சென்னையில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில் குளியல் அறைகள், படுக்கை அறைகள் என 16 இடங்களில் ரகசிய கேமரா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அங்கு தங்கியிருந்த பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் விடுதியின் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆதம்பாக்கத்தில் இருக்கக்கூடிய தில்லைநகர் 4வது தெருவில் தனியாக ஒரு வீட்டில் முழு தளத்தையும் வாடகைக்கு எடுத்து அதில் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த விடுதியை கடந்த ஒரு ஆண்டாக திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவ் என்பவர் நடத்தி வந்தார். தன்னுடைய தங்கும் விடுதியில் அனைத்து வசதிகளும் உள்ளதாக கூறி இணையதளங்களிலும் விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரங்களை பார்த்து பணிகளுக்கு செல்லும் பெண்கள் அங்கு தங்கியுள்ளனர்.
கடந்த சில மாதமாக பராமரிப்பு பணி இருப்பதாக கூறி அடிக்கடி சஞ்சீவ் விடுதிக்குள் செல்வார். மேலும் குளியல் அறைகள், படுக்கை அறைகள் வரை செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
படுக்கை அறைகள், குளியல் அறைகள் வரை அவர் செல்வதை அங்கு தங்கியுள்ள பெண்கள் சந்தேகப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர் இதுபோல் வருவதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்பதை கண்டறிய முற்பட்டனர். அதேபோல் அவர்கள் குளியல் அறைகள், படுக்கை அறைகளை ஆய்வு செய்ததில் 16 கேமராக்கள் இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை விடுதியின் உரிமையாளர் சஞ்சீவ்தான் பொறுத்தியிருக்கிறார் என்பதை உறுதி செய்த அந்த பெண்கள், ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்ற போலீசார் சஞ்சீவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் வேறு எங்காவது இவர் தங்கும் விடுதி நடத்தி வருகிறாரா? இவருக்கு துணை போனது யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கைது விவகாரம் சென்னையில் மற்ற விடுதிகளில் தங்கும் பெண்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்பையன் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுந்தரமூர்த்தி. இவர் மறைவையடுத்து அவரது இரண்டு மகள்கள் அவரது மனைவி ராஜாமணி(72) வீட்டில் தனியாக வசித்து வருகிறார். ராஜாமணி கடந்த 10-ஆம் தேதி இரவு நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் நோய்க்கான மாத்திரை சாப்பிட்டுவிட்டு தூங்கி உள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபொழுது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது, அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜாமணி உள்ளே சென்று பார்த்த பொழுது தனி அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 57 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது பற்றித் தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த வீட்டில் உடைக்கப்பட்ட பீரோவில் இருந்த விரல் ரேகைகள் ஆய்வுக்கு அனுப்பிய நிலையில் அதன் முடிவில் அந்த விரல் ரேகைகள் உளுந்தூர்பேட்டையை அடுத்த கூவாகம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாரி என்கிற மாரிமுத்து மற்றும் அவருடன் சிறையில் இருந்த சரவணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த உதயா ஆகிய இருவரின் விரல் ரேகைகள் ஒத்துப்போன நிலையில் இவர்கள் இருவரையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இவர்கள் இருவரின் செல்போன் எண்களை ஆய்வு செய்ததில் தொப்பையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கடலூர் மத்திய சிறை தலைமைக் காவலர் ஞானமணி என்பவர் மாரிமுத்து மற்றும் உதயா ஆகிய இருவரிடம் அதிக அளவில் பேசியுள்ளார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கடலூர் மத்திய சிறை தலைமைக் காவலர் ஞானமணியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கொள்ளை சம்பவும் நடந்ததையும் தனது மூலம் அது நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினார்.
மாரிமுத்து மற்றும் உதயா ஆகிய இருவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் கடலூர் மத்திய சிறையில் இருந்த பொழுது ஞானமணிக்கு அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதே போல் பண்ருட்டியை அடுத்த பெரிய காட்டுபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர், எடுத்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், விருத்தாசலம் இந்திரா நகரைச் சேர்ந்த கபார்தீன், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் எனச் சிறையில் இருந்த 6 பேரும் சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு ஞானமணியுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
அப்பொழுது எந்த வீட்டில் அதிகம் பணம் இருக்கும் எங்கு சுலபமாக கொள்ளையடிக்கலாம் என்று ஆறு பேருடன் ஞானமணி ஆலோசனை நடத்திய நிலையில் 72 வயது மூதாட்டியான ஞானமணி வீட்டின் எதிர் வீட்டில் உள்ள ராஜாமணி வீட்டில் இரவு நேரத்தில் அவர் தனியாக இருப்பார் என்றும் அதனைப் பயன்படுத்தி வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் நிலம் விற்று வைத்துள்ள கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை கொள்ளையடிக்கலாம் எனவும் திட்டமிட்டுள்ளனர்.
