கோயில் நகரமான கும்பகோணத்தில் மர்மநபர்கள் வழிப்போக்கர்களிடமும், வியாபாரிகளிடமும் கைவரிசைகாட்டி வழிபறி செய்யும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.
கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடியை சேர்ந்தவர் சங்கர். மீன்வியாபாரியான அவர் இன்று அதிகாலை மீன் கொள்முதல் செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் மீன் மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறார். அவரை கொட்டையூர் அருகே இருட்டான பகுதியில் முகத்தை மூடிக்கொண்டு நின்ற 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து நிறுத்தினர். அவர்கள் முகத்தை முழுவதுமாக சங்கரால் அடையாளம் கண்டிடமுடியவில்லை.
மூன்று மர்மநபர்களும் கத்தியை காட்டி உன்னிடம் உள்ள பணத்தை கொடு இல்லையென்றால் உன் உயிரைக் கொடு என்று மிரட்டியிருக்கின்றன. சங்கர் பணத்தைக்கொடுக்க மறுத்ததால் வைத்திருந்த கத்தியால் சங்கரின் தலை மற்றும் உடலில் குத்திவிட்டு காயமடைந்த சங்கர் தரையில் மயங்கி விழுந்ததும், அவர் வைத்திருந்த 17 ஆயிரம் ரூபாய் பணத்தையும், செல்போனையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிவிட்டனர்.
அதேபோல சாமிமலையை சேர்ந்த முஹம்மது சலீம் என்பவர் காய்கறி கொள்முதல் செய்வதற்காக கும்பகோணம் தாராசுரம் காய்கனி மார்க்கெட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்திருக்கிறார். வளையப்பட்டி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவரை முதல் நிகழ்வு போலவே மூன்று பேர்கொண்ட கும்பல் முகமூடியை அணிந்துகொண்டு வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால் சரமாரியாக குத்தியும் கட்டையால் தாக்கிவிட்டும் அவரிடமிருந்த 4 ஆயிரம் பணத்தையும், செல்போனையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிவிட்டனர். தாக்குதலில் காயமடைந்த சலீமை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் .
இப்படி தொடர்ந்து நடக்கும் சம்பவத்தினால் வியாபாரிகளும், பொதுமக்களும் கும்பகோணம் பகுதியில் நடமாடுவதற்கே அச்சம் கொள்கின்றனர். வியாபாரிகளை குறிவைத்து நடந்ததா இந்த சம்பவம் பல நாட்கள் நோட்டமிட்டு நடந்ததா அல்லது புதிய கொள்ளையர்கள் உருவாகியிருக்கிறார்களா, பழைய திருடர்களின் கைவரிசையா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர் காவல்துறையினர்.