![Public sector workers struggle demanding 13 months salary](http://image.nakkheeran.in/cdn/farfuture/f3vYms97hdH8m3CgkAKvMEIMUjCbilRG5osvrG3liC4/1595947664/sites/default/files/inline-images/dsgdgdgdgdgdg.jpg)
புதுச்சேரி பொதுப் பணித்துறையில் பணியாற்றி வரும் வவுச்சர் ஊழியர்கள், தங்களது 13 மாதம் நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி பலகட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த 22-ஆம் தேதி பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு 300-க்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள் திரண்டு, சட்டபேரவையை முற்றுகையிட முயன்றனர். அதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் வாக்கு வாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவர்களைக் கைது செய்ய முயன்றபோது போலீசாருக்கும் ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுகட்டாயமாகக் கைது செய்தனர்.
![Public sector workers struggle demanding 13 months salary](http://image.nakkheeran.in/cdn/farfuture/nFdh0FSxqtzhsgHGWdoIEVpHDVfABGFLF_Cfm6q09YI/1595947703/sites/default/files/inline-images/ryryry.jpg)
இந்நிலையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட புதுச்சேரி பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட சுல்தான்பேட்டை எம்.ஜி.ஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரைக் கண்டித்தும், அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.