Skip to main content

அதிமுகவில் இருந்து விலகுவதற்கான காரணம் என்ன? அனிதா குப்புசாமி விளக்கம்

Published on 14/02/2018 | Edited on 14/02/2018
anitha kuppusamy

அதிமுக தலைமை கழகத்தின் பேச்சாளராக இருந்த அனிதா குப்புசாமி அரசியலில் இருந்தே சில காலம் விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை பெசண்ட் நகரில் உள்ள இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் நடவடிக்கை சரியில்லை. ஜெயலலிதா வழிகாட்டுதலுக்கு எதிராக சில செயல்கள் நடக்கிறது. அவர்கள் வழியில் இவர்கள் நடக்கவில்லை. அதனால் அதிமுகவில் இருந்து விலகுகிறேன். வேறு எந்த அணியிலும் இணையப்போவதில்லை.

பொதுவாழ்க்கையை குறித்து யார் தான் சிந்திக்கிறார்கள்? டூவிலர் கூட வாங்க முடியாத சாதாரண மக்கள் தான் பேருந்தை உபயோகப்படுத்துகிறார்கள். இந்த இடத்தில் கலைஞராக இருந்தாலும், ஜெயலலிதாவக இருந்தாலும் இதை செய்வார்களா? அனுபவப்பட்ட தலைவர்கள் அவர்கள். இப்படி பேருந்து கட்டணத்தை விலை ஏற்றுவார்களா? என்றுக்கூறி பேட்டியை முடித்தார்.

அதன் பின் குறிப்பிட்ட சில நிருபர்களிடம் பேசிய அவர்,

என் கணவர் குப்புசாமிக்கு கட்சியில் சேரும் போதே இசைக்கல்லூரி துணைமுதல்வராக பதவி தருவதாக ஜெயலலிதா என்னிடம் கூறியிருந்தார். ஆனால், அதன் பின் அவர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து, உட்கட்சி பிரச்சனைகள் ஏற்பட்டு ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தலைமையில் அணி பிரிந்தது. அதன் பின்னும் கட்சியில் தொடர்ந்து இருந்தேன். ஆனால் ஜெயலலிதா சொன்னப்படி, தற்போது உள்ளவர்கள் இசைக் கல்லூரியில் என் கணவருக்கு பதவி வழங்கவில்லை. அதனால் தான் கட்சியில் இருந்து விலகுகிறேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க. கூட்டணி; தே.மு.தி.க.வுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கீடு? 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
ADMK Alliance; Allotment of additional seats for DMDk

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது.

அதே சமயம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADMK Alliance; Allotment of additional seats for DMDk

இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தேமுதிக சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளில் தே.மு.தி.க.வும் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததால் அ.தி.மு.க. - பா.ம.க. - பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

திடீர் திருப்பம்; கூட்டணிக்கான ரூட்டை மாற்றிய பா.ம.க.?

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
sudden turn pmk has changed the route for the alliance

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளை வழங்க அ.தி.மு.க. மறுத்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதனால் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்ததால் பா.ஜ.க.வுடன் பா.ம.க. பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் கூட்டணி குறித்து முடிவெடுக்க தைலாபுரத்தில் பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள் அவசர கூட்டம் கடந்த 15 ஆம் தேதி (15.03.2024) நடைபெற இருந்த நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகக் கூறப்பட்டது. அதன்படி மயிலாடுதுறை, கடலூர், தென் சென்னை, சிதம்பரம், தர்மபுரி மற்றும் சேலம் என முக்கிய தொகுதிகளுடன் ஏழு பிளஸ் ஒன் (மாநிலங்களவை பதவி) என முடிவாக உள்ளதாகச் சொல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பா.ம.க. விரும்பும் 7 மக்களவைத் தொகுதிகளையும் ஒரு ராஜ்ய சபா பதவியையும் ஒதுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முகாம் இல்லத்தில் பா.ம.க. எம்.எல்..ஏ அருள் இ.பி.எஸ்சை திடீரென்று நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது எனத் தகவல் வெளியாகி இருந்தது. முன்னதாக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியை பாமக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.

sudden turn pmk has changed the route for the alliance

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தின் போது பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க பா.ம.க. முக்கிய பங்காற்றும் என்று அன்புமணி பேசியதாகவும் கூறப்படுகிறது.