Skip to main content

20ஆம் தேதி போராட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு   

Published on 17/03/2018 | Edited on 17/03/2018


 

anbumani ramadoss

கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி 20-ஆம் தேதி போராட்டம் என்று பாட்டாளி மாணவர் சங்கத் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் வேலையில்லாப் பட்டதாரிகள் மீது பொருளாதாரத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இளைஞர்களின் நலனுக்கு எதிரான இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கதாகும்.
 

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 80 லட்சம் பேரும், பதிவு செய்யாமல் 70 லட்சம் பேருமாக மொத்தம் ஒன்றரை கோடி பேர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும். ஆனால்,  தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்நாள் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்பைப் பெருக்க எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, தமிழக அரசுத் துறைகளில் உள்ள  பணியிடங்களை ஒழிப்பதற்காக குழு அமைத்துள்ளது. இருக்கும் பணியிடங்களாவது நேர்மையாக நிரப்படுகின்றனவா? என்றால் அதுவும் இல்லை. தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுக் களம் இந்தியாவின் பிற மாநிலத்தவருக்கும் திறந்து விடப்பட்டிருக்கிறது. பணம் கொடுப்பவர்களுக்கு தான் வேலை என்ற நிலை உருவாகியுள்ளது. மொத்தத்தில் வேலைவாய்ப்புக்களம் சீரழிக்கப்பட்டுள்ளது.
 

மற்றொருபுறம் படித்து விட்டு வேலையில்லாமல் தவிக்கும் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கடன்களை பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆப் இந்தியா ஆகிய 3 வங்கிகளும் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளன. நாடு முழுவதும் ரூ.65,000 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில், 30-35% கடன்களை, அதாவது சுமார் ரூ.20,000 கோடியை தமிழகத்தைச் சேர்ந்த 10  லட்சம் மாணவர்கள் வாங்கியிருக்கின்றனர். இந்தியா முழுவதும் வழங்கப்பட்ட கல்விக் கடனில், 3.66 லட்சம் மாணவர்கள் வாங்கிய ரூ.6364 கோடி வாராக் கடனாக மாறியிருக்கிறது. இவற்றில் பாரத ஸ்டேட் வங்கியின் ரூ.1565 கோடி வாராக்கடனில் ரூ.915 கோடி தனியார் கடன் வசூல் நிறுவனங்களிடம் விற்கப்பட்டிருக்கிறது. இதேபோல், இந்தியன் வங்கிக்கு சொந்தமான ரூ.76.49 கோடி வாராக் கடனும், பேங்க் ஆப் இந்தியாவின் ரூ.38.66 கோடி வாராக்கடனும் தனியார் கடன் வசூல் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை தமிழகம், கேரளத்தை சேர்ந்தவையாகும்.
 

படித்து முடித்தவுடன் வேலை என்ற நிலை மாறி, வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்ட நிலையில், அதற்கேற்றவாறு கல்விக்கடன் வசூல் முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதற்கு மாறாக அக்கடன்களை தனியாரிடம் விற்பனை செய்வது  மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். வாராக் கடனை வசூலிப்பதற்காக நாகரிகத்துக்கு ஒவ்வாத சாம,பேத, தான, தண்ட முறைகளை தனியார் நிறுவனங்கள் கையாளும். தினமும் தொலைபேசியில் மாணவர்களை தொடர்பு கொள்ளும் நிறுவனங்கள் மிரட்டலாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசும். வேலை கிடைக்காததால் ஏற்கனவே குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் தினமும் அவமரியாதைகளை எதிர்கொண்டு வரும் வேலையில்லாத பட்டதாரிகள், இப்போது கல்விக் கடனுக்காக தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் மரியாதைக் குறைவான நெருக்கடிகளால் அவமானமடைந்து தவறான முடிவுகளை எடுக்கக்கூடும்.
 

