Skip to main content

இந்தியாவிலேயே காணக் கிடைக்காத அரியவகை பறவை; கன்னியாகுமரியில் கண்டுபிடிப்பு

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
rare bird that came to Kanyakumari from abroad

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் தமிழகத்திற்கு வலசை வருவது வழக்கம். இவ்வாறு வலசை வருகின்ற பறவைகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு சரணாலயங்களுக்கு சென்று தஞ்சமடைகின்றன. இவ்வாறு வலசை வருகின்றதை கொண்டாடும் வகையில் உலக பறவைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பூமியின் வடகோளத்தை சேர்ந்த பறவைகள், அங்கு பனிப் பொழிவு தொடங்கும் போது, உணவு மற்றும் இதமான தட்பவெப்பம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும். அப்போது, உணவு மற்றும் தட்ப வெப்ப சூழல் முறையாக இருக்கும் பகுதிகளை நோக்கி பறக்க ஆரம்பிக்கும்.

இவ்வாறு இடம் பெயர ஆரம்பிக்கும் பறவைகள் இந்தியாவிற்கும் வருவது வழக்கம். அதன் பின்னர், சில மாதங்களுக்கு பிறகு வடகோளத்தில் பனிப் பொழிவு குறைந்து, பகல் பொழுது அதிகரிக்கும். அந்த சமயத்தில், இடம் பெயர்ந்து வந்த பறவைகள் அனைத்தும் மறுபடியும் அதனதன் பகுதிக்கு சென்றுவிடும். இவ்வாறு பறவைகள் வலசை வருவது சங்க இலக்கிய காலம் தொட்டு காணப்படுகிறது. இதற்கு சான்றாக பல சங்க இலக்கிய பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்திற்கு இந்தியாவில் காணப்படாத அரிய வகை பறவையொன்று வந்துள்ளது. பார்ப்பதற்கு ஆந்தை வகையைப் போல இருந்த அந்தப் பறவை தனது உடலில் காயத்தோடு ஆபத்தான நிலையில் அமர்ந்துள்ளது. இதனைக் கண்ட காகம் உள்ளிட்ட மற்ற பறவைகள் இந்த அரிய வகை பறவையை அங்கே அமரவிடாமல் துரத்தியுள்ளன. பின்னர், அங்கு வந்த அரண்மனை ஊழியர்கள் இதனைக் கவனித்துள்ளனர். உடனே காகம் உள்ளிட்ட பறவைகளை துரத்திவிட்டு, அந்த அரிய வகைப் பறவையை காப்பாற்றியுள்ளனர்.

பின்னர், இந்த அரண்மனைக்கு அருகிலேயே இருக்கும் உதயகிரி கோட்டை பல்லூயிரின பூங்காவிற்கு எடுத்துச் சென்று ஒப்படைத்துள்ளனர். அப்போது அந்தப் பறவையைப் பார்த்த பூங்காவில் உள்ள நிர்வாகிகள், இது அயல் நாட்டில் வாழ்கின்ற அரியவகை ஆந்தை இனம் எனக் கூறியுள்ளனர். அதன் பின்னர், காயத்தோடு இருந்த அந்தப் பறவைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பூங்கா ஊழியர்களிடம் கேட்ட போது, அந்தப் பறவைக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் பறக்க முடியாத நிலையில் உள்ளது. அதன் காயம் குணமாகும் வரை, அவற்றை உதயகிரி கோட்டை பல்லுயிரின பூங்காவில் வைத்து பராமரிக்க முடிவு செய்துள்ளோம். அந்தப் பறவை குணமடைந்த பிறகு அதனை திறந்து விடுவோம் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பறவை ஆர்வலர்களிடம் கேட்ட போது, பொதுவாக ஏப்ரல், மே மாதங்களின் போது பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் இந்தியாவிற்கு வருவது வழக்கம். இவ்வாறு வருகின்ற சில அரிய வகை பறவைகளை இங்குள்ள பறவைகள் கொத்தி காயப்படுத்தும் நிகழ்வுகளும் நடந்து விடும். பின்னர், இங்கு சில மாதங்கள் தங்கிவிட்டு மறுபடியும் அவைகள் வசித்த நாட்டுக்கே மறுபடியும் பறந்து விடும். இவ்வாறு பறவைகள் வலசை வந்து திரும்பும் நாளை ஆண்டு தோறும் மே, 10, 11 ஆம் தேதி உலக வலசை பறவைகள் தினமாக கொண்டாடுகின்றனர். உணவு தேடலுக்காக, தென்பகுதிக்கு சென்ற பறவைகள், வடபகுதிக்கு திரும்பும்போது, அவற்றை வரவேற்கும் விதமாக, அமெரிக்கர்கள் இந்த நாளை கொண்டாடுகின்றனர். நம் நாட்டில், வலசை வரும் பறவைகளை வரவேற்க, தனியாக எந்த நாளும் கடைபிடிப்பது வழக்கமில்லை எனக் கூறுகின்றனர்.

சார்ந்த செய்திகள்