Skip to main content

வேட்பாளரின் பணமா? வியாபாரி கடத்தலின் பின்னணியை மறைத்த போலீஸ்...!

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேலாரணி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். அதே ஊரில் மரசெக்கு வைத்து எண்ணெய் உற்பத்தி செய்து தரும் வேலை செய்து வருகிறார். கலசப்பாக்கம், போளுர், புதுப்பாளையம் பகுதிகளில் உள்ள நிலங்களில் உள்ளுர், வெளியூரை சேர்ந்தவர்கள் பல தரப்பினரும் வந்து சீட்டு ஆடுவது வழக்கம். லட்சங்களில் பணம் வைத்து சீட்டுக்கட்டு விளையாடுகிறார்கள்.

 

saravanan


சரவணன் சீட்டு விளையாடுவார், கலசப்பாக்கம் பகுதிகளில் சீட்டு விளையாட செல்லும்போது, அங்கு சீட்டு விளையாட வரும் திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்த அப்துல்அலி என்பவரின் 30 வயதான அன்சர்அலி பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சில ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக வலம் வந்துள்ளனர்.



இந்நிலையில் ஏப்ரல் 28ந் தேதி மதியம் திருவண்ணாமலை சென்று வருவதாக குணவதியிடம் கூறிவிட்டு சென்ற சரவணன் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண் சுச்-ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இது தொடர்பாக கலசப்பாக்கம் காவல்நிலையத்தில் ஏப்ரல் 29ந் தேதி புகார் தந்துள்ளார் குணவதி.



30ந் தேதி மதியம் குணவதியின் செல்போன் எண்ணுக்கு தொடர்புக்கு கொண்ட ஒருவர், உன் கணவனை கடத்திவைத்துள்ளோம், அவனை விடவேண்டும் என்றால் ரூ. 50 லட்சம் பணம் தரவேண்டும் எனச்சொல்லி செங்கம் அருகே உள்ள புதூர் மாரியம்மன் கோயில் அருகே வரச்சொல்லியுள்ளார்கள். இந்த பெண்மணியும் 15 லட்ச ரூபாய் பணத்தோடு சென்று காத்திருந்துள்ளார்.



டி.என்.25 பி8181 என்கிற இன்னோவா காரில் வந்த இருவர் பணத்தை வாங்கிக்கொண்டு, இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் வீட்டுக்கு வருவார் எனச்சொல்லிவிட்டு சென்றுள்ளனர். அவர்கள் சென்ற ஒரு மணி நேரத்தில் மீண்டும் போன் செய்து ரூ 25 லட்சம் வேண்டும் என டிமாண்ட் செய்துள்ளார் ஒருவர். இதில் அதிருப்தியான குணவதி, தான் பணம் தந்தது, அவர்கள் பேசிய செல்போன் எண், பணம் வந்து வாங்கி சென்றவர்களின் கார் பதிவு எண் போன்றவற்றை காவல்துறையிடம் கூறியுள்ளார்.

 

saravanan


திருவண்ணாமலை எஸ்.பி., சி.பி.சக்கரவர்த்தி, டி.எஸ்.பி-கள் அண்ணாதுரை, குற்றாலலிங்கம் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனித்தனி டீம்கள் அமைக்கப்பட்டன. செல்போன் எண்கள், வண்டி எண்ணை வைத்து முகவரி, அந்த வாகனங்கள் சென்ற வழி, சிசிடிவி கேமரா என சோதனை செய்து வந்தனர். அதோடு, அவர்கள் கேட்ட தொகை செங்கம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் கொண்டு வந்து தரும்படி குணவதியிடம் கூறியுள்ளனர். அவரும் மே 1ந் தேதி பணத்தோடு அங்கு நின்றுள்ளார். அவரை சுற்றி மப்டியில் போலீஸார் இருந்துள்ளனர். டி.என் 25 பி.எல் 0023 என்கிற எண்ணுடைய காரில் ஒருவர் வந்து குணவதியிடம் பேசி பணம் வாங்கும்போது, மப்டியில் இருந்த போலீஸார் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். அவர் அன்சர் அலி என தன்னைப்பற்றி கூறியுள்ளார்.
 


அவர் தந்த தகவலின்பேரில் வேட்டவலம் அருகே சரவணனை அடைத்துவைத்திருந்ததை கண்டறிந்து காப்பாற்றினர் போலீசார். கடத்தி வைத்து இருந்த முஸ்தபா, தஸ்தகீர், இந்தியாஸ், துரைப்பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்கள், 6 செல்போன்கள், கத்தி போன்றவற்றையும், 15 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக செய்தியாளர்களிடம் எஸ்.பி., சி.பி. சக்கரவர்த்தி தெரிவித்தார்.
 


இதில் போலீஸார் மறைத்த தகவல்கள் இது என அரசியல் வட்டாரத்தில் கூறுவது. அந்த பணம் திருவண்ணாமலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளருடையது. அவர் சரவணனிடம் தேர்தலின்போது, ஓட்டுக்காக தந்துவைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணம் பற்றி தனது நண்பர் அன்சர்அலியிடம் கூறியுள்ளார். தேர்தல் செலவுக்கு தந்தது போக மீதி பணம் என்னிடம் தான் உள்ளது எனக்கூறியுள்ளார். அதனை தெரிந்துக்கொண்டே சரவணனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர். இதனை வெளியே சொல்லாமல் போலீஸ் மறைத்துள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
 


கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான கடத்தல் கும்பலில் இருந்த முஸ்தபா என்பவர், திருவண்ணாமலையில் பிரபலமான ஒரு மசூதியின் நிர்வாக குழு உறுப்பினராக இருந்துள்ளார். அவரின் குற்றச்செயல்களை அறிந்த ஜமாத்தினர், இது தொடர்பாக கேள்வி எழுப்ப சமீபத்தில் தான் அவரை பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளனர்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.