காவல் நிலையத்தில் விசாரணை கைதிகள் இறப்பது தொடர்ந்து நடக்கிறது. சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் இன்று விசாரணை கைதி ராமச்சந்திரன் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார்.
![r](http://image.nakkheeran.in/cdn/farfuture/74tLj89bJbpA5WZt_BvoLHIJaxlsTt3ZBOk8L2daZmk/1558101550/sites/default/files/inline-images/Ramachandran%20pinamaaka%20copy.jpg)
சிவகாசி – பள்ளபட்டி – முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்ற பாபு. 31 வயதே ஆன இவர், மின் மோட்டார் வயர் திருடிய வழக்கிற்காக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணையின்போது, மது மற்றும் கஞ்சா போதையில் அவர் இருந்ததாகவும், லாக்கப் அறையில் தூங்க வைத்ததாகவும், இன்று காலை விசாரித்தபோது மயங்கி விழுந்ததாகவும், சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது, ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும், நடந்ததை பூடகமாக விவரித்தனர் காவல்துறையினர். ஆனாலும், இந்த மரணத்தால் மிகவும் பதற்றமாகக் காணப்படுகின்றனர்.
![k](http://image.nakkheeran.in/cdn/farfuture/VsSLu90eEwYv_FHoWuD7ql6PIUx2DW7te4pn9df1PWQ/1558101743/sites/default/files/inline-images/kakkikal%20pathatram%20copy.jpg)
இறந்தவரின் உடலை வீடியோ எடுப்பதற்கு ஊடகங்களை அனுமதிக்கவில்லை. அதனால், காவல்துறையினர் மீது சந்தேகம் வலுப்பெற்று, ஊடகவியலாளர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க, கப்சிப் ஆனார்கள் காக்கிகள். இறந்த ராமச்சந்திரன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
![k](http://image.nakkheeran.in/cdn/farfuture/otEeHjo-HK3pUXqqvqqAM10EoZxlQ2GUnbMtddivx9Q/1558101760/sites/default/files/inline-images/Sivakasi%20East%20police%20station%20copy.jpg)
காவல் மரணங்களைச் சட்டம் ஏற்பதில்லை. பாதுகாப்பை மையமாக வைத்துத்தானே காவல்துறையே இயங்குகிறது. பொதுவாக, காவல் துறை விசாரணையின் போக்கானது, ஏழைகளிடமும் பணக்காரர்களிடமும் ரொம்பவே மாறுபடுகிறது. அதனால், காவலில் மரணமடைபவர்கள் பெரும்பாலும் ஏழைகளாகவே இருக்கின்றனர்.
ஏழைகள் என்றால் விசாரணையின்போது கண்மூடித்தனமாக அடிக்கலாம் என்ற மனநிலை காக்கிகளிடம் காணப்படுகிறது. அதுவும், திருட்டு வழக்குகளில்தான் கண்மூடித்தனமாக தாக்கப்படுகிறார்கள். காவல்துறையினரைப் பொறுத்தமட்டிலும், எந்த வழக்கானாலும், அதற்கு ஒரு குற்றவாளி தேவைப்படுகிறார். அவர் குற்றம் செய்தாரோ, இல்லையோ, குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக அடிக்கின்றனர்.
ராமச்சந்திரன் மரணத்தில், , எஸ்.எஸ்.ஐ. மற்றும் தலைமைக்காவலர் என சந்தேக வளையத்திற்குள் இருவர் வருகின்றனர். எத்தனையோ லாக்கப் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதுவரை எத்தனை போலீஸ் அதிகாரிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கெல்லாம் விடையே இல்லை.
-அதிதேஜா