன்றாக பாட வைத்தீர்கள் என்று கேட்டால், இவரைத்தான் சொல்வேன். இந்த படம் பற்றி சொல்லவே தேவையில்லை இது நம்ம படம். இந்தியாவுடைய படம். எனக்கு என்னவென்றால் இவ்வளவு பெரிய படத்தை இவர் ஆரம்பிச்ச உடன் எவ்வளவோ வழிகளில் இசையமைக்க வேண்டும் என்று யோசித்தோம்.ரிசர்ச்சுக்கு பாலி போனோம் . அங்கே ஒரு வாரம், இரண்டு வாரம் தங்கி அங்கு இருக்க கூடிய இன்ஸ்ட்ருமெண்ட்ஸ், கோவில்களை ரிசர்ச் செய்துவிட்டு திரும்பி வந்தோம். அதுக்குள்ள கரோனா லாக்டவுன். இவ்வளவு பெரிய, பிரமாதமான படத்தை உயிரை பணயமாக வைத்து எடுத்த எல்லோருக்கும் சல்யூட். உயிரையே பணயமாக வைத்திருக்கிறார்கள். நமக்கெல்லாம் தெரியும் நிறைய பேரை கரோனாவால் இழந்திருக்கிறோம். எல்லோருக்கும் என்னுடைய சல்யூட். எல்லா புகழும் இறைவனுக்கே. என்னுடைய இசை பிடிக்கும் என்று நினைக்கிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்