இத்தகைய நெருக்கடியான நிலையிலிருந்து மாணவர்களை மீட்க வேண்டிய கடமை மத்திய, மாநில  அரசுகளுக்கு உண்டு. அதிலும் குறிப்பாக மாநில அரசுக்கு அதிக பங்கு உண்டு. ஏனெனில், 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையில்,‘‘வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலையின்றி உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச் செலுத்தும்’’ என வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெற்ற அனைத்து கல்விக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்; அதற்கான தொகையை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொண்டு வங்கிகளுக்கு செலுத்த வேண்டும்.
 

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பில் வரும் 20-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, பாட்டாளி மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பாதிக்கப்பட்ட மாணவர்களும் கலந்து கொள்வார்கள். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மாமன்னன் படத்தில் நடித்தால் மட்டும் போதாது'-அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட பாமகவின் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''விளையாட்டு துறை அமைச்சர்  இன்னும் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறார். அதற்கு மேல் வளர மாட்டேன் என்கிறார். தர்மபுரியில் வந்து பேசிவிட்டு போகிறார். என்னுடைய தந்தை முதலமைச்சர்  உறுதியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சட்ட போராட்டம் நடத்துவார் என்று சொல்லியுள்ளார். உங்களுக்கும் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. முதலமைச்சர் எதுக்கைய்யா சட்ட போராட்டம் நடத்த வேண்டும். கையெழுத்து போட வேண்டும் அவ்வளவு தானே.

கையெழுத்து போடும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு மிகப்பெரிய தீர்ப்பை கொடுத்திருந்தார்கள். அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் கிடையாது. தரவுகளை சேகரித்து நீங்கள் அதை நியாயப்படுத்தி உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்பிறகு என்ன உங்களுக்கு சட்ட போராட்டம் இருக்கிறது. தரவுகள் எங்கே இருக்கிறது? தரவுகள் கம்ப்யூட்டரில் இருக்கிறது. கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். ஒரு மணி நேரமாகும். நான் முதலமைச்சராக இருந்தேன் என்றால் ஒரு மணி நேரத்தில் கையெழுத்து போட்டுவிடுவேன். தேர்தல் வந்தால் மட்டும் வன்னியர்களை பற்றி ஞாபகம் வரும்; தேர்தல் வந்தால் மட்டும் தலித்துகளை பற்றி ஞாபகம் வரும். மாமன்னன் படத்தில் நடித்தால் போதுமா? பட்டியலின மக்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டாமா? தெரிந்தால் தானே மரியாதை கொடுப்பீர்கள். இது சினிமா அல்ல இது வாழ்க்கை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டிலேயே அதிகமாக செய்த கட்சி பாமக தான்'' என்றார்.

Next Story

“அ.தி.மு.க வாக்காளர்களே..” - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Anbumani Ramadoss appeal to ADMK voters

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அந்த வகையில், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணியில் இருக்கின்ற பா.ம.க வேட்பாளரான சவுமியா அன்புமணியை ஆதரித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பாலக்கோடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “தருமபுரி தொகுதியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். சவுமியா அன்புமணி ஐ.நா சபைக்கு சென்று பெண் உரிமைகளை பற்றியும், பெண் குழந்தைகளை பற்றியும் குரல் கொடுத்தவர். எங்கே பெண்களுக்கு பிரச்சனை என்றாலும், என்னை விட அவர் தான் முதலில் சென்று இருப்பார். 

நாம் கால காலமாக திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களித்து விட்டோம். நமது வாழ்க்கை அப்படியே தான் இருக்கிறது. எந்த விடியலும் இல்லை. உணர்வுப்பூர்வமாக உங்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் அரசியல் செய்கிறோம். நல்ல முடிவை எடுங்கள். அதிமுக வாக்காள பெருமக்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். இந்த தேர்தலில் உங்களின் வாக்குகளை வீணாக்க வேண்டாம். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் வரப்போவதில்லை. பிரதமராகவும் வரப்போவதில்லை. ஆகையால் இந்த முறை எங்களுக்கு வாக்களித்து வெற்றிப் பெறச் செய்யுங்கள்” என்று கூறினார்.