வேறு சமூகத்து பெண்ணை திருமணம் செய்த இளைஞரை கொலை செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் காரப்பாக்கம் என்னும் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவர் அதே பகுதியில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். முரளியும், கவுசல்யாவும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர். இதில் முரளி தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் கவுசல்யாவின் உறவினர்கள் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு முரளியும், கவுசல்யாவும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தை கவுசல்யா உறவினர்கள் கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமில்லாமல் கோபமும் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக இரு வீட்டார் இடையே பிரச்சனை ஏற்படவே சோளிங்கநல்லூர் காவல் நிலையத்தில் வைத்து பேசித் தீர்வு காணப்பட்டது. இதற்கிடையே அண்மையில் கவுசல்யாவின் பெற்றோர் மனம் மாறி முரளியை ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலையில் அவர்களுடைய வீட்டிற்கு அருகேயுள்ள தேனீர் கடையில் முரளி தேனீர் அருந்தி கொண்டிருந்தார். அப்போது அரிவாளுடன் வந்த மர்மக் கும்பல் உனக்கு அவள கேட்குதா...என்று கூறி முரளியை வெட்டி கொலை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. பின்பு அங்கு அருகில் இருந்தவர்கள் சத்தம் போடுவதை பார்த்து பயந்து போன அந்த கும்பல் அங்கு இருந்து ஓடி விட்டனர். அரிவாளால் வெட்டப்பட்ட முரளி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
பின்பு தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே முரளி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கவுசல்யாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாக, தன்னுடன் பணிபுரிந்த ஒரு பெண்ணை முரளி காதலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணமாகி விடவே, கவுசல்யாவை முரளி திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு முன்னாள் காதலியுடன் முரளி தகாத உறவு வைத்திருந்ததாகவும், இதை அறிந்த அப்பெண்ணின் கணவர் கண்டித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் வேறு சமூகத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளாரா இல்லை வேறு ஏதும் காரணம் இருக்கிறதா இல்ல அப்பெண்ணின் கணவர் முரளியைக் கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது காரப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருமணம் ஆன சில மாதங்களில் கொலை செய்யப்பட்டதால் முரளியின் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.