![“ONGC The news that the central government has forcibly obtained Rs. 300 crore from the company's social development fund is shocking ..! ” - P. R. Pandian](http://image.nakkheeran.in/cdn/farfuture/2gUTQXjp1onQ5PpzWO8X04KN-2asRHW57T80g5Hl_iM/1626949552/sites/default/files/inline-images/th-1_1393.jpg)
தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன், இன்று (22.07.2021) திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் அவர், “தமிழ்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வகையில் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுமான பணிக்கு ரூபாய் 9000 கோடி திட்ட மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசின் ஜல்சக்தி துறைக்கு அனுப்பியது. அவ்வறிக்கையை ஜல்சக்தி துறை அமைச்சகம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பிவைத்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை சட்டவிரோதம் என அறிவித்து நிராகரித்திட வேண்டுமென தமிழ்நாடு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆணையத்திற்கு அனுப்பிவைத்திட வேண்டும்.
ஆணையம் கூட்டத்தில் விவாதிப்பதற்கு முன்னதாக மேகதாது அணை கட்டப்படுவதால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட இருக்கிற பேராபத்தைக் கேரள அரசிடம் எடுத்துக் கூறி தமிழ்நாடு நலன் கருதி கேரள அரசு தடுத்து நிறுத்தும் வகையில் ஆணையம் மூலம் திட்ட அறிக்கையை நிராகரிக்க நமக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேரள முதலமைச்சரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.
காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்திவரும் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நிதி ரூ. 300 கோடியை மத்திய அரசு கட்டாயப்படுத்தி பெற்றுக்கொண்டதாக வெளிவரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்நிதி முழுவதும் காவிரி டெல்டாவில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு விளக்கம் கோர வேண்டும். பாராளுமன்றத்தில் இச்செயல் குறித்து விளக்கம் கேட்டு உண்மை நிலையை மக்களுக்குத் தெளிவுப்படுத்த வேண்டும்” என்றார்.