பாஜக அரசு நடைமுறைக்கு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறையை தனியார்மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும், பெட்ரோல் - டீசல் விலையைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராடிவருகின்றனர். அதேபோல் 300 நாட்களைக் கடந்தும் தலைநகர் டெல்லியில் விவசாய சங்கத்தினரின் வழிகாட்டலில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை அறவழியில் அயராது நடத்திவருகின்றனர்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி அழைப்பு விடுத்துள்ள இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழ்நாட்டில் திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இ்ந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சென்னை அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்) மாநிலச் செயலாளர் என்.கே. நடராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.