இவர்களின் திட்டத்தின்படி கடந்த 10ஆம் தேதி இரவு சுமார் 11மணி அளவில் ஞானமணியைத் தவிர்த்து மற்ற ஆறு பேரும் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தனி அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 57 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ஞான மணியை வைத்து மாரிமுத்து உள்ளிட்ட 6 நபர்கள் செல்லும் இடங்களை அடுத்தடுத்து ஆய்வு செய்த பொழுது அவர்கள் சனிக்கிழமை இரவு கூவாகம் நத்தம் ஏரிக்கரை பகுதியில் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பங்கு பிரித்து கொண்டு இருந்த போது மாரிமுத்து உள்ளிட்ட ஆறு பேரையும் சுற்றி வளைத்தனர். அதில் மோகன்தாஸ் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் மற்ற ஆறு நபர்கள் போலீஸ் பிடியில் சிக்கினார். அவர்களிடம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் அவர்கள் 50 சவரன் தங்க நகைகளை பல்வேறு நபர்களிடம் கொடுத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 7 சவரன் தங்க நகைகளை விற்பனை செய்து வைத்திருந்த 3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணமும், அவர்கள் பல்வேறு நபர்களிடம் கொடுத்து வைத்திருந்த 50 சவரன் தங்க நகைகளையும் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட மூன்று இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து தலைமறைவாக உள்ள மோகன்தாஸை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆறு நபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்களை வைத்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சமய்சிங்மீனா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கடந்த 10-ஆம் தேதி இரவு நடைபெற்ற இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக டிஐஜி திஷாமிட்டல் உத்தரவின் பேரில் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மகேஷ் மேற்பார்வையில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசாரை கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு குறுகிய காலத்தில் குற்றவாளிகளைக் கைது செய்தும் கொள்ளைப் போன 50 சவரன் தங்க நகை மற்றும் 7 சவரன் தங்க நகைக்கான ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என்றும் இதற்காக கடுமையாக உழைத்த போலீசாரை பாராட்டுவதாகவும் கூறினார்.
தொடர்ந்து உளுந்தூர்பேட்டை பகுதியில் அதிக அளவில் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் இதற்கென்று காவல் நிலையம் அமைக்கப்படுமா என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் இது குறித்து உயர் அதிகாரிகளுடன் பேசி குற்ற சம்பவங்களைத் தடுக்க தனிப்படை அமைக்கப்படும் என கூறினார்.
நக்கீரன் அலுவலக முகவரிக்கு பெண் ஒருவரின் பெயரில், தலைநகரின் முக்கியப் பகுதியில் இருந்து ஒரு கொரியர் வந்தது. பிரித்து பார்த்த நமக்கு, அந்தக் கடிதம் இதயத் துடிப்பை அதிகரித்தது. அந்தக் கடிதத்துடன் ஒரு பெண் டிரைவும் இணைக்கப்பட்டிருந்தது. அதை சிஸ்டமில் போட்டுப் பார்த்தபோது, கடவுளாக மதிக்கும் மருத்துவர் ஒருவரின் செயல், நம்மை ஆட்டம்காண வைத்தது. அதுவும், மருத்துவமனைக்குள்ளே நடந்த அந்தச் சம்பவம் நம்மை நிலைகுலையச் செய்தது.
அந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பின்வருமாறு, இந்த பெண்ட்ரைவில், டாக்டர் சுப்பையா ஷண்முகம் மற்றும் ஆபரேஷன் தியேட்டர் செவிலியர் ஆகியோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் வளாகத்திற்குள், பாலியல் செயலில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்தச் செயலை அம்பலப்படுத்துவதன் நோக்கம் திரு.சுப்பையாவின் தொடர்ச்சியான பொருத்தமற்ற நடத்தையை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதாகும். பின்வரும் காரணங்களுக்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும் என மூன்று காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
1. மருத்துவமனை அல்லது ஆபரேஷன் தியேட்டர் வளாகத்திற்குள், வேலை நேரத்தில் பாலியல் செயல் நிகழ்ந்ததால் அது தண்டனைக்குரியது. அவர், ஏழை புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை நடக்கும்போது மேற்பார்வையிடவோ அல்லது அறுவை சிகிச்சைகள் செய்யவோ வேண்டிய நேரத்தில், இதுபோன்ற செயலில் ஈடுபட்டது அவமானகரமானது.
