Skip to main content

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு... லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை!

Published on 25/07/2021 | Edited on 25/07/2021

 

Property accumulation case against MR Vijayabaskar ... Anti-bribery action!

 

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன்படி சென்னையில் உள்ள அவரது வீட்டிலும், கரூரில் 20 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.

 

அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் 22 ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பணம் ரூபாய் 25,56,000/- மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள், நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. 

 

''எனது வீடு உள்ளிட்டவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை பழிவாங்கும் நடவடிக்கையின் முதல்கட்டம். எனக்கு கரூரிலும் சென்னையிலும் சொந்த வீடு கிடையாது. கைப்பற்றப்பட்ட பணத்திற்கு உரிய கணக்கு உள்ளது. ஆவணங்களைச் சமர்பிப்போம்'' என எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.  55 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016, 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தபோது சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளது. அதேபோல் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 ல் 2.51 கோடி ரூபாய்  சொத்து இருந்த நிலையில் 2021ல் 8.62 கோடி ரூபாய் என 55 சதவீதமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்