Skip to main content

கீரமங்கலம் பகுதியில் பங்குனி உத்திரத் திருவிழா - காவடிகள் எடுத்து பக்தர்கள் தரிசனம்

Published on 30/03/2018 | Edited on 30/03/2018
panguni

    

கீரமங்கலம், சேந்தன்குடி ஜெயநகரம், குளமங்கலம் ஆகிய ஊர்களில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு குளமங்கலம் பெரிய குதிரை சிலைக்கு மாலைகள் குவிந்தது. காவடி, பால்குடம் எடுத்து பக்தர்கள் காணிக்கை செலுத்தினார்கள்.


பங்குனி உத்திரத் திருவிழா :
    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பர்மா காலனி பகுதியில் உள்ள முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தி அன்னதானம் செய்தனர். அதே போல கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி ஜெயநகரம் கிராமத்தில் செயற்கை மலையின் மீது அமைந்துள்ள தென்பழனிமலை பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வாகனங்களில் வந்தனர். மேலும் பால்குடம், காவடி, போன்றவைகளை எடுத்து பக்தர்கள் காணிக்கை செலுத்தினார்கள். இரவு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கீரமங்கலம் கிராமத்தார்கள் நாட்டிய குதிரகளுடன் மேலதாளத்துடன் பட்டு, சீர் கொண்டு சென்றனர். திருவிழா முன்னிட்டு அறந்தாங்கி, பேராவூரணி, ஆலங்குடி பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.


மாலைகள் குவிந்தது :
    அதே போல கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு கோயில் முன்பு அமைந்துள்ள பெரிய குதிரை சிலைக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் காகிதப் பூ மாலைகளை காணிக்கையாக செலுத்தினார்கள். குதிரை சிலை மறையும் அளவிற்கு மாலைகள் குவிந்தது. மேலும் கரும்பில் தொட்டி கட்டுதல், காவடி, பால்குடம் போன்ற நிகழச்சிகளும் நடந்தது. கீரமங்கலம் பகுதிகளில் உள்ள அனைத்து கோயில்களிலும் அன்னதானம் நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை விழா குழுவினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலிசாரும் செய்திருந்தனர்.

சார்ந்த செய்திகள்