![fire](http://image.nakkheeran.in/cdn/farfuture/boHwjg3b8oiw-wtUehYAsx_pPEt0GyRLLbEsDOUJML0/1533347650/sites/default/files/inline-images/fire%20455.jpg)
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகள் 19 வயதான நந்தினி. இவர் வேலைக்கு போக விரும்பியதால் தனது சித்தப்பா ராஜூ உள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள காக்கா தோப்புக்கு சென்றார். அங்கு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தனது சித்தப்பா வீட்டில் தங்கிக்கொண்டு தினமும் வேலைக்கு சென்று வந்தார்.
தினமும் வேலைக்கு சென்றபோது ரமேஷ் என்பவரை சந்தித்துள்ளார். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் காதலிக்கும் விஷயம் நந்தினியின் சித்தப்பா ராஜூவுக்கு தெரிந்துள்ளது. நந்தினை கண்டித்ததோடு, வெங்கடாசலத்திற்கும் விஷயத்தை சொல்லி விரைவில் நல்ல இடமாக பார்த்து திருமணம் செய்து வைத்திட வேண்டும் என்று கூறியுள்ளார்.
தனது பேச்சுக்கு நந்தினி செவிசாய்க்க மறுத்துள்ளார். இதில் கோபமடைந்த ராஜூ தான் மறைத்துவைத்திருந்த பெட்ரோலை நந்தினி மீது ஊற்றி தீ வைத்தார். இதில் நந்தினி மற்றும் ராஜூவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதில் ராஜூ குளித்தலை அரசு மருத்துவமனையிலும், நந்தினி திருச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இதுகுறித்து ராஜூ மீது குளித்தலை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நந்தினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து ராஜூவை குளித்தலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.