Skip to main content

பாலியல் புகார்: ஓய்வு பெறும் நாளில் வருவாய்நீதிமன்ற தனித் துணை ஆட்சியர் சஸ்பெண்ட்

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

பெண் பணியாளர் பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் தொடர்பாக நெல்லை துணை ஆட்சியர் ஓய்வு பெறும் நாளில் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

sdsd

 

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் நீதிமன்ற தணித் துணை ஆட்சியராக ராமசுப்பிரமணியன் பணியாற்றி வந்தார். கோவில்பட்டி பகுதியை சேர்ந்த இவர்  கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட கலால் துறை உதவி கமிஷனராக பணியாற்றினார். அப்போது இவர் மீது உதவியாளர் நிலையில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். இப்புகார் மீதான அவசரம், அவசரமாக விசாரணை நடத்தப்பட்டதில் உரிய ஆதாரங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

 

 

இதனையடுத்து சம்பந்தப்பட்ட பெண் இப்பிரச்னை தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதில், அரசு துறைகளில் பணியாற்றும் பெண் பணியாளர் அளிக்கும் பாலியல் ரீதியான புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதனையடுத்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும், கலால் துறை கமிஷனருமான (பொறுப்பு)  கிர்லோஸ்குமார் பரிந்துரையின் பேரில் இப்புகார் தொடர்பாக விசாரிக்க மாவட்ட கலெக்டர் ஷில்பாவுக்கு  உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து நெல்லை மாவட்ட விசாகா கமிட்டி தலைவரும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலருமான ஜெயசூர்யா தலைமையிலான கமிட்டியினர் இப்புகார் குறித்து விசாரணை நடத்தினார்.  இதனால் இச்சம்பவத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

விசாகா கமிட்டி விசாரணைக்கு பல்வேறு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இதனால் இக்கமிட்டி விசாரணையை அவசரம், அவசரமாக நடத்தாமல்  முறையாகவும், உரிய முறையிலும் நடத்த வேண்டும் என பெண் பணியாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

 

 

இந்நிலையில் தனித்துணை ஆட்சியர் மீதான விசாரணை நடந்து வந்த நிலையில் இன்று திடீரென ராமசுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவிட்டது. பாலியல் புகாருக்கு உள்ளான தனித் துணை ஆட்சியர் இன்று  ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி பங்கஜம் கோவில்பட்டி கோட்ட கலால் அலுவலகத்தில் டைப்பிஸ்டாக பணிபுரிந்து வருகிறார்.

 

 

 

ஓய்வு பெறும் நாளில் நெல்லை தனித் துணை ஆட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் வருவாய் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்