Skip to main content

‘என் கடைசி ஆசை!  காக்கிச் சட்டையோடு  புதையுங்கள்!’ -துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை !

Published on 20/03/2019 | Edited on 21/03/2019

 

 

துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த ஆயுதப்படை காவலர் சரவணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

“என்ன  ஆச்சுன்னு தெரியல.. எங்க டிபார்ட்மென்ட்ல மாசத்துக்கு ஒரு சம்பவம் இப்படி நடந்துக்கிட்டிருக்கு..” வேதனையோடு கூறினார் சென்னையில் பணிபுரியும் அந்தக் காக்கி நண்பர். 

 

police



மேலும் அவர், "போன மாசம் (பிப்.03-ஆம்தேதி) கீழ்ப்பாக்கம் ஏடிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மணிகண்டன் என்ற ஆயுதப்படைக் காவலர் தன்னுடைய துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்பட்டது. அன்று தான் அவருக்குப் பிறந்த நாள்.  சக நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அவர், அதற்குப் பிறகு இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார். 
 

இன்று  (20-03-2019) மாலை,  இங்கே நீதிபதி முரளிதரன் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சரவணன் (காவலர் எண்:51253),  தான் வைத்திருந்த எஸ்.எல்.ஆர் துப்பாக்கியின் விசையை அழுத்தி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.." என்றார்.
 

துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த ஆயுதப்படை காவலர் சரவணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னந்தலையைத் துளைத்த தோட்டா பின்னந்தலையை விட்டு வெளியேறியிருக்கிறது.  அதனால், கவலைக்கிடம் என்று மருத்துவர்கள் தெரிவித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சரவணனின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் ஆலங்குளம்  அருகிலுள்ள குருக்கள்நாடார் பட்டி ஆகும்.

 

police


 

இதனிடையே,  சரவணன்,  தன்  கைப்பட எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றை அவரது நண்பர்கள் வெளியிட்டுள்ளனர். அதில்,   ‘எனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல. எனக்கு வாழப்பிடிக்கவில்லை‘  என்று  எழுதியிருக்கிறார். பிரதிபா, செல்வா, ருத்ரன் ஆகியோரை நல்லா படிக்க வைங்க. அம்மா, அப்பா என்ன மன்னிச்சிடுங்க.  நான் இறந்ததும் எனது காக்கி உடையைக் கழற்றாமல் அப்படியே புதையுங்கள், அல்லது எரியுங்கள்’  என்று எழுதப்பட்டுள்ளது.
 

காக்கி உடையோடு என்னைப் புதையுங்கள் என்று சரவணன் எழுதியிருக்கிறார் என்றால், இந்தத் துறையை அவர் மிகவும் நேசித்திருக்க வேண்டும். அப்புறம் ஏன் 29 வயதில் இப்படி ஒரு விபரீத முடிவை எடுக்க வேண்டும்?  என்ற கேள்வி எழுகிறது. உண்மைக் காரணம் கண்டறியப்பட வேண்டும். 

 

 

 

சார்ந்த செய்திகள்