Skip to main content

புதிய மாவட்ட கோரிக்கை- அரக்கோணத்தில் கடையடைப்பு.

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

வேலூர் மாவட்டத்தை வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்டம் என மூன்றாக பிரிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த ஆகஸ்ட் 15ந்தேதி சுதந்திர தின உரையின் போது அறிவித்தார். இதற்காக மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்து கேட்பு கூட்டம் ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அரக்கோணம் நகர மக்கள் இந்த பிரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுப்பற்றி பல தரப்பினரும் இணைந்து போராட்டம், ஆர்ப்பாட்டம், கடையடைப்பு என நடத்தி வருகின்றனர்.
 

NEW DISTRICT REQUEST ARAKKONAM PEOPLES STRIKE FOR TODAY


கடந்த ஆகஸ்ட் 26- ஆம் தேதி இன்று (திங்கள்கிழமை) அரக்கோணம் நகரம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் தரப்பில் நாம் பேசியபோது, மாவட்ட தலைநகரான வேலூரில் இருந்து அரக்கோணம் நகரம் சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு போக்குவரத்து வசதி மிகவும் குறைவு. இந்த பகுதி மக்கள் வேலூர் செல்ல வேண்டுமென்றால் இரண்டு பேருந்துகளை மாறிச்செல்ல வேண்டிய சூழ்நிலையே உள்ளது. அதனால் அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டத்தை உருவாக்கி தர வேண்டும் என்பது 20 ஆண்டு கால கோரிக்கை.


நிர்வாக ரீதியாக இங்கு வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம், ரயில்வே மருத்துவமனை, ரயில்வே பணிமனை, ராஜாளி விமானப்படைத்தளம் போன்றவை அரக்கோணத்தில் உள்ளது. மாவட்ட தலைநகராக உருவாக்க பல்வேறு காரணங்கள், வாய்ப்புகள் உள்ள நிலையில், எங்கள் ஊரை தலைமையிடமாக கொண்டு மாவட்டத்தை பிரிக்காமல் ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு மாவட்டத்தை பிரித்து எங்களை அவர்களோடு சேர்ப்பதை நாங்கள் விரும்பவில்லை. அதனால் தான் அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம் என்றார்கள்.



 

சார்ந்த செய்திகள்