Skip to main content

ஆளுநரின் சர்ச்சை பேச்சு; வலுக்கும் எதிர்ப்புகள்

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

tamil nadu governor ravi black flag in chidambaram

 

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் சார்பில் 42 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு ரத வீதியில் உள்ள ராஜா சர் அண்ணாமலை செட்டியார் வளாகத்தில்  கடந்த 18 ஆம் தேதி ஆரம்பித்த மகா சிவராத்திரியைத் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் 22 ஆம் தேதியான நேற்று நிறைவு விழா நடைபெற்றது.

 

இவ்விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நடராஜர் ஆதி கடவுள் என்பது அனைவரும் அறிந்தது. சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை மனித படைப்புகள் பஞ்ச பூதங்களுடன் இணைந்துள்ளது. அதில் நான்கு தமிழகத்தில் உள்ளது. தமிழ்நாடு ஆன்மீகத் தலைநகரம். சனாதனத்தின் மையப்புள்ளி தமிழகம் தான். கலாச்சாரம் என்பது வாழும் இடங்களைப் பொறுத்தது அல்ல. பாரத கலாச்சாரம் என்பது சனாதன தர்ம வேரிலிருந்து வந்தது. அரசியல் காரணங்களுக்காக அதைச் சொல்ல தயங்குகின்றோம். நமது நடனமும் இசையும் இயற்கையோடு ஆன்மீகத்தோடு ஒன்றியுள்ளது. அதனைத் தவற விட்டு விடக்கூடாது. நமது கலாச்சாரத்தில் நாத்திகர்களும் உள்ளனர். அவர்களைத் தள்ளி வைக்க முடியாது. அவர்களும் ஒன்றிணைந்தது தான் பாரதம். பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா உள்ளது" எனத் தனது உரையை  முடித்தார்.

 

அதனைத் தொடர்ந்து சிதம்பரம், சென்னை, பெங்களூர், மும்பை, கடலூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமான நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொண்டு பரதம், குச்சிப்புடி, உள்ளிட்ட நடனங்களை ஆடி நடராஜ பெருமானுக்கு சமர்ப்பணம் செய்தனர். இந்த நாட்டிய விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நாட்டியத்தைப் பார்த்து ரசித்தனர்.

 

அண்மையில் 'கார்ல் மார்க்ஸின் சிந்தனை தான் ஒரு காலத்தில் இந்தியாவை சிதைத்தது' என தமிழக ஆளுநர் ரவி பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் சிதம்பரம் வந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்ட இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.

 

tamil nadu governor ravi black flag in chidambaram

 

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்ய வந்த ஆர்.என்.ரவியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெற்கு வீதியில் 30க்கும் மேற்பட்டவர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மறியல் போராட்டம் செய்தனர். மேலும், ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து கருப்புக்கொடி காட்டியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்