![students can travel with old bus pass minister vijayabasakar](http://image.nakkheeran.in/cdn/farfuture/vMDWQaWWwGzTIw9pS_XPQ1bZ3IVh5rU0XK19AeAkz8g/1610944925/sites/default/files/inline-images/th-1_370.jpg)
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் படிப்படியாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து நிறுவனங்கள், பொதுபோக்குவரது என அனைத்திற்கும் அனுமதி வழங்கின. அதே சமயத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு சார்பில் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்கலாம் எனத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து வரும் 19ஆம் தேதி முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தது. அதேநேரம் மாணவர்கள் பெற்றோர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதம் வாங்கிவர வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
அதன்படி நாளை (19/01/2021) முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க இருக்கின்றன. இந்நிலையில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள், சீருடை, பழைய பஸ் பாஸ் இருந்தால், அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.