2. மாணவர்களுக்கு கற்பிக்கும் அரசாங்க ஆசிரியராகவும், தேசிய மாணவர் அமைப்பில் ஒரு முக்கிய நபராகவும் இருப்பதால், அவரது தவறான செயல்கள் மாணவர்களுக்கு தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும் அபாயமும் இருக்கின்றன.
3. அவர் தனது பெண் துணை ஊழியர்கள், முதுகலை மாணவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடமிருந்து, அதே பாலியல் சலுகைகளை எதிர்பார்க்கிறார். அவர் தனது அதிகாரத்தையும் அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி அவர்களை அச்சுறுத்துகிறார். சம்மதிக்க மறுப்பவர்கள் மறைமுகமாக சிக்கலை எதிர்கொள்கிறார்கள். தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர் மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார். தூய்மைப் பணியாளர்கள் முதல் உதவி பேராசிரியர்கள் வரை 16 முதல் 60 வயது வரையிலான அனைத்து பெண்களும் இவரால் பாலியல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.
அவருக்கு அறநெறி குறித்து எந்தக் கவலையும் இல்லை. அவர் கண் வைத்துவிட்டால் எந்தப் பெண்ணும் பாதுகாப்பாக இருக்க முடியாது. பெண்கள் மற்றும் மனிதகுலத்தின் நலனுக்காக, அவர் தண்டிக்கப்பட வேண்டும். தார்மீக அடிப்படையில் அவர் அரசு மற்றும் மாணவர் அமைப்பிலிருந்து, அனைத்து பதவிகளிலிருந்தும் வெளியேற்றப்பட வேண்டும். ஊடகங்கள் தங்கள் கடமையை செய்யும் என நம்புவதாக" அந்தக் கடிதம் பல ரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளது.
புற்றுநோய் நிபுணரான மருத்துவர் சுப்பையா சண்முகம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை புற்றுநோய்த்துறைத் தலைவராக பணியாற்றியவர். 2017 முதல் 2020 வரை ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யின் தேசியத் தலைவராக இருந்துள்ளார். இவருக்கும், அவர் வசிக்கும் குடியிருப்பில் இரண்டாம் தளத்தில் வசித்துவந்த மூதாட்டிக்கும் இடையே பார்க்கிங்கில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக, கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூலை மாதம் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மருத்துவர் சுப்பையா சண்முகம், மூதாட்டியின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான, சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அவர் மீது பெண்களைத் துன்புறுத்துதல், கரோனா விதிமீறல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் கைது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து.. திமுக அரசு பதிவியேற்ற பிறகு, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அதேபோல, முதலமைச்சர் வீடு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினரை சிறையில் சென்று சந்தித்த மருத்துவர் சுப்பையா சண்முகம், கீழப்பாக்கம் புற்றுநோய் பிரிவு துறைத் தலைவர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய இந்தக் கடிதம் மற்றும் வீடியோ குறித்து மருத்துவர் சுப்பையா ஷண்முகத்திடம் நாம் தொடர்புகொண்டு பேசியபோது, "அது சித்தரிக்கப்பட்டது. அதுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை. அனுப்பிய ஆள் யாரென்று விசாரித்து, முழு பின்னணியை விசாரித்து எழுதுவதுதான் பத்திரிகை தர்மம். நான் ஒழுங்கா வேலை பார்க்காட்டியும் திட்டுவேன். அதன்பொருட்டு என்னைப் பிடிக்காதவர்கள் எங்கேயாவது எதையாவது வீடியோ எடுத்து MORPH செய்து போட்டுவிடுகிறார்கள். முழு வீடியோ கிடைத்தால் சொல்லமுடியும் என்றார். அப்போது குறுக்கிட்ட நிரூபர், அந்த வீடியோ இரண்டு மணி நேரம் ஓடுகிறது. அதில் இருப்பது நீங்கள்தானே, அதேபோல சிறுநீர் கழித்த விவகாரத்திலும் உங்களது பெயர் அடிபட்டதே எனக் கேட்க, பதிலளித்த மருத்துவர் சுப்பையா ஷண்முகம், அதில் இருப்பது நான் கிடையாது. சிறுநீர் கழித்த விவகாரத்திலும் நான் சம்மந்தப்படவில்லை. நான் உங்களைப் பார்த்தது கிடையாது. வேண்டுமானால், நேரில் வாங்க பேசலாம்" என முடித்துக்கொண்டார்.