Skip to main content

அடுத்தவரை வெட்ட எடுத்துச் சென்ற கத்தி; அவரையே வெட்டிக் கொண்டு உயிரை விட்ட பரிதாபம்

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

 man who cut himself passed away in a dispute

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வடியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மகன் மணிகண்டன்(29). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கும் விவசாய நிலத்தில் தண்ணீர் இறைக்கும் பழைய ஆயில் என்ஜின் விற்பனை செய்ததில் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. அதன் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் மது போதையில் கோவிந்தன் வீட்டுக்குச் சென்று ஆயில் என்ஜின் விற்ற பணத்தைத் தருமாறு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் விலக்கி விட்டு அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் மணிகண்டன் மட்டும் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்துக் கொண்டு கோவிந்தனை வெட்டாமல் விடமாட்டேன் என்றபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார்.

 

அப்போது அவரது கால் தடுக்கி கீழே விழுந்ததில் அவர் கையில் வைத்திருந்த கத்தியே அவரது கழுத்தை பதம் பார்த்தது. அந்த கத்தி கழுத்தில் வெட்டியதில் மணிகண்டனுக்கு அதிக அளவு ரத்தம் வெளியேறியது. இதில் மயங்கி விழுந்த மணிகண்டனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். மணிகண்டனை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மணிகண்டனின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில் கத்தியை எடுத்துக்கொண்டு வெட்ட போனவர் அந்த கத்தியாலேயே அவரது உயிர் போன சம்பவம் வடியாங்குப்பம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்